சென்னை, ஜன. 27- போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பயன் வழங்க ரூ.206 கோடியை குறுகியகால கடனாக போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது:
2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஓய்வு, விருப்பு ஓய்வு, உயிரிழந்த தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.206.63 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு, போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகம் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதைப் பரிசீலித்த அரசு, ஓய்வூதியர்களுக்கு பணப்பலன்களை வழங்கும் வகையில் ரூ.206.63 கோடியை குறுகியகால கடன் (டபிள்யூஎம்ஏ) என்ற அடிப்படையில் ஒதுக்கி ஆணையிடுகிறது.
இந்தத் தொகையை சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் உரியவர்களுக்கு வழங்க வேண்டும்.
2024-2025 நிதியாண்டுக்குள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.