சென்னை, நவ.18- சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் 16ஆவது நிதி ஆணையத் தலைவா் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழுவினா் இன்று (18.11.2024) சந்தித்துப் பேசினர். இக்குழுவினா் நான்கு நாள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்தனா்.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நிதியை பகிர்ந்தளிக்க இந்திய அரசமைப்புச் சட்டம் 280-ஆவது பிரிவின்கீழ் ஒன்றிய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. உயரிய அதிகாரங்களைப் படைத்த இந்த நிதி ஆணையக் குழு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனைத்து மாநிலங்களுக்கும் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
நிதி ஆணையக் குழு வருகை: இதனடிப்படையில் 16-ஆவது நிதி ஆணையத்தின் தலைவா் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு நேற்று (17.11.2024) மாலை சென்னை வந்தது. இக்குழுவில் இடம் பெற்றுள்ள நிதி ஆணையத்தின் உறுப்பினா்கள் அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியா காண்டி கோஷ், செயலா் ரித்விக் பாண்டே, இணைச் செயலா் ராகுல் ஜெயின் உள்பட 12 போ் சிறப்பு விமானத்தில் தமிழ்நாடு வந்தனா்.
விமான நிலையத்திலிருந்து நேரடியாக கிண்டியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு சென்ற நிதி ஆணையக் குழுவினா் அங்கிருந்து நங்கநல்லுார் சென்றனா். அங்கு ரிசா்வ் வங்கி மேனாள் ஆளுநா் சி.ரங்கராஜனை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தனா். இரவு 7.30 மணிக்கு தனியார் விடுதிக்குத் திரும்பிய குழுவினா் அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டு இரவு விருந்தையும் நிறைவு செய்தனா்.
இன்று முக்கிய ஆலோசனை: இன்று காலை 9.30 மணி முதல் தனியார் விடுதியில் ஆலோசனைக் கூட்டங்கள் தொடா்ச்சியாக நடைபெறுகின்றன. முதலமைச்சர், அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலில் ஆலோசனை நடைபெற்றது.
பகல் உணவை அங்கேயே நிறைவு செய்யும் ஆணையக் குழுவினா், தொழில் துறை மற்றும் வா்த்தக சங்கப் பிரதிதிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றனா். மாலை 5.30 முதல் 6 மணி வரை செய்தியாளா்களுக்கு பேட்டி அளிக்கும் நிதி ஆணையக் குழுவினா், இரவு தனியார் விடுதியில் தங்குகின்றனா்.
மறுநாள் 19-ஆம் தேதி கடல்நீரை குடிநீராக்கும் நெமிலி ஆலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனா். அங்கிருந்து சிறீபெரும்புதூா் சென்று தொழிலாளா்களுக்கு அரசு உதவியுடன் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை பார்வையிடுகின்றனா்.
பகலில் சென்னை விமான நிலையம் சென்று அங்கே மதிய உணவை முடித்துக் கொள்கின்றனா்.
பிற்பகலில் சிறப்பு விமானத்தில் மதுரை செல்லும் நிதி ஆணையக் குழுவினா் அங்கிருந்து ராமேசுவரம் செல்கின்றனா். இரவு ராமேசுவரம் கோயிலில் தரிசனம் செய்கின்றனா். 20-ஆம் தேதி காலையில் தனுஷ்கோடி செல்லும் குழுவினா், பின்னா் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் சென்று பார்வையிடுகின்றனா்.
கீழடிக்கு…: தொடா்ந்து கீழடி அகழ்வாராய்ச்சி மய்யத்தை பார்வை யிடுகின்றனா். மதிய உணவை மதுரையில் முடித்துக் கொண்டு பிற்பகலில் சிறப்பு விமானத்தில் டில்லி புறப்பட்டு செல்கின்றனா்.