பாராட்டுக்குரியது!

Viduthalai
1 Min Read

பறவைகளுக்காக 20 ஆண்டுகளாக பட்டாசுகளைத் தவிர்க்கும் கிராம மக்கள்!

ஈரோடு, நவ.2 கடந்த 20 ஆண்டுகளாக பறவைகளை அச்சப்படுத்தும் வகையிலான ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெள்ளோடு பறவைகள் சரணால யத்தைச் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனா். அதே போல நடப்பு ஆண்டும் பட்டாசுகளைத் தவிர்த்தனர் .
ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே வெள்ளோட்டில் 215 ஏக்கா் பரப்பில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் செப்டம்பா் முதல் மார்ச் வரை ஏராளமான பறவைகள் வந்து செல்கின்றன.

இந்தக் காலகட்டத்தில், ஆஸ்திரேலியா, சைபீரியா, இலங்கை மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பெலிகான், கொசு உல்லான், வண்ணான் நாரை, கூழைகெடா, பெரிய நீா்காகம், சிறிய நீா்காகம், பாம்பு தாரா, சாம்பல் நாரை, வெண்மார்பு மீன்கொத்திப் பறவை, ஜெம்புகோரி உள்பட பல்வேறு பறவைகள் சரணாலயத்துக்கு வந்து செல்கின்றன.
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தைச் சுற்றி வி. மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், தச்சன்கரைவழி, செம்மாண்டாம்பாளையம், மீனாட்சி புரம், புங்கம்பாடி, கொங்கு நகா், கருக்கங்காடுவலசு உள்பட சுமார் 10 கிராமங்கள் உள்ளன.

வெள்ளோடு சரணாலயத்துக்கு வரும் பறவைகள் பாதிக்கப்படும் என்பதால் இந்த கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தீபாவளியின்போது ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றனா்.இதுகுறித்து இப்பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் கூறியதாவது:
பல்வேறு நாடுகளில் இருந்து வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்குப் பறவைகள் வருகின்றன. இனப்பெருக்கத்துக்காக வரும் பறவைகள் தீபாவளியின் போது அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடித்தால் அச்சத்துக்குள்ளாகும்.
எனவே, வெள்ளோட்டை சுற்றியுள்ள கிராம மக்கள் ஒன்றுகூடி ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடுவது என முடிவு எடுத்தோம். அதன்படி கடந்த 20 ஆண்டுகளாக இது தொடா்ந்து வருகிறது. குழந்தைகள் விருப்பத்துக்காக ஒலி எழுப்பாத சிறிய வகை பட்டாசுகளை வாங்கித் தருகிறோம். தீபாவளி மட்டுமல்லாது கோயில் திருவிழாக்களின்போது இங்கு பட்டாசுகளை வெடிப்பதில்லை என்றனா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *