புயல் நிவாரண நிதிக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது

viduthalai
1 Min Read

சென்னை, டிச.14 தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம். கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமது சட்டப் பேரவை உறுப்பினருக்கான ஒரு மாத ஊதியத்தை ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 5.12.2024 அன்று தலைமைச் செயலகத்தில், அரசு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தத்திடம் வழங்கினார். மேலும், திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

அதன்படி, துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், அரசு தலைமைக் கொறடா, திராவிட முன்னேற்றக் கழக சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆகியோரின் ஒரு மாத ஊதியமான 1 கோடியே 30 இலட்சத்து 19 ஆயிரத்து 750 ரூபாய்க்கான வங்கி வரைவோலைகள்/காசோலைகளை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் முதலமைச்சரிடம் வழங்கினார். இந்நிகழ்வின்போது, அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன் உடனிருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *