ராஞ்சி, நவ.11 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டமாக (43 தொகுதிகள் – நவ., 13 மற்றும் 38 தொகுதிகள் – நவ.13) சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசித்து வரும் மாநிலம் என்றாலும், முஸ்லிம் மக்களும் அங்கு கணிச மான அளவில் வாழ்ந்து வருகின்றனர். அதாவது மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம் மக்கள் 17 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர். இதில் ஜம்தாரா, பாகூர், ராஜ்மஹால், கோடா, மதுபூர், காண்டே மற்றும் துண்டி உள்ளிட்ட 7 சட்டமன்ற தொகுதிகளில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அதே போல மகாகம, ராஜ்தன் வார், ராஞ்சி, ஹதியா, சரத், பங்கி, தும்ரி, பகோதர், மந்தர், கன்கே மற்றும் சந்தன்கியாரி உள்ளிட்ட 11 சட்டமன்ற தொகுதிகளில் பழங் குடியின மக்களைப் போலவே முஸ்லிம் மக்களும் கணிசமான அளவில் வாழ்ந்து வருகின்றனர்.
அதாவது மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 18 தொகுதிகள் முஸ்லிம் மக்கள் ஆதிக்கம் செலுத்துபவையாக உள்ளன. குறிப்பாக மேற்குறிப்பிட்ட 18 தொகுதிகள்தான் ஜார்க்கண்டில் யார் ஆட்சி அமைப்பதை நிர்ணயிக்கவும் செய்கிறது. இதனால் தான் ஜார்க்கண்ட் அரசியல் களத்தில் பழங்குடி மக்களின் வாக்குகளை போல முஸ்லிம் மக்களின் வாக்குகளும் செல்வாக்கு மிகுந்தவையாக உள்ளது.
இந்நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் மக்களவை தேர்தல் போல அல்லாமல் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய “இந்தியா” கூட்டணி முஸ்லிம் வாக்குகளை மொத்தமாக அள்ளும் என கள ஆய்வு முடிவில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தக் கள ஆய்வு அறிக்கையில், “ஜார்க்கண்டில் மொத்தம் 3.5 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 20% முஸ்லிம்கள் (கிட்டத் தட்ட 70 லட்சம் வாக்குகள்) ஆவர். இதனால் தேர்தலில் அவர்களின் நிலைப்பாடு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கள ஆய்வின் பொழுது ஜார்க்கண்ட் முஸ்லிம் சமூகத்தினர் ஜேஎம்எம் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான ஹேமந்த் சோரனின் மீது மிகுந்த நம்பிக்கை இருப்பதாக கூறுகின்றனர்.
சமூகப் பாதுகாப்பு, சிறு பான்மை நலனில் ஹேமந்த் சோரன் அரசு எடுத்துள்ள நிலைப்பாடுகள் முஸ்லிம் சமூகத்தினரைக் கவர்ந்துள்ளது. இதனால் முஸ்லிம் மக்களின் வாக்குகள் பிரியாமல் ஹேமந்த் சோரன் தலைமையிலான “இந்தியா” கூட்டணிக்கு மொத்தமாக செல்ல வாய்ப்புள்ளது” என கூறப்பட்டுள்ளது
மோடி பொய்யர்
கள ஆய்வில் முகமது பரீத்கான் என்ற வாக்காளர் கூறுகையில், “ஹேமந்த் சோரன் அரசின் நடவடிக்கைகளால் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். அத னால் சட்டமன்றத் தேர்தலில் ஜேஎம்எம் கூட்டணி வெல்லவே வாய்ப்புகள் அதிகம். எங்கள் தொகுதியில் (ராஞ்சி) ஜேஎம்எம் சார்பில் மஹுவா மாஜி போட்டியிடுகிறார். நிச்சயம் அவருக்கு அனைத்து சமூகத்தினரும் ஆதரவு அளிப்பார்கள்” என அவர் கூறினார்.
அதே போல பாபர் என்ற மற் றொரு வாக்காளர்,”பாஜக ஜூம்லா செய்து வருகிறது. 2014 முதல் பிரதமர் மோடி பல வாக்குறுதிகளை அளித்து வருகிறார். ஆனால், அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கருப்புப் பணம், ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் எனப் பலவற்றைச் சொல்லலாம். அதேநேரம் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் மக்களுக்காக உழைத்துள்ளார். அவரது திட்டங்கள் ஏழை மக்களைச் சென்றடைந்துள்ளன” என்று தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் பிரிந்ததால் ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 14 தொகுதிகளில் பாஜக 8, கூட்டணி கட்சியான ஜார்க்கண்ட் மாணவர்கள் பேரவை 1 என தேசிய ஜனநாயக கூட்டணி 9 இடங்களில் வென்றது. ஆனால், மாநிலத்தை ஆளும் ஜேஎம்எம் – காங்கிரஸ் கூட்டணி வெறும் 5 தொகுதிகளை (ஜேஎம்எம் – 3, காங்கிரஸ் – 2) மட்டுமே வென்றது. இத்தகைய சூழலில் மக்களவைத் தேர்தல் போல் அல்லாமல் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் பிரிய வாய்ப்பில்லை என்றும், மாநிலத்தில் முஸ்லிம் மக்களின் வாக்குகளை மொத்தமாக “இந்தியா” கூட்டணி அள்ளும் என கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளன.