சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் ரூ. 100 கோடியில் உருவாகிறது “நந்தவனம் பாரம்பரிய பூங்கா” சுற்றுலாத்துறை அறிவிப்பு!

viduthalai
2 Min Read

சென்னை, நவ. 13- ஒன்றிய அரசின் நிதியுதவியுடன், தமிழ்நாடு சுற்றுலா துறை, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் ரூ.100 கோடி செலவில் “நந்தவனம் பாரம்பரிய பூங்கா” என்ற பிரத்யேக பூங்காவை அமைக்க இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறை சார்பில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் கோவளம் அருகே 223 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடி செலவில் “நந்தவனம் பாரம்பரிய பூங்கா” அமைக்கப்பட இருக்கிறது. ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் உருவாக்கப்படும் இந்த பூங்காவில் சோலை வனம், விகாரம், மைதானம் என 3 பிரிவுகள் இடம்பெறும். இங்கு 2 நட்சத்திர விடுதிகள், 4 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

சோலை வனத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரிய மற்றும் வரலாற்று சிறப்புகளை குறிக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன. குறிப்பாக, கோவில்கள், சிற்பங்கள், நாட்டுப்புற தெய்வங்கள், இசைத் தோட்டம், கலைநிகழ்ச்சிகள், கைவினைப்பொருட்கள் காட்சி, பொம்மை பூங்கா போன்றவற்றின் சிறு உருவங்கள் இடம்பெறும். அதேபோல், விகாரம் முழுமையாக குழந்தைகள் மற்றும் விளையாட்டு பகுதிக்கானது. ஒளிரும் பூங்காக்கள், குழந்தைகள் விளையாடும் பகுதி, கிரக தோட்டம், மலர் தோட்டம் போன்றவற்றுடன் அமைக்கப்படும். மைதானம் சமூக நிகழ்வுகளை நடத்து வதற்கும் 25 ஆயிரம் பேர் கூடும் வகையில் 13 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட இருக்கிறது. மேலும், வாலிபால், டென்னிஸ், கூடைப் பந்து உள்ளிட்ட அனைத்து வகை விளையாட்டு மைதானங்களும் இதில் இடம் பெறும்.

நடைபாதைகள், நீர்வழிகள், சைக்கிள் பாதைகள் உருவாக்கப்பட்டு பார்வையாளர்கள் நீர்முனையை அணுகும் வகையில் இந்த பூங்கா அமைந்தி ருக்கும். அதோடு நீர் முனை களில் படகு சவாரி, குழந்தை களுக்கான மண்டலங்கள் போன்ற செயல்பாடுகளும் இடம்பெற உள்ளன. கருப்பொருள் சிற்பங்கள், சிறு கடைகள், திறந்தவெளி திரையரங்குகள், கலாச்சார குடில்கள், உணவு அரங்கம் ஆகியவையும் அமைக்கப் படுகின்றன. இது சென்னைவாசிகளுக்கு கிழக்கு கடற்கரைச்சாலை பகுதியில் மற்றொரு சுற்றுலாத்தலமாக திகழும் என சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *