தென்சென்னை மாவட்டத்திலிருந்து, தோழர்கள் அதிகளவில் கலந்து கொள்வதென பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் முடிவு
சென்னை, நவ.16- தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 9.11.2024 அன்று மாலை 6 மணியளவில், பெரியார் திடலில் நடைபெற்றது. கூட்டம் மாவட்டத்தலைவர் மு.இரா.மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார்.
அவர் பேசும்போது, வருகிற டிசம்பர் திங்கள் 28, 29 ஆகிய நாள்களில் திருச்சியில் நடைபெற உள்ள அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பற்றியும், மாநாட்டுக்கு ஆகும் செலவுகள் பற்றியும், அதற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கு பற்றியும், விரிவாகப் பேசினார். மாவட்டத்தில் இருந்து தோழர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
மாநாடு சிறப்பாக நடைபெற, மாவட்ட பொறுப்பாளர்கள், தங்கள் ஒத்துழைப்பை முழு அளவில் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதன்படி, மாநாடு சிறக்க, தென்சென்னை மாவட்டத்தில் இருந்து, தோழர்கள் அதிகளவில் கலந்து கொள்ளவும், மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கள் ஒத்துழைப்பைத் தரவும், முடிவெடுக்கப்பட்டது.
நிறைவாக, மாவட்டச் செயலாளர் பா.வேணுகோபால் பகுத்தறிவாளர் மாநாட்டில், தான் எழுதிய கட்டு ரையை, வாசிக்க இருப்பதாகக் குறிப்பிட்டு, தன் நன்றியுரையை நிறைவு செய்தார்.