‘திலகர்!’

Viduthalai
2 Min Read

பாலகங்காதர திலகர்பற்றி ‘தினமலர்’ ஆன்மிக மலர் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் திலகரைப்பற்றி ‘ஆகா, ஓகோ’ என்று ஆலாபரணம் செய்துள்ளது.
‘‘ஆன்மிகம், பக்தியில் முன்னோடியாக உள்ளது நம் பாரதம். புராதனமான நம் ஸநாதன தர்மம், நாத்திகம் உள்பட அனைத்து நம்பிக்கைகளையும் உள்ளடக்கியது என்ற உண்மையை திலகர் உணர்ந்திருந்தார்.
மக்களைத் தேசப்பற்று உள்ளவர்களாக மாற்றும் ஆற்றல் பக்திக்கு உண்டு. இவ்வாறு தேசபக்தி கொண்டவர்கள் எப்போதுமே நம் நாட்டிற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள்’’ என்றெல்லாம் அளந்து கொட்டப்பட்டுள்ளது.

உண்மையில் திலகரின் ஆன்மிகம், பக்தி என்பதெல்லாம் எத்தன்மை கொண்டது?
பிளேக் நோய் புனேயில் தொற்றி பலரும் மரணம் அடைந்த நிலையில், இந்த நோய்க்கு மூல காரணம் எலிகள் என்பதால் பிரிட்டீஷ் அரசு எலிகளை வேட்டியாடியது.
‘தேச பக்த பெருமான்(?)’ என்று கூவிக் கூவி அழைக்கப்பட்ட பாலகங்காதர திலகர் என்ன பேசினார் தெரியுமா?
‘‘நம்முடைய கடவுள் விநாயகரின் வாகனமான எலியைக் கொல்லச் செய்யும் வெள்ளைக்காரர்களைச் சும்மா விடலாமா?’’ என்று இந்துப் பக்தர்களின் உணர்ச்சியைத் தூண்டினார்.

தூண்டப்பட்ட இந்து வெறியர்கள் இரண்டுவெள்ளைக்கார அதிகாரிகளைச் சுட்டுக் கொன்றனர்.
இந்தக் கொலையைத் தூண்டிய குற்றத்திற்காகத் திலகருக்கு 18 மாத சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்தத் தண்டனையை திலகர் அனுபவிக்கவில்லை என்பது நினைவில் இருக்கட்டும்!
விநாயகர் சதுர்த்தியை அரசியலாக்கி, ஊர்வலத்தை நடத்தி, அதன்மூலம் இந்து மதவெறியைக் கிளப்பிய ‘‘புண்ணியவானும்’’(?) சாட்சாத் இவரே!
1907 ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர் இராஷ்விகாரி கோஷ் என்ற பார்ப்பனரல்லாதவர் ஆவார்.

இதனைப் பொறுக்கமாட்டாத பார்ப்பனப் பழைமைவாதியான திலகர் என்ன செய்தார் தெரியுமா? மேடையை நோக்கி செருப்பை வீசினார்.
ஃபெரோஸ் ஷா மேத்தா, சுரேந்திர நாத் பானர்ஜி ஆகிய இருவர்கள்மீதும் அந்தச் செருப்பு தாக்கியது என்பது வரலாறு.
திலகர் மரணம் அடைந்தபோது அவர் பாடையைத் தம் தோளில் சுமக்க முன்வந்த காந்தியார், தடுத்து நிறுத்தப்பட்டார். ‘திலகர் பிராமணர், அவர் பாடையை வைசியனாகிய நீ தூக்கக் கூடாது’ என்று ‘தினமலர்’ வர்ணிக்கும் அந்த ஸநாதன சமர்த்தர்கள் தடுத்தனர்.
இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, திலகரைத் தூக்கி நிறுத்தும் ‘தினமலர்’களைக் கண்டு கொள்ளுங்கள்!

– மயிலாடன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *