கலவரப் பகுதியை பார்வையிட ராகுல் உட்பட ஆறு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணம்
புதுடில்லி, டிச.4 உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் சமீபத்திய வன்முறையை தொடர்ந்து அங்குள்ள நிலைமையை மதிப்பிடு வதற்காக ராகுல் காந்தி உள்ளிட்ட உ.பி. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (3.12.2024) பயணம் மேற் கொள்கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் நகரில் முகலாயர் கால மசூதி உள்ளது. இதில் கடந்த 24-ஆம் தேதி இந்திய தொல்லியல் துறை கள ஆய்வு மேற்கொண்டபோது அங்கு வன்முறை வெடித்தது. இந்து கோயிலை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கள ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சம்பல் வன்முறை, கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற் பட்ட காவல்துறையினர் உட்பட பலர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் சம்பல் வன்முறைக்கு பிறகு அங்கு நிலைமையை மதிப்பிடுவதற்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட உ.பி. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரும் நேற்று சம்பல் செல்கின்றனர். இவர்களுடன் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தியும் இணைந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறினார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மதியம் 2 மணிக்கு சம்பல் சென்றடைவார்கள் என்று மாநில காங்கிரஸ் நிர்வாகி சச்சின் சவுத்ரி கூறினார்.