மீண்டும் மீண்டும் ஹிந்தியிலேயே கடிதம் ஏன்? பதிலடி கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா!

viduthalai
1 Min Read

புதுக்கோட்டை, அக்.29- பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் ஹிந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக் கணித்தே வருகிறது.

தமிழ்நாடு

இது தவிர ஒன்றிய அரசின் அலுவலகங்களில் ஹிந்தியைப் பயன்படுத்தச் சொல்வது, அலுவல் பூர்வக்கடித பரிமாற்றம் போன்ற வற்றுக்கு ஆங்கிலத்துக்குப் பதில் ஹிந்தியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

எப்படியாவது ஹிந்தியைத் திணித்து விட வேண்டும் என பா.ஜ.க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. பா.ஜ.கவின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வந்தாலும் ஹிந்தி பேசாத மாநிலங்களில் மீண்டும் மீண்டும் ஹிந்தியை திணிக்கப்பார்க்கிறது.
அதன் ஒரு பகுதியாக ஒன்றிய அரசு சார்பில் வெளியாகும் அறிவிப்புகள், கடிதங்கள் அனைத்தும் ஹிந்தியிலேயே வெளியாகிவருகிறது.
அந்த வகையில் ஹிந்தி பேசாத மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஹிந்தியில் கடிதங்களை அனுப்பி வருகிறது. இந்த நிலையில், ரயில்வே இணை அமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஹிந்திக்கு வந்த கடிதத்துக்கு தமிழில் பதில் கடிதம் எழுதி பதிலடி கொடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா.

தமிழ்நாட்டை சேர்ந்த மாநிலங் களவை உறுப்பினர் அப்துல்லாவுக்கு ஒன்றிய அரசு அலுவலகங்களில் இருந்து தொடர்ந்து ஹிந்தியில் கடிதம் வந்துள்ளது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், ”

ரயில்வே இணை அமைச்சர் அவர்களின் அலுவலகத்தில் இருந்து எப்போதும் ஹிந்தியில்தான் கடிதம் வருகிறது. அவரது அலுவலக அதிகாரிகளை அழைத்து “எனக்கு ஹிந்தி தெரியாததால் ஆங்கிலத்தில் கடிதத்தை அனுப்புங்கள்” என்று சொல்லியும் மீண்டும் மீண்டும் ஹிந்தியிலேயே கடிதம் வருகிறது. தற்போது அவருக்கு “புரியும்படி” பதில் அனுப்பி உள்ளேன். இனி புரிந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *