தென்னிந்தியாவிலேயே முதன் முதலில் திருமுடிவாக்கம் சிட்கோ தொழில்பேட்டையில் நவீன தொழில்நுட்ப மய்யம்

Viduthalai
2 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, நவ.23- தென்னிந்தி யாவில் முதன்முறையாக திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற் பேட்டையில் நவீன தொழில்நுட்ப மய்யத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

‘மெகா கிளஸ்டர்’ திட்டம்
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் புரிபவர்கள் பன்னாட்டு தொழில் சந்தையில் போட்டியிட அவர்களின் உற்பத்தி திறன் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், வளர்ந்து வரும் தொழில் பிரிவிற்குள் நுழைய வழி வகை செய்யவும், தமிழ்நாட்டில் 5 இடங்களில் சுமார் ரூ.100 கோடி யில் மெகா கிளஸ் டர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப் பட்டது.
அதன்படி, தானியங்கி வாகனங்கள், எந்திரங்கள், மின் மற்றும் மின்னணு உபகரணங்களில் பயன்படுத்தப்படும் துல்லிய பொறியியல் பாகங்களை உருவாக்கும் மய்யமாக கருதப்படும் சென்னை மண்ட லத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் தொழில்முனை வோர் கூட்டமைப் பினருடன் இணைந்து ரூ.47.62 கோடி மதிப்பீட்டில் ரூ.33.33 கோடி அரசு மானியத்துடன் துல்லிய உற்பத்தி பெருங்குழுமம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.
இப்பெருங்குழும திட்டத்தின் முதல் பகுதியாக ரூ.18.18 கோடி மதிப்பீட்டில் ரூ.13.33 கோடி மானியத்துடன் வடிவமைப்பு மய்யம், மறு பொறி யியல் பரிசோதனைக் கூடம், சேர்க்கை உற்பத்தி மய்யம், மேம்பட்ட பயிற்சி மய்யம், காப்புரிமை பதிவு வசதி மய்யம், நவீன பரிசோதனை மய்யம் போன்றவை நிறுவப்பட்டன. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (22.11.2024) திறந்துவைத்து பார்வையிட்டார்.

இளம் தலைமுறை பொறியாளர்கள்
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 14-க்கும் மேற் பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தொழிற்பேட்டை சங்கத்தினரால் இணைந்து உருவாக்கப்பட்ட சிறப்பு நோக்கு ஊர்தி மூலம் அரசு மானியத்துடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் பொது வசதிகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், ‘ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், இளம் தலைமுறை பொறியாளர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பயன்படுத்தி பயன்பெறலாம்.

தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்த துல்லிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மய்யத்தின் பொதுவசதிகளை சென்னை மாவட்டத் தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களும், திருமுடிவாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,000 தொழில் நிறுவனங்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தி. மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர். ராஜா, கருணாநிதி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் அதுல் ஆனந்த், ‘சிட்கோ’ மேலாண்மை இயக்குநர் கார்த்திக், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *