லண்டனில் பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
லண்டன், செப்.26- லண்டனில் தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா இனிதே நடைபெற்றது.
லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் லண்டன் பெரியார்- அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பாக பெரியார் பிறந்த நாள் விழா கடந்த 22.9.2024 அன்று நடைபெற்றது. நிகழ்வில் 20க்கும் மேலானோர் கலந்து கொண்டனர். நிகழ்வை சிறார் எழுத்தாளர் பஞ்சு மிட்டாய் பிரபு ஒருங்கிணைத்தார்.
சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் ‘புதுமலர்’ இதழ் ஆசிரியர் மற்றும் செயற்பாட்டாளர் கண குறிஞ்சி ‘‘இன்றைய சூழலில் பெரியாரின் தேவை’’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
நிகழ்வில் மூன்று தலைமுறையினர் பங்களிப்பு மிகவும் மகிழ்ச்சி தருவதாக வரவேற்புரையில் பிரபு குறிப்பிட்டார்.
முதல் அமர்வாக ‘‘என் பார்வையில் பெரியார்’’ என்ற தலைப்பில் லண்டன் தமிழ்ப் பிள்ளைகள் பெரியார் குறித்துப் பேசினர்.
பெரியாரின் பொன் மொழிகளை ஏழாம் வகுப்பு படிக்கும் அகரன் எடுத்துரைத்தார். அடுத்து வந்த சாரா (4ஆம் வகுப்பு) ‘‘தன்னை கவர்ந்த பெரியார்’’ குறித்து ஆங்கிலத்தில் பேசினார். பெண் உரிமைக்காகவும் இன பாகுபாட்டை எதிர்த்தும் போராடிய பெரியாரை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.
அடுத்து பேசிய தன்யசிறீ (எட்டாம் வகுப்பு) பெரியார் அவர்களே நேரில் வந்து, தான் யார்? தான் எதற்காக போராடினேன்? என்று கூறுதல் போன்று பேசினார். ‘பெரியார் ஈ.வெ.ராமசாமி என்கிற நான்’ என்ற பெரியாரின் எழுத்தை இவர் எடுத்துரைத்தார்.
சிறு பிள்ளைகள் புலம்பெயர்ந்த இடத்தில் பெரியார் குறித்து பேசியது பார்வையாளர்களை மிகவும் உற்சாகம் அடையச் செய்தது
2017ஆம் ஆண்டு தொடங்கிய படிப்பு வட்டம், வாசிப்பு மற்றும் இணைய வழி கருத்தரங்கங்கள் ஒருங்கிணைப்பு எனும் அறிவார்ந்த தளத்திலும் சரி நீட் எதிர்ப்பு போன்ற நேரடி களப் போராட்டத்திலும் சரி, சமத்துவப் பொங்கல் போன்ற கொண்டாட்டங்களிலும் சரி லண்டனில் இருந்து பல்வேறு செயற்பாடுகளைச் செய்துவருவதாக கபிலன் மற்றும் பெருமாள் ராஜா ஆகியோர் படிப்பு வட்டம் குறித்து உரையாடினர்.
ஈரோட்டுத் திட்டம்!
அடுத்து சிறப்புரை வழங்கிய மூத்த எழுத்தாளர் கண குறிஞ்சி, ‘‘ஆண்களுக்கு இணையாக பெண்களின் பங்களிப்பு இருப்பது தனக்கு மிகவும் உற்சாகமாக உள்ளது’’ என்று குறிப்பிட்டு தனது உரையைத் தொடங்கினார். பெரியார் எந்த இடத்திலிருந்து தனது போராட்டத்தைத் தொடங்கினார் என்று பெரியாரின் இளமைக் கால வரலாற்றிலிருந்து தொடங்கிய உரை பெரியாரின் அய்ரோப்பிய பயணம், அதன் பிறகு நடந்த மாற்றங்கள் என்று உரை தொடர்ந்தது. தந்ைத பெரியார், சிங்காரவேலர் ஆகியோரின் ஆலோசனை அடிப்படையில் தொடங்கிய. ஈரோட்டுத் திட்டம் குறித்து மிகவும் விரிவாகப் பேசினார். அதன் பிறகு சமகாலத்தில் பெரியார் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் என்று சொல்லி பரப்பப்படும் வதந்திகள் குறித்து பெரியார் அவரது காலத்திலே பதில் சொல்லியிருப்பதை விளக்கிப் பேசினார். தமிழ் மொழியை எந்தப் பார்வையில் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் குறிப்பிட்டார்; பெரியார் ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கமே எப்போதும் நின்றுள்ளார் என்பதையும், புரட்சியாளர் அம்பேத்கர் பக்கம் துணை நின்ற வரலாற்று நிகழ்வுகளையெல்லாம் பட்டியலிட்டுக் கூறினார்.
‘‘சுயமரியாதை எஞ்ஜின் கிளம்பிவிட்டது’’ என்று பெரியார் கூறிய நிகழ்வை சிலாகித்துக் கூறினார்.
ஆதிக்கம் இருக்கும் வரை பெரியாரின் தேவை இருந்து கொண்டேதான் இருக்கும் என்றும், இனி வரும் காலத்தில் சிகப்பு கறுப்பு நீலம் என பல்வேறு முற்போக்கு சிந்தனைப் பாதைகள் ஒன்றிணைந்து ஆதிக்கத்தை எதிர்த்து மக்கள் பணியில் நிற்கும் என்று நம்புகிறேன் என்றார்.
உரையைத் தொடர்ந்து ஈரோட்டுத் திட்டம் குறித்தும் தோழர்கள் கலந்துரையாடல் நிகழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து தீபிகா அன்றாட வாழ்வில் பெரியார் எப்படியெல்லாம் நம்முடன் இருக்கிறார் என்று தோழமை களுடன் கலந்துரையாடல் நடத்தினார். இதில் தோழர்கள் தாங்கள் பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் என மக்கள் நல சிந்தனைகளை கண்டடைந்தது குறித்துப் பகிர்ந்துகொண்டனர். நிகழ்வின் நன்றியுரையை பாரதி வழங்கினார்.
நிகழ்வில் லண்டன் பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டத் தோழர்கள் கபிலன், பெரியார் அழகன், ஹரிஷ், சேதுபதி, பாரதி, தீபிகா, பிரபு, பெருமாள் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் . சிலர் குடும்பத்துடன் இணைந்து நிகழ்வை சிறப்பித்தனர்.