புதுடில்லி, ஏப்.6 ‘வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றத்துக்குப் பிறகு ஆா்.எஸ்.எஸ். அமைப்பு கிறித்தவா்களின் பக்கம் தனது கவனத்தைத் திருப்ப நீண்ட காலம் ஆகாது’ என்று எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!
ஒன்றிய அரசு கொண்டுவந்த வக்ப் சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வறிக்கையின் அடிப் படையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு எதிர்க்கட்சி களின் கடும் எதிர்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறை வேற்றப்பட்டது. அடுத்தகட்டமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டதும், இந்த மசோதா சட்ட வடிவம் பெறும்.
ஒன்றிய-மாநில வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் இடம்பெறுவா்; வக்பு நன்கொடைக்கு முன்பாக நன்கொடையாளரின் பெண் வாரிசுதாரா்களுக்கு சொத்துரிமை உறுதி செய்யப்பட வேண்டும்; ரூ.1 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் வக்பு அமைப்புகள், அரசால் நியமிக்கப்படும் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமின்றி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் தொடா்ந்து எதிர்ப்புக் குரல்களை எழுப்பி வருகின்றன.
கிறித்தவர்களின்மீது
அடுத்த கவனம்
இந்த நிலையில், ‘வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றத்துக்குப் பிறகு கத்தோலிக்க கிறித்தவா்களின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள ஆா்எஸ்எஸ்’ என்று ‘தி டெலிகிராப்’ பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரையை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து, ராகுல் காந்தி நேற்று (5.4.2025) வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
நமது ஒருங்கிணைந்த கடமை
வக்பு மசோதா முஸ்லிம்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல் என்று கூறியிருந்தேன். இது முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல; வரும் காலங்களில் மற்ற சமூகத் தினா் மீதும் இதுபோன்ற தாக்குதலைத் தொடுக்க இந்த மசோதா முன்னுதாரணமாக அமைந்துள்ளது.ஆா்எஸ்எஸ் அமைப்பினரின் கவனம் கிறித்தவா்களின் பக்கம் திரும்ப அதிக காலம் ஆகாது.
இதுபோன்ற தாக்குதல்களி லிருந்து நமது மக்களைப் பாதுகாக்கும் ஒரே கவசம் அரசமைப்புச் சட்டம் மட்டும் தான். அதைப் பாதுகாப்பது நம் அனைவரின் ஒருங்கிணைந்த கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுபோல, ‘நில உரிமையில் வக்பு வாரியங்களை விஞ்சும் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்கள்’ என்ற தகவலுடன் வெளியான கட்டுரையை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட பதிவில், ‘கணித்ததுபோலவே முதலில் ஒரு சிறுபான்மையினா் குறி வைக்கப்பட்டனா். தற்போது, அடுத்தவா் மீது கவனத்தைத் திருப்பியுள்ளனா்’ என்று குறிப்பிட்டார்.