உக்ரைனுக்கு ஆதரவு: அய்ரோப்பிய நாடுகள் முடிவு

viduthalai
1 Min Read

லண்டன்,மார்ச்.4- லண்டனில் நேற்று முன்தினம் (2.3.2025) நடைபெற்ற அய்ரோப்பிய நாடுகளின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது

ரசியா-உக்ரைன் இடையே நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா ஒரு சமரச திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபருக்கு, அமெரிக்கா அழைப்பு விடுத்தது.

இதையடுத்து வாசிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது இரு தலைவர்களும் நேருக்கு நேர் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்.

இதனிடையே ரசியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கையை எப்படி முன்னெடுத்து செல்வது என்பது தொடர்பாக லண்டனில் அய்ரோப்பிய நாடுகளின் அவசர ஆலோசனை கூட்டத்துக்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஏற்பாடு செய்து இருந்தார்.

2.3.2025 அன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், இத்தாலி பிரதமர் மெலோனி மற்றும் ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து, நார்வே, போலந்து, ஸ்பெயின், கனடா, பின்லாந்து, சுவீடன், ருமேனியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் பங்கேற்றார்.இந்த கூட்டத்தில் பேசிய இங்கிலாந்து பிரதமர் கெய்ர், “உக்ரைனுக்கு நல்ல பலனை பெற்றுத்தருவது நமது கடமையாகும்.

அது இங்குள்ள ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்புக்கும் இன்றியமையாதது. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உக்ரைனுடன் இங்கிலாந்தும், பிரான்சும் இணைந்து பணியாற்றும்” என்று கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *