ஜெய்ப்பூர், டிச. 21- ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த சூழலில், சமீப காலமாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவர், கோட்டாவில் உள்ள ஒரு பயிற்சி நிறுவனத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். நேற்று (20.12.2024) இரவு சக மாணவர்கள் அந்த மாணவரின் அறைக் கதவை வெகு நேரமாக தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள் மற்றும் விடுதியின் காவலர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்துப் பார்த்தபோது மாணவர் மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. உடனடியாக காவல்துறையினர் மாணவரின் உடலை மீட்டு உட்ற்கூராய்வுக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் மற்றும் தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோட்டாவில் நடப்பாண்டில் அரங்கேறியுள்ள 16ஆவது தற்கொலை நிகழ்வு இதுவாகும். கடந்த ஆண்டு கோட்டா நகரில் 26 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.