மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு செய்வோம் என்பதா? ஒன்றிய அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம்!

viduthalai
1 Min Read

சென்னை, டிச.24- மும்மொழிக் கொள்கையை ஏற்க ஒன்றிய அரசு நிர்பந்திப்பதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புகார் தெரிவித்துள்ளார்.

நிர்ப்பந்தம்

பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்குவது குறித்து ஒன்றிய அரசு நிர்பந்தம் என குற்றம் சாட்டி, மும்மொழிக் கொள்கையை ஏற்றால் அரை மணி நேரத்தில் நிதி அளிக்கப்படும் என கூறுவதாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீது அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி திருவள்ளூவர் சிலை 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் அண்ணா நூலகத்தில் ஓவிய கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஓவிய கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று (23.12.2024) திறந்து வைத்தார்.

அதன்பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: பள்ளிக்கல்வித்துறை இணையதளத்திற்கு கட்டணம் செலுத்தவில்லை என்பது தவறு.

நிதி ஒதுக்கீடு

மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்பு கட்டணங்களை நிலுவை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒன்றிய அரசுதான் நிலுவை வைத்துள்ளது. அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க தடை போடுகிறார்கள். மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்தம் செய்கிறது. மும்மொழி கொள்கையை ஏற்றால் பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை அரை மணி நேரத்தில் ஒதுக்குகிறோம் என ஒன்றிய அரசு கூறுகிறது.

மாநிலப் பட்டியலில் கல்வி

கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால் நம் மாணவர்கள் எது தேவையோ அவற்றை முழுமையாக செய்ய முடியும், நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால்தான் தொடர்ச்சியாக கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். ஒன்றிய அரசுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா மட்டுமே நமக்கு வழங்கப்படுகின்றது. அந்த 29 பைசாவை வைத்துக் கொண்டு என்ன செய்வது. இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *