ஆசிரியர் விடையளிக்கிறார்

viduthalai
4 Min Read

கேள்வி 1: அரியானா தேர்தலில் பரப்புரை செய்யக் கூடாதென்று பா.ஜ.க. தலைமையானது மேனாள் முதலமைச்சர் மனோகர்லால் கட்டாருக்கு மறைமுக உத்தரவு பிறப்பித்துள்ளதாக செய்தி வருகிறதே?

– மலரவன், கோவை

பதில் 1: அரியானா தேர்தலில் பா.ஜ.க. தோற்பது உறுதி என்று செய்திகள் பரவலாக வரும் நிலையில் அதிர்ச்சி அடைந்துள்ள பா.ஜ.க. இப்படி எது, எதனையோ கூறி, ‘வைத்தியமாக்கிப் பார்க்கிறது. எண்ணெய் செலவுதானா? பிள்ளை பிழைக்குமா?’ என்பதை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும்.

– – – – –

கேள்வி 2: தென்காசி கழகப் பொதுக்கூட்டத்திலும் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியிலும் கழகப் பேச்சாளர்களுக்கு சங்கிகள் மிரட்டல் விடுத்துள்ளனரே?

– ஆதவன், சைதை

பதில் 2: காவல் துறையினரும் அங்கே கடமை தவறி, சங்கிகளின் மிரட்டலுக்காக அவர்கள் பக்கம் சாய்ந்து நடந்து கொண்டது முறையற்றது – கண்டனத்திற்குரியது. மேடையை அகற்றும்படியெல்லாம் பேசுவது அதீதமானது. உடன் நடவடிக்கை தேவை. தமிழ்நாடு உயர் அதிகாரிகள் கவனிப்பார்களாக.

– – – – –

கேள்வி 3: திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரசியலுக்குள் கடவுளை இழுக்க வேண்டாம் என கண்டித்துள்ளனர். ஆனால், கடவுள்களை வைத்து கலவரம் நடத்தி மூன்றாவது முறையாக ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளதே பா.ஜ.க.?

– வே.காசி, திருத்தணி

பதில் 3: பிள்ளையார் சதுர்த்தி தலைமை நீதிபதி வீட்டில் நடப்பது அவரது தனிப்பட்ட நிகழ்வு. அதற்குப் பிரதமருக்கு அழைப்பு ஏன்? பிரதமர் கலந்துகொண்டதும் மேற்சொன்னவற்றிற்கு முற்றிலும் முரண் நகையாக உள்ளதே! மதச்சார்பின்மை ‘செலக்டிவ்’ (selective) தானா?

– – – – –

கேள்வி 4: “என்கவுண்ட்டர்” என்பது சரியான முறையா?

– மா.முருகன், வந்தவாசி

பதில் 4: சரியானதா, தவறானதா என்று நீங்களும் நானும் கூறக் கூடாது. அங்குள்ள நிலைமைக் கேற்ப காவல்துறை நடந்து, சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவது உலகெங்கும் ஏற்றுக் கொண்ட நடைமுறையே!

ஞாயிறு மலர்

– – – – –

கேள்வி 5: கச்சா எண்ணெய் விலை பன்னாட்டுச் சந்தையில் வீழ்ச்சியானாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மறுக்கும் காரணம் என்ன?

– கந்தன், மதுரை

பதில் 5: அதிக கடன் வாங்கி அரசு நடத்தும் ஒன்றிய அரசு. அதனால் ஒருவழிப் பாதையில் நிதியைப் பெருக்கும் வித்தைகளை இப்படிக் கையாளுகிறது!

– – – – –

கேள்வி 6: “ஒரே நாடு ஒரே தேர்தல்” சாத்திய மில்லை என்று தெரிந்தாலும் அதை அமல்படுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு அதீத ஆர்வம் காட்டுவது ஏன்?

– எழில், நெல்லை

பதில் 6: எதிர்க்கட்சி அரசுகளை ஒரே ஆணை – இச்சட்டம் மூலம் கலைத்துவிடும் சூழ்ச்சித் திட்டமும் பின்னணியில் இருக்கலாம்!
முழு நேர கவனம் – மக்கள் மன்றத்தின் விழிப்புணர்வு எல்லாம் தேவை! மிகவும் தேவை!!

ஞாயிறு மலர்

– – – – –

கேள்வி 7: காசாவை நாசமாக்கிவிட்டு லெபனான் பக்கம் திரும்பியுள்ளதே இஸ்ரேல் – உலக நாடுகள் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனவே?

– செழியன், நாகை

பதில் 7: உலக நாடுகள் மட்டுமா? அய்.நா. என்பதும் வெறும் அரசியல் கொலுதானா? உலகமறிந்த அநியாயம் இது! ஆயுத விற்பனை பெருகவே இந்த அடாவடிப் போர்கள் போலும். போரிடும் உலகத்தை மாற்றி போரற்ற புதிய உலகம் பற்றி யாருமே கவலைப்படவில்லையே… மகா வெட்கக்கேடு.

ஞாயிறு மலர்

– – – – –

கேள்வி 8: கருநாடக முதலமைச்சர் சித்தராமையா மீதும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சிபு சோரன், கெஜ்ரிவால் என்று தொடர்கிறதே – இதற்கு முடிவே இல்லையா?

– வளவன், பெங்களூரு

பதில் 8: ஆட்சி மாற்றம்தான் முடிவு. முந்தைய பொதுத் தேர்தலின்போதே நாம் எச்சரித்தோம். எப்படியோ மைனாரிட்டி அரசு அதன் பொல்லாப்பை தொடர்கதையாக்கி வருகிறது!

– – – – –

கேள்வி 9: தனது மகளுக்கு ஆடம்பரமாகத் திருமணம் செய்து வைத்துவிட்டு, ஈசா யோகா மய்யத்திற்கு வரும் இளம் பெண்களை மொட்டையடித்து சாமியாராக்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளதே?

– மாறன், தென்காசி

பதில் 9: அதுபற்றி ஈஷா – மகா நடிகரை மிஞ்சும் அந்த – யோகா வியாபாரிக்கு என்ன கவலை. அவர் அழைத்தால் பிரதமர், உள்துறை அமைச்சர் – அரசுகள் எல்லாமே செல்கின்றனவே. அதனால் அவர் எந்த எல்லைக்கும், அக்கிரமத்திற்கும் தயாராகவே இருப்பார்.

ஞாயிறு மலர்

– – – – –

கேள்வி 10: ஏழை, நடுத்தர மக்களின் போக்கு வரத்து சாதனமான “ஆட்டோ” கட்டணத்தை முறைப்படுத்த திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுக்குமா?

– தமிழ்ச்செல்வி, சென்னை

பதில் 10: நமது போக்குவரத்து அமைச்சர் பார்வைக்கும், முதலமைச்சரின் கவனத்திற்கும் இது ஈர்க்கப்பட்டு நடவடிக்கை வரும் என்று நம்பலாம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *