தமிழ்நாட்டில் இருக்கின்ற தி.மு.க. கூட்டணியை குலைக்கலாம் என்று நினைக்கின்றார்கள். கூட்டணியை, கூத்தணி ஒருபோதும் மறைக்க முடியாது.
இது கூட்டணி; அது கூத்தணி!
கூத்து வேறு; கூட்டு வேறு; தி.மு.க. கூட்டணி என்பது பதவிக்காக அல்ல நண்பர்களே, கொள்கைக்காக என்பதுதான் மிகவும் முக்கியம்.
இதனுடைய வேர் எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. 82 ஆண்டுகால பொதுவாழ்வில், என்னுடைய அனுபவத்தின் காரணமாக உங்களுக்குச் சொல்கிறேன் – முதல் தேர்தல் தொடங்கி, கடைசியாக நடை பெற்ற தேர்தல் வரை பார்த்தவன் நான். சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என்று எல்லா தேர்தல்களையும் பார்த்தவன் நான்.
அதற்கு முன்பாக, முதல் தேர்தலுக்கு முன், பச்சைப் பெட்டி, மஞ்சள் பெட்டி வைத்த தேர்தலையும் பார்த்தவன் நான். எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சி அவர்கள் எங்கள் ஊரில், கழக ஆதரவோடு சுயேச்சையாக நின்றார். அப்பொழுது நான் மாணவன்.
ஆகவே, தேர்தல் வேலை செய்த கணக்கில் ஒரு ப்ளஸைப் போட்டுக் கொள்ளுங்கள்.
பல தேர்தல்களில் திராவிடர் கழகம் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றது. ஆனால், நாங்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை, பின்னாளில் நாங்கள் திருத்திக் கொள்கிறோம்; வருத்தப்படுகின்றோம் என்று ஒருபோதும் அறிவிக்காத ஓர் இயக்கம் என்றால், அது திராவிடர் கழகம் ஒன்றுதான். காரணம், தந்தை பெரியாருடைய தொலைநோக்குதான். அந்தத் தொலைநோக்கோடு இருக்கக் கூடியவர்கள் நாங்கள்.
திராவிட இயக்கம் என்பது நேற்று பெய்த மழையில், இன்றைக்கு முளைத்த காளானா? அல்லது கிள்ளுக்கீரையா?
திராவிட இயக்கத்தை அப்படி மைனஸ் ஆக்கிவிடலாம் என்றால், வகுத்துப் பார்த்தாலும் சரி, உங்களுக்குக் கணக்குத் தெரியவில்லை என்று அர்த்தமே தவிர, ஒருபோதும் திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது.
காரணம் என்னவென்றால், தேர்தல் இயக்கத்தினுடைய தத்துவமே வேறு. அதை உங்களுக்குச் சொல்லிக் கொடுப்ப வர்களோ, எழுதிக் கொடுப்பவர்களோ உங்களுக்குச் சொல்லவேயில்லை.
இது வசனம் பேசுகின்ற மேடை யல்ல; கொள்கையைப் பேசுகின்ற மேடை என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், ஒன்றை உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன், அடுத்த தேர்தலைப்பற்றி கவலை அரசியல்வாதிகளுக்கு! ஆனால், எங்களுக்கு அடுத்த தலை முறையைப்பற்றித்தான் கவலை. திராவிட இயக்கத்தின் வேர் அங்கேதான் உள்ளது.