மேலூர், டிச.18- மேலூர் அருகே நேற்று (17.12.2024) இரவு கூடிய அரிட்டாபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு ரத்து செய்யும் வரை, மலை மீது அமரும் தொடர் போராட்டத்தை திடீரென தொடங்கினர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி, நாயக்கர் பட்டியில் வேதாந்தா நிறுவனத்தின் கிளை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளித்தன.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மலைமீது அமர்ந்து போராட்டம்
இதற்கிடையே பல்வேறு அரசியல் கட்சிகளும் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கப் பிரச்சினையில் மக்களுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று (17.12.2024) இரவு அரிட்டாபட்டியில் கூடிய கிராம மக்கள், அருகில் உள்ள மற்ற கிராமங்களில் வசிக்கும் மக்களுடன் இணைந்து டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்யும் வரை தொடர் போராட்டம் நடத்துவது குறித்து, ஆலோசனை நடத்தினர்.
இதன் முடிவில், நாள்தோறும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மலை மீது அமர்ந்து போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்தனர்.
இதன்படி முதற்கட்டமாக பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து தங்கள் போராட்டத்தை நேற்றிரவு மலை மீது ஏறி அமர்ந்து நடத்தினர். இப்போராட்டம், சுரங்கத்திற்கான அனுமதி ரத்து செய்யப்படும் வரை தொடரும் என, கிராம மக்கள் தெரிவித்தனர்.