கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் 52 ஆயிரம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

viduthalai
2 Min Read

சென்னை,டிச.24- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் சென்னை, சிட்கேடா தலைமை அலுவலகத்தில் மாவட்ட தொழில் மய்யம் மேலாளர்களின் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

தொழில் முனைவோர்

“கடந்த 3 1/2 ஆண்டு காலத்தில் எம்எஸ்எம்இ (MSME) துறையில் ரூ.1805 கோடியே 31 லட்சம் மனியத்துடன், ரூ.4601.76 கோடி கடன் உதவி அளிக்கப்பட்டு 52 ஆயிரத்து 128 புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். சிறப்பாக செயல்பட்ட மாவட்ட தொழில் மய்யம் மேலாளர்களுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 5 வகையான சுய வேலைவாய்புத் திட்டங்களின் கீழ் தாழ்த்தப்பட்டோர், மகளிர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை, சில மாவட்டங்கள் எய்தாமல் உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவற்றுடன் இணைந்து, மூலமாக தொழில் முனைவோர் பட்டியல்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

சிறப்பு முகாம்கள்

முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி கள் திட்டத்தில் நிலுவையில் உள்ள விண்ணப் பங்களை விரைந்து பரிசீலிக்க வேண்டும். அண்மையில் அறிவிக்கப்பட்ட கலைஞர் கைவினைத் திட்டம் என்ற புதிய திட்டத்தை கைவினைக் கலைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கைவினைத் கலைஞர்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள கலைஞர் கைவினைத் திட்டத்தில் உள்ள சிறப்பு அம்சங்களை எடுத்துக் கூறி, அவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்று, கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கிகளுக்கு அனுப்பப்படும் கடன் விண்ணப்பங்களை மாவட்ட பொது மேலாளர்கள் கண்காணிக்க வேண்டும். வங்கியாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்புக்கு மானியம் வழங்கும் PMFME திட்டத்தை விரைவு படுத்த வேண்டும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் எம்எஸ்எம்இ (MSME) துறையினால் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 42 விழுக்காடு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதர ஒப்பந்தங்ளை மூன்று மாத காலத்திற்குள் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். அதற்கு வேண்டிய உரிமங்களை பெற்றுதர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிங்கிள் விண்டோ இணையதளத்தில் வரும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலனை செய்து, அனைத்து விண்ணப்பங்களுக்கும் உரிய நேரத்தில் அனுமதி பெற்றுதர வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் அதுல் ஆனந்த், தொழில் வணிக ஆணையர் நிர்மல்ராஜ், கூடுதல் ஆணையர் சிவ சவுந்திரவள்ளி, மற்றும் துறை உயர் அலுவலர்கள், மாவட்ட தொழில் மைய பொது மேலளாளர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *