கல்வி : திராவிட மாடலும், ஹிந்துத்துவா மாடலும்

Viduthalai
3 Min Read

இந்தியா முழுவதும், 2019 ஆம் ஆண்டை விட, 2024 ஆம் ஆண்டில், பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தாமல், நடுநிலை-உயர்நிலைப் பள்ளிகளில் தொடர்ந்து படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு மாபெரும் சாதனை படைத்துள்ளது. இது திராவிட மாடல் அரசின் விலை மதிப்பற்ற பெருஞ் சாதனை!
தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பை இடையில் விடும் மாணவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் கல்வி அமைச்சக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பைத் தொடங்கிய 100 சிறுவர்களில் நடுநிலைப்பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் 2019இல் 99 பேர் என்பது 2024இல் 100 பேர் என உயர்ந்துள்ளது. அதேபோல, சிறுமியர் எண்ணிக்கை, 97.5இல் இருந்து 100 ஆக 2024-இல் அதிகரித்து இடையில் படிப்பை விடுவோர் தமிழ்நாட்டில் இல்லை என்பது திட்டவட்டமாகத் தெரிந்து விட்டது.
அதேபோல, தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் 2019-இல் 81.3 என இருந்தது 2024-இல் 89.2 ஆக உயர்ந்துள்ளது. மாணவிகளைப் பொறுத்தவரை 2019-இல் 89.4 விழுக்காடாக இருந்தது 2024-இல் 95.6 விழுக்காடாக அதிகரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் நிலை என்ன?
பீகார் மாநிலத்தில் பள்ளிப் படிப்பைத் தொடங்கிய 100 மாணவர்களில் நடுநிலைப்பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் 2019-ஆம் ஆண்டில் 78.6 விழுக்காடாக இருந்தது 2024-இல் 65 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. மாணவிகளைப் பொறுத்தவரை 2019-ல் 81.1 விழுக்காடாக இருந்தது 2024-இல் 65.4 விழுக்காடாக குறைந்து பள்ளிப் படிப்பைவிட்டவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாயிற்று.
பீகாரில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்கள் எண்ணிக்கை 51.2 விழுக்காடு என்பது 38.8 விழுக்காடு என 12.4 சதவிகிதம் குறைந்து இடை நிற்றல் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்பதை வெளிப்படுத்துகிறது. அதேபோல மாணவிகளைப் பொறுத்தவரையிலும், மேல்நிலைப்பள்ளிப் படிப்பில் 2019-இல் 51.6 விழுக்காடாக இருந்தது 2024-இல் 9.3 விழுக்காடு குறைந்து அதாவது 42.3 விழுக்காடாகக் குறைந்து பள்ளிப் படிப்பை இடையில் விடுபவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.

அசாம் மாநிலத்தைப் பொறுத்தவரை, பள்ளிப் படிப்பைத் தொடங்கிய 100 மாணவர்களில் நடுநிலைப்பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் 2019-ஆம் ஆண்டில் 93.4 விழுக்காடாக இருந்தது 2024-இல் 82.6 விழுக்காடாக வீழ்ச்சியடைந்தது. மாணவிகளைப் பொறுத்தவரை 2019-இல் 96.7 விழுக்காடாக இருந்தது 2024-இல் 88.7 சதவிகிதமாகக் குறைந்து பள்ளிப் படிப்பைவிட்டவர்கள் எண்ணிக்கை மிக அதிகமாயிற்று.
மேல்நிலைப்பள்ளிப் படிப்பைப் பொறுத்தவரை 2019-இல் மாணவர்கள் எண்ணிக்கை 62.6 என்பது 2024-ல் 57.4 விழுக்காடாகவும்; மாணவிகள் எண்ணிக்கை 64.6 விழுக்காடு என்பது 63.7 விழுக்காடாகவும் குறைந்துவிட்டது.
அரியானா மாநிலத்தை பொறுத்தவரை, பள்ளிப் படிப்பைத் தொடங்கிய 100 மாணவர்களில் நடுநிலைப்பள்ளி படிப்பை முடித்தவர்கள் 2019-ஆம் ஆண்டில் 98.3 விழுக்காடு என்பது 2024-இல் 93 விழுக்காடாகவும் மாணவிகளைப் பொறுத்தவரை 2019-இல் 97.7 விழுக்காடு என்பது 2024-இல் 95.6 விழுக்காடாகவும் குறைந்து பள்ளிப் படிப்பைவிட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேல்நிலைப்பள்ளி படிப்பை பொறுத்தவரை 2019-இல் மாணவர்கள் எண்ணிக்கை 82.6 என்பது 2024-இல் 77.3 விழுக்காடாகவும் குறைந்து விட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில், பள்ளிப் படிப்பைத் தொடங்கிய 100 மாணவர்களில் நடுநிலைப்பள்ளி படிப்பை முடித்தவர்கள் 2019-ஆம் ஆண்டில் 91.2 விழுக்காடு என்பது 2024-இல் 84.8 விழுக்காடாகி விட்டது. மாணவிகளைப் பொறுத்தவரை 2019-இல் 90.8 2024-இல் 86.6 விழுக்காடாகவும் வீழ்ச்சியுற்றது. பள்ளிப் படிப்பைவிட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பீகார், அசாம், அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பள்ளிப் படிப்பை இடையில் விடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவையெல்லாம் பி.ஜே.பி. ஆளும் மாநிலங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் பள்ளிப் படிப்பில் சேரும் குழந்தைகள் அனைவரும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காகச் செயல்படுத்தி வரும் காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் திட்டம் மாற்றுத் திறனாளி மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்தும் திட்டம், முதலிய திட்டங்களால்தான் குழந்தைகள் பள்ளிக் கல்வியில் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து ஆர்வத்துடன் படிப்பதில் ஊக்கமும் உற்சாகமும் அடைகிறார்கள் என்பது ஒன்றிய அரசின் கல்வி அமைச்சக (UDISE+) ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
நினைவூட்டுகிறோம்; இந்தப் புள்ளி விவரங்களை வெளியிட்டது ஒன்றிய பிஜேபி அரசு.
புரிந்து கொள்வீர் ‘திராவிட மாடல்’ அரசுக்கும் ‘ஹிந்துத்துவா மாடல்’ அரசுக்கும் உள்ள வேறுபாட்டை!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *