ஏபிவிபி–க்கு இந்தத் தண்டனை எல்லாம் உறைக்குமா?

Viduthalai
3 Min Read

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஏபிவிபி மாணவர் அமைப்பினர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு மாதம் பணியாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், பல்கலைக்கழக வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நிகழ்வைக் கண்டித்தும், உரிய விசாரணை நடத்தக் கோரியும் சில கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான வன்கொடுமை விவகாரம் தொடர்பாக ஏபிவிபி மாணவர் அமைப்பைச் சார்ந்த யுவராஜ், சிறீதரன் ஆகியோர் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்தினர். அப்போது அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி உருவ பொம்மையை எரிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவர்கள் கைகளில் இருந்த உருவப் பொம்மை மற்றும் பெட்ரோல் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.

இது தொடர்பாக சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தீ அல்லது எரியக் கூடிய பொருள்களை எடுத்து வருவது உள்ளிட்ட பிரிவுகளில் யுவராஜ், சிறீதரன் ஆகியோர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இருவரும் தங்களுக்கு பிணை வழங்கக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.

காவல்துறை தரப்பில், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, உருவப் பொம்மையை எரிக்க பெட்ரோல் எடுத்து வந்து பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர்களைக் கைது செய்திருப்பதாகவும், விசாரணை நிலுவையில் இருப்பதால் பிணை வழங்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
வாதங்களைக் கேட்ட நீதிபதி, ஏபிவிபி மாணவர்களுக்கு நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டார்.

வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி வரை கல்லூரி நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றி, அது தொடர்பான அனுபவங்களை தங்கள் கைப்பட எழுதி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி மீதான வன்கொடுமைக்குக் காரண மான குற்றவாளி ஒரு சில மணி நேரத்தில் பிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். அதன் மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் சில கட்சிகள் நடத்த இருந்த போராட்டத்திற்கு, காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின்மீது சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக ஒரு கருத்தை வெளிப்படுத்தியது.
குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு, உரிய வகையில் காவல்துறை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுள்ள நிலையில், இந்தப் பிரச்சினையை அரசியலாக்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பைச் சேர்ந்த இருவர் அரசு மருத்துவ மனைக்குள் நுழைந்து, தீங்கிழைக்கும் வகையில் எளிதில் தீ பிடிக்கக் கூடிய பொருள்களை எடுத்துச் சென்று போராடுவது எந்த வகையில் சரியானது? இதுதான் ஆர்.எஸ்.எஸ். கற்றுக் கொடுக்கும் வழியா? வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிபதி குற்றவாளிகளுக்குப் பிணை வழங்கியதோடு, நாகரிகமான வகையில் தண்டனையையும் வழங்கியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸால் பயிற்சி அளிக்கப்பட்டவர் களுக்கு இதெல்லாம் உறைக்குமா என்பது கேள்விக்குறியே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *