சென்னை, நவ.17- கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற் றம் சாட்டப்பட்டவர் கள் தரப்பில் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசா ரிக்கக்கூடாது? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொலை, கொள்ளை
மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை, கொள்ளை நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில் ஓம்பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார். பங்களாவில் இருந்து சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதுதொடர்பான வழக்கில் கேரளாவைச் சேர்ந்த சயான், மனோஜ், தீபு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
வழக்கில் மேனாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்ளிட்டோரையும் விசாரிக்க வேண்டும் என்று குற்றம் சாட் டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
தள்ளுபடி
இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி அளித்தது. மற்றவர்களை விசாரிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், தீபு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு 15.11.2024 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் யார், யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
அந்த நிகழ்வு நடக்கும்போது, எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச் சராக இருந்தார். அவர் முதலமைச்சராக பதவி வகித்ததால், சம்பந்தமில்லாமல் விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப் பாணை அனுப்பும்படி கோர முடியாது என நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டது.
சசிகலாவுக்கு தெரியும்
கொள்ளை நடந்த பங்களாவின் முதல் தளத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறை உள்ளது. அதற்கு அருகே சசிகலாவின் அறை உள்ளது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான விலை உயர்ந்த 10 கைக்கடிகாரங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
உண்மையில் அந்த அறை யில் என்னென்ன பொருட்கள் இருந்தது என்பது சசிகலாவுக்குதான் தெரியும். அதனால், இருவரையும் வழக்கில் விசாரிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக மேனாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஏன் விசாரிக்கக் கூடாது? என கேள்வி எழுப்பி, இந்த மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்தார்.