தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. அரியணை ஏறுகிறது! தி.மு.க. கூட்டணி 180 இடங்களில் மகத்தான வெற்றி பெறும்! 5 நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகள்

4 Min Read

சென்னை, ஏப்.11- தமிழ்நாடு அரசியல் சதுரங்கத்தில் காய்கள் இப்போதே நகரத் தொடங்கிவிட்டன. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய ஓட்டத்தில், ‘INSIDE ELECTION’, ABP news, போல் டிராக்கர், லோக் போல் மற்றும் அக்னி நியூஸ் சர்வீசஸ் ஆகிய 5 நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் கவனம் பெற்றுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர், சசிகலா- ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 172 முதல் 179 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என ஏபிபி சர்வே கணித்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு அதிர்ச்சி தரும் வகையிலான இடங்களே கிடைக்கும் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் ஹைலைட் என்னவென்றால், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வாங்கும் வாக்கு சதவீதம் ஒருபுறம் ஆச்சரியப்படுத்தினாலும், மறுபுறம் அந்தக் கட்சிக்கு ஒரு கசப்பான உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறது.

தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ‘INSIDE ELECTION’ நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகள், ஆளுங்கட்சியான திமுகவுக்குச் சாதகமாகவும், பிரதான எதிர்க் கட்சியான அதிமுகவுக்குப் பலத்த பின்னடைவாகவும் அமைந்துள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் சுமார் 1.63 லட்சம் வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட இந்த மெகா ஆய்வின்படி, திமுக கூட்டணி 44 சதவீத வாக்குகளைப் பெற்று அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது.

‘INSIDE ELECTION’ நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு

இதன் விளைவாக, வரும் தேர்தலில் 159 முதல் 165 தொகுதிகளைக் கைப்பற்றி திமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் எனத் தெரிகிறது. மாறாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி வெறும் 33 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று, 64 முதல் 70 தொகுதிகளுக்குள் சுருங்கும் என இந்த ஆய்வு எச்சரிக்கிறது. குறிப்பாக, அதிமுகவின் கோட்டை எனக் கருதப்படும் மண்டலங்களில்கூட அக்கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்திக்கும் என்ற கணிப்பு, அக்கட்சியின் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொருபுறம், தமிழ்நாடு அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 18 சதவீத வாக்குகளைத் தன்வசப்படுத்தும் தவெக, 4 முதல் 6 தொகுதிகளைக் கைப்பற்றி சட்டமன்றத்தில் தனது கணக்கைத் தொடங்கும் எனத் தெரிகிறது. தவெக ஈர்க்கும் இந்த 18 சதவீத வாக்குகள் பெரும்பாலும் அதிமுகவின் வாக்கு வங்கியில் இருந்தே பிரியும் என்பதால், அது அதிமுகவுக்குப் பெரும் இழப்பாக மாறியுள்ளது.

அதே சமயம், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு இந்த முறையும் தொகுதிகள் எதுவும் கிடைக்காது (0 இடங்கள்) என இந்தக் கணிப்பு கூறுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், திமுகவின் ஆதிக்கம் தொடர்வதும், அதிமுகவின் வாக்கு வங்கி சரிவைச் சந்திப்பதும், தவெக ஒரு மூன்றாவது சக்தியாக உருவெடுப்பதும் 2026 தேர்தல் களத்தின் முக்கிய மாற்றங்களாக இருக்கும் என இன்சைட் எலெக்சன் சர்வே சுட்டிக்காட்டுகிறது.

லோக் போல் கணிப்பு: திமுக வெற்றி

லோக் போல் அமைப்பின் மெகா சர்வே முடிவுகள் அறிவாலயத்தை உற்சாகத்தின் எல்லைக்கே கொண்டு சென்றுள்ளது.

திமுக கூட்டணி: 181 முதல் 189 தொகுதிகளில் வெற்றி பெற்று, சுமார் 40.1 சதவீத வாக்கு வங்கியைத் தக்கவைக்கும்.

தனிப்போர்: இதில் ஹைலைட் என்னவென்றால், திமுக கூட்டணி 180 இடங்களைத் தாண்டும்போது, திமுக மட்டுமே தனித்து 140 இடங்களுக்கு மேல் வெல்ல வாய்ப்புள்ளது. இதனால் ‘ஆட்சியில் பங்கு’ என்ற பேச்சுக்கே இடமில்லாமல், காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளை திமுக தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

அக்னி நியூஸ் சர்வீஸ்: திமுக வெற்றி

அக்னி நியூஸின் புள்ளிவிவரங்கள் எதிர்க்கட்சிகளுக்குப் பெரும் யோசனையைக் கொடுத்துள்ளன.

கோட்டை வசமாகும்: மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 180 இடங்களில் முன்னிலை பெற்று அசுர பலத்தைக் காட்டும்.

மண்டல வாரியான ‘கிளீன் ஸ்வீப்’: – சென்னை: 37இல் 36 இடங்கள் திமுக வசமாகும். அதிமுகவிற்கு வெறும் 1 இடம் மட்டுமே!

மத்திய மண்டலம்: 37இல் 35 இடங்களில் திமுகவின் ஆதிக்கம்.

கொங்கு & வடக்கு: அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் இங்கேயும் திமுகவே முந்துகிறது. மேற்கில் 50இல் 32 இடங்களையும், வடக்கில் 52இல் 35 இடங்களையும் திமுக தட்டிச் செல்கிறது. இதிலும் நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று கணிக்கப்பட்டு உள்ளது.

போல் டிராக்கர்: ‘உச்சாணிக் கொம்பில்’ உதயசூரியன்!

போல் டிராக்கர் முடிவுகளும் திமுகவிற்குச் சாதகமாகவே ‘பஞ்ச்’ வைக்கின்றன.

வெற்றி வாகை: திமுக கூட்டணி 172 முதல் 178 இடங்களைக் கைப்பற்றும். 42.7 சதவீத வாக்கு விகிதத்துடன் அசைக்க முடியாத சக்தியாக திமுக உருவெடுத்துள்ளது.

இது எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் விஜய் ஆகிய இருவருக்கும் ஒரு மிகப்பெரிய சவாலான காலக்கட்டத்தைத் தொடக்கி வைத்துள்ளது. நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று இதிலும் கூறப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *