பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக் கழகம் அமைக்கப்படும்!

Viduthalai
2 Min Read

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஏப்.24 பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என்றார் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (24.4.2025) வெளியிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

உணர்வுபூர்வமாக எடுத்துச் சொன்ன
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
பேரவைத் தலைவர் அவர்களே, நம்முடைய சட்டப்பேரவை உறுப்பினர்கள் கு. செல்வப்பெருந்தகை, ஜி.கே. மணி, சிந்தனைச் செல்வன், வீ.பி. நாகைமாலி, இராமச்சந்திரன், டாக்டர் சதன் திருமலைக்குமார், முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இரா.ஈஸ்வரன், தி.வேல்முருகன் பின்னர், அவர்களைத் தொடர்ந்து நம்முடைய அவை முன்னவர், அதேபோல், பேரவைத் தலைவர் ஆகியோர் விதி எண் 55-அய் பயன்படுத்தி நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய பெயரால் ஓர் பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டுமென்று தங்களுடைய கருத்துகளை உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

மற்ற மாநிலங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக…
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பள்ளிகளாக இருந்தாலும், கல்லூரிகளாக இருந்தாலும், அவையெல்லாம் இன்றைக்கு வளர்ந்து, மேலோங்கி மற்ற மாநிலங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக, ஏன், உலக அளவிலே இன்றைக்குப் பாராட்டப்படக் கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கின்றன. நாட்டிலேயே முதல் இடத்திற்கு வந்திருக்கக்கூடிய அந்தக் கல்வி நிலையங்கள் எல்லாம் உருவாவதற்குக் காரணமாகப் பல்வேறு தலைவர்கள் இருந்தாலும், அவர்களிலே முக்கிய மான தலைவர்களில் ஒருவராக நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்.

தலைவர் கலைஞர் பெயரில் பல்கலைக் கழகம்!
அப்படி கல்வியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு, பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்கு, எல்லோரும் இங்கே குறிப்பிட்டிருப்பதைப்போல, பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பெயரில், விரைவில் அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருக்கக்கூடிய கும்பகோணத்திலே பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்ற உறுதியான செய்தியை எந்தவித தயக்கமுமின்றி சொல்லி நான் அமைகிறேன்.
– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *