தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியது தற்போது பாதிப்பாக ஆகியுள்ளது!

Viduthalai
2 Min Read

வழிக்கு வருகிறார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு!

சென்னை, மார்ச் 29 தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியது தற்போது பாதிப்பாக ஆகியுள்ளது என்று ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார்.
அகில இந்திய ஆராய்ச்சி மாணவர்கள் உச்சிமாநாடு சென்னை அய்.அய்.டி.யில் நேற்று (28.3.2025) நடைபெற்றது. இதில், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:

தென்னிந்திய மாநிலங்களில்…

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள், 25 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தின. அதன் காரணமாக, தற்போது தென்னிந்திய மாநிலங்களில் பிறப்பு சதவிகிதம் குறைந்துவிட்டது. ஆனால், உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. குழந்தை பிறப்பு சதவீதமும் அங்கே அதிகம்.
இந்நிலையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதும் நமக்கு ஒரு
பாதிப்பாக உருவெடுத்துள்ளது. அதேநேரத்தில் உ.பி., பீகார் மாநிலங்களுக்கு அது சாதகமாக அமைந்துள்ளது. இந்த நாட்டுக்கு மிகப்பெரிய பங்களிப்பை நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் தொகை மேலாண்மையில் கவனமாக இருக்கவேண்டும். அப்படி இல்லை என்றால் நாம் வெளிநாட்டுக்குச் செல்வதுபோல் வடமாநிலத்தினர் இங்கு வந்து குடியேற நேரிடும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பால் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு, கேரளம், கருநாடகம், தெலங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநி லங்களின் முதலமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அண்மையில் சென்னையில் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புத் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தண்டனையாக அமைந்துவிடக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இத்தகைய சூழலில் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தென் மாநிலங்கள் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியது ஒரு பாதிப்பாக உருவெடுத்துள்ளதாக கவலை தெரிவித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஒன்றியத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்துகொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *