2014ஆம் ஆண்டு ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமியர்கள் மீது திடீரென மிகவும் கொடூரமான தாக்குதல்கள் அனைத்து தரப்பில் இருந்தும் ஏவப்பட்டன, இதற்கு ஊடகங்களின் பங்கு மிகவும் அதிகம் இருந்தது. எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அதில் இஸ்லாமியர்களின் பெயரைச் சேர்த்துப் போடுவது அவர்களுக்கு பொழுதுபோக்காகவே போய்விட்டது.
எடுத்துக்காட்டாக முன்னணி ஹிந்தி செய்தி தொலைக்காட்சி – திருப்பதி லட்டு விவகாரத்தில் ‘பிரசாத் ஜிகாத்’ என்று பெயர் சூட்டி செய்தி வெளியிட்டது. திருப்பதி லட்டுக்கும் இஸ்லாமியர்களுக்கும் என்ன தொடர்பு என்று யாருமே கேட்கவில்லை.
மாட்டிறைச்சியை டன் கணக்கில் ஏற்றுமதி செய்பவர் களில் பெரும்பாலானோர் எல்லோருமே ஜெயின்களும், பார்ப்பனர்களும்தான். ஆனால், அவர்களின் நிறுவனங்கள் அனைத்துமே இஸ்லாமிய அரபு பெயர்களில்தான் இயங்குகின்றன.
மாட்டிறைச்சி தொடர்பான அனைத்துச் செய்திகளிலுமே விசாரணைக்கு முன்பே இஸ்லாமியர்களின் பெயர்களை வெகுஜன ஊடகங்கள் விருப்பத்திற்கு ஏற்ப போட்டு விடுகின்றன.
படுகொலைகளுக்கும், பாலியல் வன்கொடுமை களுக்கும்கூட எடுத்த எடுப்பிலேயே இஸ்லாமியர்களின் பெயர்களை ஊடகங்கள் எழுதி விடுகின்றன.
கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் படுகொலைசெய்யப்பட்டபோது திரைப்பட நடிகர் ஒருவர் கொலைகாரர் பிலால்மாலிக் என்று பொதுவெளியில் கூறினார். உடனே ஒரு நாளிதழ் அவரது பேட்டியை அப்படியே கொலைகாரர் இஸ்லாமியர் என்ற பெயரோடு எழுதியது.
பிறகு கொலை செய்தவர் வேறொருவர் என்பது தெரியவந்தும் கூட, தவறான தகவலை வெளியிட்டதற்காக மன்னிப்பு தெரிவிக்கவில்லை.
உத்தராகண்ட் ராம்பூர் பகுதி ரயில் நிலையத்திற்கு சிறிது தொலைவில் ரயில் பாதையில் இரும்புக் கம்பி ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் என்பதால் உடனடியாக கண்டறியப்பட்டு தண்டவாளத்திற்கு குறுக்கே இருந்த கம்பி அகற்றப்பட்டது.
உடனடியாக ஹிந்துத்துவ ஆதரவு ஊடகவியலாளர் சவுரப் என்பவர் ‘இது பாகிஸ்தான் தீவிரவாதிகளின் செயல்’ என்று எழுதினார். உடனே முன்னணி ஹிந்தி செய்தி ஊடகங்கள் ஆரின், இஜாஜ், ஹ்சன், என்று விருப்பத்திற்கு ஏற்ப பெயர்களைக் கூறி இவர்களை தீவிரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கின்றனர்.
ஜம்மு – காஷ்மீர் தேர்தலை முடக்க சதியா என்று எல்லாம் பரபரப்பாக செய்தியை வெளியிட்டனர்.
இந்த நிலையில் காவல்துறை விசாரணையில் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் அப்பகுதியில் தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டும் ஹிந்து நபர்களான சந்திப், ஜித்தேந்திரா மற்றும் டிங்கு என்ற முகேஷ் என்பதும், மூவரும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். தொடர்ந்து வழிப்பறி மற்றும் ரயில்வேக்குச் சொந்தமான இடங்களில் இருந்து இரும்பு பொருட்களை தூக்கிச்சென்று விற்று அதில் வரும் பணத்தில் போதைப்பொருள் வாங்குவார்கள் என்றும் தெரியவந்தது.
மேலும், குற்றம் நடந்த அன்று மூவரும் ரயில் நிலையத்திலேயே குடித்துவிட்டு, இரவில் ரயில் நிலையத்திற்கு அருகே வைக்கப்பட்டிருந்த இரும்புக் குழாயை இழுத்துக்கொண்டு சென்றுள்ளனர். இரும்பு குழாய் முன் பகுதி வளைந்து இருந்ததால் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்டது, மதுபோதையில் இருந்த அவர்கள் அதை கவனிக்காமல் இழுத்துப் பார்த்துள்ளனர். இருப்பினும் அந்தக் கம்பியை வெளியே எடுக்க முடியவில்லை. இதனால் அவர்கள் குழாயை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். .
இது தொடர்பாக ராம்பூரா ரயில்வே காவல்துறையினர் செய்தியும் வெளியிட்டனர். ஆனால், இந்த விவகாரத்தில் முந்திக்கொண்டு இஸ்லாமியர்கள் தொடர்பு என்று செய்தி வெளியிட்ட ஊடகம் அது தொடர்பாக எந்த மன்னிப்பும் கேட்கவில்லை.
கடந்த ஜூன் மாதம் உ.பி. மாநிலம் ஹத்ரசில் உள்ள கோயில் ஒன்றில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு அதில் மனிதக் கழிவுகள் பூசப்பட்டு குப்பையில் கிடந்தன. உடனே, ஜாகிர் உசேன் என்ற இஸ்லாமியர் இதைச் செய்ததாக அர்ச்சகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் குறிப்பிட்ட பெயருடையவர் சிறுவன் என்றும் அவர் அருகில் உள்ள ஊரில் பள்ளியில் படித்துவருகிறார் என்றும் தெரியவந்தது. சிலைகள் சேதமடைந்ததாக கூறப்படும் நாளில் அவர் பள்ளியில் இருந்துள்ளார்.
மேலும் அப்பகுதி கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்த காவல்துறையினருக்கு அங்கே முகத்தை மறைத்த ஒரு நபர் கோவிலில் இருந்து சில பொருட்களை எடுத்து வந்து அருகில் உள்ள கழிவு நீர்குட்டையில் வீசியது தெரிவந்தது.
இதனை வைத்து விசாரணை செய்யும் போது கலவரம் நடக்கும் என்று நினைத்துதான் இவ்வாறு செய்தேன் என்றும் இவ்வாறு செய்வதற்கு வெளியூரில் இருந்து வந்த சில அமைப்பினர் பணமும் கொடுத்தனர் என்றும் கூறினார்.
ஆனால், உத்தரப்பிரதேச அச்சு ஊடகங்கள் உடனடியாக ஜாஹிர் உசைன் ஹிந்துக்களுக்கு எதிரான சதிச்செயலில் ஈடுபட்டார் என்று எழுதினர். இவர்கள் குறிப்பிட்ட ஜாஹீர் உசைன் என்ற சிறுவனின் வயது 11 ஆகும்.
இது ஒரு தொடர் நடவடிக்கையாகப் போய்விட்டது, குற்றச் செயல்களில் விசாரணை தொடங்கும் முன்பே இஸ்லாமியர்களின் பெயரில் தலைப்புச் செய்தியாக எழுதி வெளியிடுகிறார்கள் அப்படி வெளியிட்ட உடனே அரசு விளம்பரங்களும் இதர சலுகைகளும் அந்த ஊடகங்களுக்கு செல்கின்றது. The Reporters’ Collective என்ற ஆய்வு செய்தி ஊடகம் இதை வெளியிட்டுள்ளது.
சலுகைகளைப் பெறுவதற்கும் விளம்பரங்களைப் பெறுவதற்கும் இவ்வாறு அறமற்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் கீழ்த்தரமான செயல் என்று பல அமைப்புகள் வேதனை தெரிவித்துள்ளன. இவ்வாறு செய்திகளை வெளியிட்டால் பொது சமூகத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள், கொலைகள் நடப்பதோடு அவர்களது சொத்துகள் சூறையாடப்படும் என்று தெரிந்துமே தொடர்ந்து இவ்வாறு செய்து வருகின்றனர்.
இப்படி பல எடுத்துக்காட்டுகளைத் தொடர்ந்து கூறிக் கொண்டே வரலாம். இந்த நிலையில் பெங்களூருவில் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு குளிர்ச்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து வந்த நிலையில் – உடனடியாக இந்தியாவின் முன்னணி செய்தி ஊடகமான அச்சு மற்றும் செய்தி தொலைக்காட்சியை நடத்தும் இந்தியா டுடே என்ற செய்தி நிறுவனம். பெங்களூரு பெண் பல துண்டுகளாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட நிகழ்வில் அப்பெண்ணோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்த அஷ்ரப் என்ற கொலைகார நபரைத் தேடுகிறது. காவல்துறை மாடுகளை வெட்டப் பயன்படுத்தப்படும் கத்தியைப் பயன்படுத்தி கொலை நடந்துள்ளது என்றெல்லாம் எழுதித்தள்ளி உள்ளது.
அதாவது மாடுகளை வெட்டுபவர்கள் முஸ்லீம்கள் – அவர்கள் மனிதர்களையும் வெட்டத் தயங்க மாட்டார்கள் என்றும், அதே நேரத்தில் அவர்கள் கள்ளத்தொடர்பு வைத்திருப்பவர்கள் என்றும் செய்தி வெளியிட்டது. ஆனால், உண்மை என்னவென்றால் அந்தக் கொலையைச் செய்த நபர் முக்தி ராய் என்றும், இருவருமே காதலர்கள் ஒரே நிறுவனத்தில் பணி புரிபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
திருமணம் செய்வது தொடர்பான பிரச்சினையில் இருவருக்குமிடையே சண்டை வந்து தள்ளிவிட்டபோது பெண் தலையில் அடிபட்டு இறந்துவிட்டார். என்ன செய்வது என்று தெரியாத முக்தி ராய் உடலை வேறு எங்காவது சென்று போட்டுவிடலாம் என்று எண்ணினார். ஆனால், அனைத்து இடங்களிலும் சி.சி.டி.வி. காமிரா இருந்ததால் வேறு வழியில்லாமல் இறந்த பெண்ணின் உடலை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளார். பின்னர், அவர் தனது சொந்த ஊரான ஒடிசாவிற்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில் கொலை தொடர்பாக காவல் துறையினர் தன்னை தேடுவதை அறிந்து, கைதுக்கு அஞ்சி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா எல்லை மாவட்டமான பத்ரக்கில் உள்ள சிறிய கிராமத்தின் சுடுகாட்டில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இருவருமே காதலர்கள் அவர்களுக்குள் ஏற்பட்ட ஏதோ ஒரு பிரச்சினையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தள்ளுமுள்ளுவில் பெண் தலையில் அடிபட்டு இறந்து விட்டார்.
இதுதான் காவல்துறை தரப்பில் வந்த செய்தி. ஆனால், ஊடகங்கள் உடனே அஷ்ரப் – மாடு வெட்டும் கருவி, கள்ளத் தொடர்பு என்று கதைகட்டி ஹிந்து முஸ்லீம் பதற்றத்தை உருவாக்க உடனடியாக களமிறங்கிவிட்டன.
இப்போது உண்மை வெளிவந்துவிட்டது. இப்போதாவது ஊடகங்கள் அன்று நாங்கள் வெளியிட்ட செய்தி தவறு என்று கூறுமா என்றால் அதுதான் இல்லை.
அவர்களது வேலை பதற்றத்தை உருவாக்குவது மட்டுமே. இந்தப் பிரச்சினை முடிந்த பிறகு அடுத்த நிகழ்விற்கான இஸ்லாமியர்களின் பெயரைத் தேடத் துவங்கி விடுவார்கள்.
முசாபர் நகர் கலவரத்திற்கு காரணம் என்ன? சங்கீத் சோம் என்ற நபர். இவர் தற்போது உபி மாநில சட்டமன்ற உறுப்பினரக உள்ளார்.
முசாபர் நகர் கலவரம் 2013ஆம் ஆண்டு நடந்தது. சஞ்சீவ் தியாகி மற்றும் சஞ்சீவ் ஜீவா என்ற இரண்டு ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட குழு மோதலை ஹிந்து – முஸ்லீம் மோதலாக மாற்றி பெரும் கலவரத்தை ஏற்படுத்தியன ஹிந்துத்துவ அமைப்புகள்.
இக்கலவரம் தொடர்பாக விசாரித்த நீதிபதி விஷ்ணு சகாய் ஆணையம் – இக்கலவரம் தொடர்பாக 700 பக்க அறிக்கையை உபி அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையிலும் ஊடகங்கள் சரியான சான்றுகள் இல்லாமல் செய்திகளை வெளியிட்டதும் கலவரத்திற்கான காரணம் என்று குறிபிட்டிருந்தார்.
10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அந்த அறிக்கையின் மீது உ.பி. பாஜக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.