கைத்தடி

viduthalai
1 Min Read

தூங்கிய தமிழரை தட்டி எழுப்பி
திராவிட ராக்கிய தந்தையின் கைத்தடி
அடிமை விலங்குகளை எல்லாம்
உடைத் தெறிந்த பெரியாரின் கைத்தடி

தலை குனிந்துழன்ற எளியோரை
தன்மானத் தோடு நிமிர்த்திய கைத்தடி
நாற் சந்தில் நின்ற நலிந்தோர்க்கு
நற் பாதை காட்டிய வழிகாட்டி

அறியாமை இருள் அடியோடு போக்கிய
அறிவாசானின் அடையாளமான கைத்தடி
ஏணியாய் நின்று ஏதிலியார் எல்லாரையும்
ஏற்றிக் காத்த பெரியாரின் கைத்தடி

எங்கள் ஆட்சி எம் தந்தை
தங்களுக்கே என்று சொன்ன அண்ணா
தலைவர் நெஞ்சில் தைத்த முள்ளை
கலைஞர் அகற்றினார் அவர் வழியில்

வைக்கத்து வெற்றி நூற்றாண்டு விழா
வைக்கத்தில் பெரியார் நினைவகமும் நூலகமும்
வையத்தாருக்கு வழங்கிய நம் முதல்வருக்கு
வைக்கம் வீரரின் கைத்தடி பரிசானது

போதும் இது போதும் இதனினும்
பெரிய பரிசேதும் இனி உண்டோ
பேசவும் இயலாது பெருமிதத்தால் பூரித்துப்
பொங்கிய மகிழ்வோடு நின்ற மாட்சி

திராவிட மாடல் எதுவென்று ஏகடியம்பேசித்
திரிந்தோர்க்கு இதுதான் அந்த ஒப்பிலா
திராவிடம் என ஓங்கி முழங்கிய நாள்
இவர்தாம் பெரியார் என்றுணர்த்திய நாள்

இது நினைவு நாளல்ல இது எழுச்சிநாள்
புதுப் புனல் பாய்ச்சிய புரட்சி நாள்
நன்னன் குடியிலிருந்து
அவ்வை தமிழ்ச்செல்வன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *