ராகுல் காந்தியை மட்டும் ஆர்.எஸ்.எஸ். எதிர்க்கவில்லை; இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் எதிர்க்கிறது!
ராகுல் காந்தி கைகளில், இந்திய அரசமைப்புச் சட்டத்தை வைத்திருக்கின்றார் என்று சொன்னால், அவர் ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறார் என்று அர்த்தம் ஜனநாயகத்தைக் காப்போம் – பாசிசத்தை அழிப்போம்!
சென்னை, அக்.16 ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ராகுல் காந்தியை மட்டும் எதிர்க்கவில்லை; இந்திய அரசமைப்புச் சட்டத்தை எதிர்க்கிறார்கள். ராகுல் காந்தி கைகளில், இந்திய அரசமைப்புச் சட்டத்தை வைத்திருக்கின்றார் என்று சொன்னால், அவர் ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறார் என்று அர்த்தம். எனவே, இங்கே நாம் குழுமியிருப்பது ஜனநாயகத்தைப் பாதுகாக்க. அங்கே இருப்பது பாசிசத்தை வளர்த்தெடுப்பதற்காக; ஜனநாயகத்தைக் காப்போம் – பாசிசத்தை அழிப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின்
வெறுப்பு அரசியலை எதிர்த்து
மாபெரும் கண்டனக் கூட்டம்!
கடந்த 14.10.2024 அன்று மாலை சென்னை காமராசர் அரங்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியலை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற மாபெரும் கண்டனக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.
அவரது கண்டன உரை வருமாறு:
மிகச் சரியான காலகட்டத்தில்
இக்கண்டனக் கூட்டம்!
மிகச் சரியான காலகட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கக் கூடிய ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் வெறுப்பு அரசியலை எதிர்த்து நடத்தப்படும் இந்த மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்திற்குத் தலைமையேற்றுள்ள ஆற்றல்மிகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அன்புச்சகோதரர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை அவர்களே,
வரவேற்புரையாற்றிய அருமைத் தோழர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் அவர்களே,
தேவராஜ் அர்ஸ் அவர்களுடைய அருமைப் பேரன் சுராஜ் எம்.என்.ஹெக்டே
கருநாடக மாநிலம் எப்பொழுதுமே சமூகநீதிக்குப் பெயர் பெற்ற ஒன்றாகும்.
அந்த சமூகநீதியில் ஒரு மிகப்பெரிய முத்திரையைப் பதித்து, கருநாடகத்திற்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் சமூகநீதி வரவேண்டும் என்பதற்காக மண்டல் கமிசன் அறிக்கை செயல்படாது போடப்பட்டிருந்த கால கட்டத்தில்கூட, துணிச்சலாக அதனைச் செயல்படுத்த வைக்க வேண்டும் என்பதற்காக இங்கே வந்து போராடிய, சமூகநீதியினுடைய நாயகர் கருநாடகத்தினுடைய ஒப்பற்ற முதலமைச்சராக இருந்த தேவராஜ் அர்ஸ் அவர்களுடைய அருமைப் பேரனாகவும், காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் வந்திருக்கக்கூடிய அன்பிற்குரிய அருமைத் தோழர், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இணையர்களின் மகன் அருமைத் தோழர் சுராஜ் எம்.என்.ஹெக்டே அவர்களே,
சிறப்பான வகையில் இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கின்ற காங்கிரஸ் தலைவர்கள் அருமைச் சகோதரர் கே.வி.தங்கபாலு அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களே, கிருஷ்ணசாமி அவர்களே, கே.எஸ்.அழகிரி அவர்களே, பீட்டர் அல்போன்ஸ் அவர்களே,
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்
பகுத்தறிவு வீராங்கனை கனிமொழி கலைஞர்!
கூட்டணிக் கட்சித் தலைவர்களாக இருக்கக்கூடிய எங்களுடைய பாசறை செல்வி, பகுத்தறிவு வீராங்கனை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமல்ல, தூத்துக்குடி வாசியாகவே மாறிவிட்டு, நமக்காக சென்னை வந்துவிட்டுப் போகக்கூடிய அருமைத் கனிமொழி கலைஞர் அவர்களே,
எனது அருமைச் சகோதரர் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ அவர்களே,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்களே,
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒப்பற்ற தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் பேராசிரியர் கண்ணியத்திற்குரிய காதர் மொகிதீன் அவர்களே,
எனக்கு முன் இங்கே உரையாற்றிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களே,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆற்றல்மிகு சட்டமன்ற உறுப்பினரும், தலைவருமான அருமைச் சகோதரர் ஈ.ஆர்.ஈசுவரன் அவர்களே,
தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேணுகோபால் அவர்களே,
மற்றும் எதிரே அமர்ந்துள்ள சட்டப்பேரவை உறுப்பி னர்களே, நண்பர்களே, பெரியோர்களே, அனைத்துக் கட்சியைச் சார்ந்த தோழர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏராளமான தலைவர்கள் இங்கே இருக்கிறார்கள்; இங்கே நிறைய நேரத்தைப் பேசுவதற்கு எடுத்துக்கொள்ள முடியாது. ஆகவே, ஒரு சில மணித்துளிகள் மட்டும் பேசிவிட்டு, நான் விடைபெற இருக்கிறேன்.
நாட்டுக்கு ஆற்றவேண்டிய கடமை
உணர்வுதான் மிக முக்கியம்!
காரணம் உங்களுக்குத் தெரியும்; எவ்வளவுதான் உணர்ச்சிப்பூர்வமாக நாங்கள் இருந்தாலும், பல நேரங்களில் உடல் ஒத்துழைக்க மறுக்கக்கூடிய சூழ்நிலை வயது காரணமாக இருக்கின்றது. அதையெல்லாம் தாண்டி, அதைவிட முக்கியமானது கடமை; நாட்டுக்கு ஆற்றவேண்டிய கடமை என்ற உணர்வுதான் மிக முக்கிய மாக எங்களைப் போன்ற சாதாரண எளியவர்களை இங்கே அழைத்து வந்திருக்கிறது.
கொள்கைக் கூட்டணியே தவிர,
பதவிக் கூட்டணி அல்ல!
எனக்கு முன் இங்கே உரையாற்றிய அத்துணைத் தலைவர்களும் மிக சிறப்பாகச் சொன்னார்கள். இந்தியா கூட்டணி எடுத்துக்காட்டான கூட்டணி – இந்தியாவிற்கே எடுத்துக்காட்டான கூட்டணியாக இந்தக் கூட்டணி இருப்பதற்குக் காரணம், இது கொள்கைக் கூட்டணியே தவிர, பதவிக் கூட்டணி அல்ல. அதனை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
அதனால்தான், ஆதிக்க சக்திகள் இந்தக் கூட்டணியை எதிர்க்கிறார்கள். எதிர்த்துப் பேசுகிறார்கள்.
உண்மையைப் பேச முடியாது என்பதற்காகத்தான் அவர்கள் பொய்யுரைகளைப் பரப்பிக் கொண்டிருக்கி றார்கள்.
இந்தியா கூட்டணிக்கு,
தமிழ்நாடு ஒரு ரோல்மாடல்!
எனவே, இந்தியா கூட்டணிக்கு, தமிழ்நாடு ஒரு ரோல்மாடல் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களாலே, திராவிட இயக்கத்தால் உருவாக்கப்பட்ட இந்தக் கூட்டணியினுடைய விரிவாக்கம்போல இந்தியா கூட்டணி அமைந்தது. என்றாலும், அந்தக் கூட்டணி இன்னும் சிறப்பாக அமையவேண்டும் என்பதைத்தான் எனக்கு முன் இங்கே உரையாற்றிய அருமைப் பேராசிரியர் ஜவாஹிருல்லா போன்றவர்கள் சொன்னார்கள். அந்தக் கருத்தை நான் அப்படியே வழிமொழிகிறேன்.
எது நம்மைப் பிரிக்கிறது என்பது முக்கியமல்ல; எது நம்மை இணைக்கிறது என்பதுதான் மிகவும் முக்கியம். இப்பொழுது தேவையானது என்னவென்றால், தீய ணைப்புப் படையில் எப்படி எல்லோரும் ஒருங்கி ணைந்து செயல்படுவார்களோ அதுபோல, நாம் பணியாற்றவேண்டும்.
சுருக்கமாகச் சொல்லுகிறேன் நண்பர்களே, ‘‘பாசிசத்தை எதிர்ப்போம்; இந்தியாவைக் காப்போம்” என்ற தலைப்பில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இதைத்தான் ராகுல் காந்தி அவர்கள் சொல்கிறார்கள். இந்தியாவினுடைய ஒப்பற்ற இளந்தலைவர் – இந்திய நாட்டின் எதிர்காலமே ராகுல்காந்தி அவர்களை நம்பித்தான் இருக்கிறது. எப்படி தமிழ்நாட்டிலும், தென்புலத்திலேயும் நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சரை நம்பியிருப்பதுபோல!
எனவேதான், இவர்கள் எல்லாம் இன்றைக்கு ஒரு புதிய வேகத்தோடு ஒருங்கிணைத்துக் கொண்டு வருகிறார்கள். அப்படி நாம் ஒருங்கிணைந்து வருகின்ற நேரத்தில், ஏன் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு வெறுப்பு அரசியல் வருகிறது என்றால், அவர்களுக்கு வேறு சரக்கு கிடை யாது. அதுதான் அவர்கள் வெறுப்பு அரசியலை நடத்து வதற்குக் காரணம்.
நாங்கள் பேசுவது
முழுக்க முழுக்க உண்மையாகும்!
சுருக்கமாக உங்களுக்குச் சொல்லவேண்டு மானால், வெறுப்பு அரசியல் என்று நாம் உண்மைக்கு மாறான செய்திகளைச் சொல்லவில்லை. இந்த அணி பேசுவது முழுக்க முழுக்க உண்மையாகும்.
வெள்ளைக்காரர்கள் காலத்திலிருந்து சாட்சிக் கூண்டில் ஏறுபவர்களிடம் ஆங்கிலத்தில் ஓர் உறுதிமொழியை வாங்குவார்கள்.
Your speak to Truth; Whole Truth; Nothing but Truth என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதுபோன்று முழுக்க முழுக்க உண்மையைத் தவிர வேறு எதையும் பேசாத அணிதான் இந்தியா கூட்டணி.
பொய்யைத் தவிர வேறு எதுவும் பேசாத அணிதான் எதிரணியான ஆர்.எஸ்.எஸ்.,
பி.ஜே.பி. அணியாகும்.
அதற்கு உதாரணத்தை உங்களுக்குச் சொல்ல வேண்டுமானால், ஒரே ஒரு செய்தியைச் சொல்லுகிறேன், கேளுங்கள்.
வெறுப்பு அரசியல் எப்படியெல்லாம் இருக்கிறது என்பதற்கு அடையாளம் இதோ!
தேர்தல் நேரத்தில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி வேட்பாளரோ, வேட்பாளரின் சார்பில் பேசுபவரோ, மதம், ஜாதி, இன ரீதியாக வாக்கு சேகரிப்பதோ அல்லது மற்றவர்களுக்கு வாக்கு செலுத்துவதைத் தடுக்க நினைப்பதோ தவறு.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்!
பிரச்சாரத்தின் வழியே, மக்களிடம் வெறுப்பு, பகைமையைத் தூண்டிவிடுவது குற்றம் என்கிறது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்.
ஆனால், நடைமுறையில் ஒவ்வொரு தேர்தலும், அது பொதுத் தேர்தலாக இருந்தாலும் அல்லது மாநிலங்க ளிலேயே நடைபெறக்கூடிய தேர்தல்களாக இருந்தாலும் – எப்படி அவர்கள் நடந்துகொண்டார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
இன்றைக்கு ஒன்றியத்தில் மைனாரிட்டி அரசை நடத்திக் கொண்டிருக்கின்ற ஓர் அரசு – நாற்காலிகளில் இரண்டு ஒட்டப்பட்ட கால்களை வைத்து அரசை நடத்து கின்ற பா.ஜ.க. அரசு – மோடி அரசு – பிரதமர் மோடி அவர்கள், தேர்தல் பிரச்சாரத்தின்போது என்ன பேசினார்?
தேர்தல் பிரச்சாரத்தின்போது எப்படிப்பட்ட வெறுப்பு அரசியலைப் பேசினார் மோடி!
வெறுப்பு அரசியலை தேர்தல் நேரத்திலேயே செய்திருக்கிறார்கள். இப்பொழுது அவர்கள் வெற்றி பெற்றதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் பெற்ற வெற்றி எப்படிப்பட்டது என்றால், தோல்விக்கு நிகரான வெற்றிதான். அப்படிப்பட்ட ஒரு வெற்றியைப் பெற்று, மைனாரிட்டி அரசாக ஒன்றியத்தில் ஆட்சி நடத்துபவர்கள் – கால் இல்லாமல், ஒட்டுப்போடப்பட்ட கால்களை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகின்ற அவர்கள் – மூன்றாவது முறையாக ஒன்றியத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்று சொல்லுகின்ற மோடி – தேர்தல் பிரச்சாரத்தின்போது எப்படிப்பட்ட வெறுப்பு அரசியலைப் பேசினார்?
சட்டப்படி அது தவறான ஒன்றாகும். இன்றைக்கும் அது ஒவ்வொரு மேடைகளிலும் பிரதிபலிக்கிறது.
இதோ அவர் பேசுகிறார் கேளுங்கள்:
‘‘வாக்கு ஜிகாத்தா? ராமராஜ்ஜியமா? என்பதை மக்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விளையாட்டில் கூட சிறு பான்மையினருக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள்” என்றார்.
ராகுல் காந்தியினுடைய உரையில், காங்கிரசினுடைய சமத்துவக் கொள்கையில், சமூகநீதிக் கொள்கையில் பா.ஜ.க.வுக்கு எவ்வளவு வெறுப்பு? எவ்வளவு கசப்பு? எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்பதைth தேர்தல் பிரச்சாரத்தின்பொழுது வெளிப்படுத்தினார். அதே கருத்தைத்தான் ஒவ்வொரு தேர்தல்களிலும் அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்; நடை முறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் பிரதமர் மோடி தொடர்கிறார், ‘‘இட ஒதுக்கீட்டை மத ரீதியாகப் பகிர்ந்தளிப்பார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபொழுது, நாட்டின் செல்வத்தில் முஸ்லிம்களுக்குத்தான் முதல் உரிமை உண்டு என்றனர். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஊடுருவல்காரர்களுக்குத் தரப் போகிறீர்களா? காங்கிரசும், சமாஜ்வாடியும், பாபரின் பெயரைச் சொல்லி, ராமர் கோவிலுக்குப் பூட்டுப் போடுவார்கள்; புல்டோசர் கொண்டு ராமர் கோவிலை இடிப்பார்கள்” என்றார்.
மக்கள் மன்றம் நீதிமன்றமாக மாறினால்…
எதை அரசியலாக வைத்திருக்கிறார்கள் பாருங்கள். மேலே நான் சட்டத்தைச் சொன்னேன்; பிறகு அவருடைய பேசிய உரையைச் சொன்னேன். மக்கள் மன்றம் நீதிமன்றமாக மாறினால், சரியாக அவர்கள் தங்களுடைய கடமையைச் செய்தால், இதை நியாயப்படுத்த முடியுமா?
புல்டோசரை எங்கு பயன்படுத்தவேண்டும் என்பதை யோகி ஆதித்யநாத் அவரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
அவரிடம் கற்றுக்கொண்டதுதான், உச்சநீதிமன்றம் காதைப் பிடித்துத் திருகி, தலையில் குட்டு வைத்து, புல்டோசருக்கு என்ன வழி என்று காட்டியிருக்கிறது. இதுதான் இவருடைய மதிப்பீடு.
திண்ணைதோறும் பிரச்சாரம் செய்யவேண்டும்; தெருமுனைகளில் எல்லாம் பிரச்சாரம் செய்யவேண்டும்!
அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டால் மட்டும் போதாது; இங்கே வந்திருக்கும் நீங்கள் திண்ணைதோறும் பிரச்சாரம் செய்யவேண்டும்; தெருமுனைகளில் எல்லாம் பிரச்சாரம் செய்யவேண்டும். அதற்குத்தான் இந்தக் களம்; அந்தக் களமாடுவதற்குத்தான் நம்மையெல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அழைத்திருக்கிறது.
நாங்கள் ஏற்கெனவே அதைச் செய்து வருகிறோம். இந்தப் பிரச்சாரத்தை நீங்கள் வேகமாகச் செய்யுங்கள்!
இளந்தலைவர் ராகுல் காந்திமீது அவர்களுக்கு எவ்வளவு பெரிய வன்மம்? ஏன் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்கள்?
‘‘பந்தை அடிக்க முடியவில்லையானால், காலை அடி” என்று ஒரு பழமொழி உண்டு. இதுதானே அவர்களுடைய அரசியல்.
ராகுல் காந்திமீது அவர்களுக்கு என்ன கோபம்?
பச்சையாக, சமூகநீதியை அவர் வலியுறுத்துகிறார்; இன்றைய காங்கிரஸ் ஒரு புரட்சிகரமான திட்டத்தை, அனைவருக்கும் அனைத்தும் என்ற சமூகநீதியை, இந்தியா முழுவதும் அந்தக் கொடி பறக்கவிடவேண்டும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே அதனை வலியுறுத்தி இருக்கிறது என்பதுதானே அவர்களின் கோபத்திற்குக் காரணம்.
ராகுல் காந்தியின் பயணம்
என்றும் தோற்றுப் போகாது!
ராகுல் காந்தி அவர்கள், இந்த நாட்டில் சிறப்பாக ஒரு புதிய யுகத்தையே உண்டாக்குகிறார். அவருடைய பயணம் என்றும் தோற்றுப் போகாது; அது லட்சியப் பயணமாகும். அதனுடைய விளைவுதான், இன்றைக்கு காஷ்மீர் தலை; கடைகோடி தமிழ்நாடு.
நாடாளுமன்றத்தில் ஏன் அவ்வளவு கோபப்படுகிறார்கள். சாதாரணமாக எங்கேயோ பேசியதை வைத்துக்கொண்டு பொய் வழக்குப் போடுகிறார்கள். அதுவும் கீழ் நீதிமன்றத்தில் திட்டமிட்ட தீர்ப்பு. அது வழங்கப்பட்ட தீர்ப்பா? அல்லது வாங்கப்பட்ட தீர்ப்பா? என்று மக்கள் பேசக்கூடிய அளவிற்கு இருந்த ஒரு தீர்ப்பு அது.
அந்தத் தீர்ப்பைக் காட்டி, ராகுல் காந்தி அவர்களின் வீட்டை 24 மணிநேரத்திற்குள் காலி செய்யவேண்டும் என்று உத்தரவிடுகிறார்கள். இவ்வளவு வேக வேகமாக செய்தீர்களே! அப்போது அவர் எதிர்க்கட்சித் தலைவர் இல்லை. ஆனால், இப்பொழுது அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, உங்கள் கண்களில் விரலை விட்டு ஆட்டக்கூடிய, நீங்கள் அஞ்சக்கூடிய ஒரு சிங்கம்போல நிற்கிறார் அவர்.
அவர் நேரிடையாகக் கேட்கிறார்; பச்சையாக உண்மையைப் பேசுகிறார்; ஜனநாயகத்தை ஸ்கேன் செய்து காட்டுகிறார். அப்படி காட்டுகின்ற நேரத்தில் மிக முக்கியமாக ஒன்றைச் சொன்னார்.
தமிழ்நாடு பெரியாருடைய சமூகநீதி மண்!
‘‘மோடி ஜி அவர்களே, தமிழ்நாட்டிற்கு நீங்கள் எத்தனை முறை போனாலும், நூறாண்டானாலும் உங்களால் தமிழ்நாட்டைப் பிடிக்க முடியாது. காரணம், அது பெரியாருடைய சமூகநீதி மண்” என்று நேருக்கு நேர் நின்று பகிரங்கமாகச் சொன்னார்.
அவர் சொன்னதில் நியாயம் இருக்கிறது. அப்படி அவர் சொன்னதால், அவர்மீது உங்களுக்குக் கோபம்.
‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்து; அனைவருக்கும் அனைத்தையும் கொடு” என்று சொன்னதால்தான் ஆர்.எஸ்.எஸ்.சுக்குக் கோபம்.
அவர்களுடைய தத்துவத்துக்கு நேர் எதிரானதாகும், ராகுல் காந்தி அவர்கள் சொன்னது.
தந்தை பெரியாரின் 146 ஆவது
பிறந்த நாள் ‘விடுதலை’ மலரில்….
இதோ என் கைகளில் இருப்பது, தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் ‘விடுதலை’ மலராகும்.
1925 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியே வந்த தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். இன்றைக்கு அந்த இயக்கம் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
இன்றைக்கு எப்படி காலம் சுழன்றிருக்கிறது என்று சொன்னால், எந்தக் காரணத்திற்காக காஞ்சி புரத்தில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டிலிருந்து வெளியேறினாரோ? அதே காரணத்திற்காக, இன்றைக்குக் காங்கிரஸ் மிகப்பெரிய திருப்பத்தை உருவாக்கியிருக்கிறது என்றால், அதற்குக் காரணம், திருமதி சோனியா காந்தி அவர்களும், ராகுல் காந்தி அவர்களும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருக்கக்கூடிய மல்லிகார்ஜூன கார்கே அவர்களும்தான். இம்மூன்று பேரும் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதற்கான அறிகுறிதான்.
எதிரிகளை கலக்கோ கலக்கென்று கலக்குகிறது; அவர்களையெல்லாம் உலுக்குகிறது!
அதற்கு நாங்கள் ஒரு வாழ்த்துக் கடிதம் எழுதியிருந்தோம். அவர்கள் தமிழ்நாட்டைப்பற்றி நன்றாகப் புரிந்தவர்கள். அதன் காரணமாகத்தான், ஓடிக் கொண்டிருந்த காரை நிறுத்தி, இனிப்புக் கடையைத் தேடி, இனிப்புகளை வாங்கி வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கொடுக்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு சகோதர வாஞ்சை – இப்படிப்பட்ட ஒன்றுபட்ட அரசியல்தான், எதிரிகளை கலக்கோ கலக்கென்று கலக்குகிறது; அவர்களையெல்லாம் உலுக்குகிறது.
அதன் காரணமாகத்தான் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை; வெறுப்பை உமிழ்ந்து கொண்டி ருக்கிறார்கள்.
ராகுல் காந்திமீது ஏன் பா.ஜ.க.வுக்குக் கோபம்; ஏன் அவரைக் கண்டு ஆர்.எஸ்.எஸ்.சுக்கு வெறுப்பு, ஆத்தி ரம் தெரியுமா? இந்த ஒரு கடிதமே அதற்குப் பதிலாக இருக்கும்.
சமூகநீதி என்றால், அவர்களுக்கு அவ்வளவு பெரிய வெறுப்பு; ஒவ்வாமை.
சமூகநீதியை ஒழிப்பதற்காக, ஜாதியைக் காப்பாற்றுவ தற்காக, வருணாசிரமத்தை நிலைநாட்டுவதற்காக, மனுதர்மத்தைக் காப்பாற்றுவதற்காக, மனித தர்மத்தை ஒழிப்பதற்காக, சம தர்மத்திற்கு விடை கொடுப்பதற்காக ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வினர் இதனைச் செய்து கொண்டி ருக்கிறார்கள்.
நல்ல வாய்ப்பாக இது ஆங்கிலத்தில் இருப்பதால், அருமைச் சகோதரர் ஹெக்டே அவர்கள்கூட புரிந்துகொள்கின்ற வாய்ப்பு ஏற்படும்.
ராகுல் காந்தி அவர்கள் எழுதிய கடிதம்!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் 3 ஆம் தேதி கடிதம் எழுதியிருக்கிறார்.
நிறைய ஆதாரங்களோடு பேசுபவர்கள் நாங்கள். ஆதாரமில்லாமல், வாய்க்கு வந்தபடி பேசிவிட்டுப் போகக்கூடியவர்கள் யாரும் இந்த மேடையில் கிடையாது. உண்மையைப் பேசுகிறோம் என்பதற்கு அடையாளம்தான் இது.
On the centenary of the Self Respect Movement, I would like to honour the legacy of Thanthai Periyar and all those who have contributed to the Self Respect Movement.
Thanthai Periyar’s towering intellect and leadership helped crores of people break free from generations of oppression and create a life of dignity. The self-respect movement empowered people to dream of a future that had been denied to their ancestors. The movement helped birth mass political consciousness that helped build a vision of social and economic justice. Periyar’s ideas continue to influence us in profound ways even after a century.
I would like to congratulate the Dravidar Kazhagam on the publication of Viduthalai. I hope the magazine continues to educate a new generation of readers about the ideas that have shaped our society.
உண்மைக்கு அவர்களால் மறுப்புச் சொல்ல முடியவில்லை!
திராவிடர் கழகத்தை, விடுதலையை, சமூகநீதியை, பகுத்தறிவை, பெண்ணுரிமையைப் பாராட்டுகிறார் ராகுல் காந்தி என்றால், இதனை ஆர்.எஸ்.எஸ்.சால் ஜீரணிக்க முடியுமா? அதனால்தான் அவர்கள் மறுப்புச் சொல்ல நினைக்கிறார்கள். உண்மைக்கு அவர்களால் மறுப்புச் சொல்ல முடியவில்லை. ஆகவேதான் அவர்கள் பொய்யுரைகளைப் பரப்புகிறார்கள்.
நீங்கள் ஒருபோதும் ராகுல் காந்தி அவர்களை அசைத்துவிட முடியாது. ராகுல் காந்தி என்பவர் ஒரு தனி நபர் அல்ல; ஒரு தனிக் கட்சியினுடைய தலைவர் அல்ல; அந்தக் கட்சிக்கே நூறாண்டைத் தாண்டிய வரலாறு – இந்தியாவிலேயே எல்லா மாநிலத்திலும் இருக்கக்கூடிய ஒரே ஒரு அகில இந்திய கட்சி – அது தனித்தன்மையோடு இருக்கக்கூடிய ஓர் இயக்கமாகும்.
எனவேதான் சொல்கிறோம், ராகுல் காந்தி அவர்கள்தான் இறுதி வெற்றி பெறுவார்.
பல வெற்றிகளை நமக்கு மக்கள் தருவார்கள்;
சில வெற்றிகளை அவர்கள்
வித்தை காட்டிப் பெறுவார்கள்!
அரியானாவில் நடந்ததைப் பற்றி அருமைச் சகோதரர் ஜவாஹிருல்லா போன்றோர் சொன்னார்கள். ஆம், சில நேரங்களில் பல வெற்றிகளை நமக்கு மக்கள் தருவார்கள். ஆனால், சில வெற்றிகளை அவர்கள் வித்தை காட்டிப் பெறுவார்கள்.
தந்தார்களா? அல்லது இவர்கள் பெற்றார்களா? என்பது ஒரு கேள்விக்குறிதான்.
ஏனென்றால், எல்லாம் ‘தேர்தல் கமிஷன்.’
அந்தத் தேர்தல் கமிஷனுடைய வித்தை என்ன வென்று தெரியவேண்டுமா? பர்காலா அவர்களைக் கேட்டுப் பாருங்கள் – அவர் ஒன்றிய நிதியமைச்சரின் கணவர்.
ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் ராகுல் காந்தியை எதிர்க்கவில்லை; இந்திய அரசமைப்புச் சட்டத்தை எதிர்க்கிறார்கள்.
ராகுல் காந்தி கைகளில், இந்திய அரசமைப்புச் சட்டத்தை வைத்திருக்கின்றார் என்று சொன்னால், அவர் ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறார் என்று அர்த்தம்.
ஜனநாயகத்தைக் காப்போம் –
பாசிசத்தை அழிப்போம்!
எனவே, இங்கே நாம் குழுமியிருப்பது ஜனநாயகத்தைப் பாதுகாக்க. அங்கே இருப்பது பாசிசத்தை வளர்த்தெடுப்பதற்காக. ஜனநாயகத்தைக் காப்போம் – பாசிசத்தை அழிப்போம்!
அதற்கு எங்களிடம் இரண்டு பெரிய போர் வாள்களாக, வடக்கே, இந்தியா முழுவதும் ராகுல் காந்தி அவர்கள் இருக்கிறார். தென் மாநிலத்தில் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இருவரும் இணைந்த கரங்களாக இருக்கிறார்கள்.
மக்கள் மத்தியில் செல்வோம் –
வெல்வோம்! வெற்றி நமதே!
இவர்களால் உருவாக்கப்பட்டதுதான் திராவி டப் பேரியக்கமான இந்தக் கூட்டணி. இந்தக் கூட்டணி யினுடைய விரிவாக்கம்தான் இந்தியா கூட்டணி!
மீண்டும் மக்கள் மத்தியில் செல்வோம் – வெல்வோம்! வெற்றி நமதே! இனிமேல், உங்கள் வித்தைகள் பலிக்காது!
எங்கள் வியூகங்கள் வெற்றி பெறும்!
மிகப்பெரிய அளவிற்கு முன்னெடுத்து செய்யுங்கள்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.