புதுடில்லி, அக்.31– இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்திருப்பது பின்னர் தெரியவந்தது. அதாவது 60-க்கும் மேற்பட்டவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், 1,500க்கு மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சக தேர்வர்கள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நுழைவுத்தேர்வுகளை வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையாகவும் நடத்துவதற்கான பரிந்துரைகளை அளிக்க இஸ்ரோ மேனாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைத்தது. இந்த குழு நீண்ட ஆய்வு நடத்தி தனது பரிந்துரைகளை ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. அந்த பரிந்துரையில்,
நீட் நுழைவுத்தேர்வை முடிந்தவரை இணைய வழி மூலம் நடத்தலாம்.நீட் தேர்வு மய்யங்களை அவுட்சோர்சிங் என்ற முறையில் வழங்காமல் அதன் சொந்த தேர்வு மய்யங்கள் எண்ணிக்கையை அதிகரித்து நடத்தலாம். இணைய வழி (ஆன்லைன்) முறை சாத்தியம் இல்லை எனும் போது, வினாத்தாள்களை டிஜிட்டல் முறையில் தேர்வர்களுக்கு அனுப்பலாம். எத்தனை முறை தேர்வில் பங்கேற்பது என்ற கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம்.” உள்ளிட்டவை இடம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில்
முதுகலை ஆசிரியர் பணிக்கு
பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு
சென்னை, அக். 31– அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு பட்டியலை தயாரிக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பிய சுற்றறிக்கை: அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2024 டிச.1ஆம் தேதி நிலவரப்படி பணிமாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய வேண்டும். பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் பள்ளி துணை ஆய்வாளர் விவரங்களையும் மாவட்ட வாரியாக தயார் செய்ய வேண்டும்.
இதன் பெயர் பட்டியல் மற்றும் கருத்துருக்களை நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பும்போது பின்வரும் விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும்.இளங்கலை மற்றும் முதுகலையில் அந்தந்த பாடத்தில் முதன்மை பாடமும், பிஎட் படிப்பும் படித்திருக்க வேண்டும். வெளிமாநிலச் சான்று எனில் மதிப்பீடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
2021 ஜன.1ஆம் தேதிக்கு பிறகு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வை ஆண்டுக்கு தற்காலிகமாக துறந்தவர்கள் மற்றும் ஏற்கெனவே முதுகலை ஆசிரியர் பதவி உயர்வை நிரந்தரமாக துறந்தவர்களின் பெயர்கள் எக்காரணம் கொண்டும் பட்டியலில் இடம்பெறக்கூடாது. இளங்கலை பட்டத்தில் இரட்டை பட்டப்படிப்பு மற்றும் ஒரே ஆண்டில் 2 பட்டங்கள் படித்தவர்களின் பெயரையும் பட்டியலில் சேர்க்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 50 சதவீத பணியிடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், மீதமுள்ள 50 சதவீத இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன.