மனித அல்லது விலங்கின் உடலில் ஆய்வுகள் செய்யும்போது உடலுக்குள் கேமராவை நுழைத்து ஆய்வுசெய்ய வேண்டி உள்ளது. சில ஆய்வுகளுக்குக் கேமராவும் உதவாது. விலங்கைக் கொன்ற பின்போ அல்லது இயற்கையாக இறந்த பின்போ தான் ஆய்வு மேற்கொள்ள முடியும்.
இப்படி இல்லாமல் சில விலங்குகளுக்கு உள்ளதைப் போன்று உள்ளுறுப்புகள் வெளியே தெரியச் செய்தால், விலங்குகளைக் கொல்லாமலேயே ஆய்வு மேற்கொள்ளலாம்.
விலங்குகளில் தோல், தசைகளில் உள்ள புரதமும் கொழுப்பும் தான் ஒளி புகா வண்ணம் செய்கின்றன. எனவே இதற்கொரு தீர்வைக் கண்டறிய விஞ்ஞானிகள் நீண்டகாலம் ஆய்வு செய்து வருகின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் உயிரியலாளர்கள் உணவில் பயன்படும் டார்ட்ராசைன் (Tartrazine) எனும் நிற மூட்டியை இதற்கும் உபயோகிக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர்.
இது நீல, புற ஊதா நிறங்களைச் சிதறடிக்கும் இயல்புடையது. ஆனால் சிவப்பு, இளஞ்சிவப்பு ஒளிக்கதிர்களை அனுமதிக்கும். இதனால் உள்ளுறுப்புகளைக் காணலாம்.
ஆய்வு முடித்த பின்பு நிறமூட்டியைக் கழுவி விட்டால் போதும். வேறு எந்தப் பாதிப்பும் இதனால் ஏற்படாது. ஆய்வாளர்கள் எலியின் வயிற்றில் இந்த நிறமூட்டியைத் தடவினர். எலியின் நியுரானில் ஒளிரக்கூடிய மையைச் செலுத்தினர்.
அதன்மீது ஒளியைச் செலுத்தியதும், உள்ளே இருந்த உறுப்புகள் வழியே நியுரான் தெரிந்தது. எலியின் தலையில் தடவிப் பார்த்தபோது மூளையில் இருந்த ரத்த நாளங்கள் தெரிந்தன. இந்தப் புதுமுறையை மேம்படுத்தி மனிதர்களுக்கும் பயன்படுத்த முடியும் என்கின்றனர்விஞ்ஞானிகள். பாதிப்புகள் ஏற்பட்டு சிகிச்சை செய்யப்பட்ட உறுப்புகளைக் கண்காணிக்கவும் இது பயன்படும்