கொலீஜியம் பரிந்துரை செய்தும் நீதிபதிகள் நியமன தாமதத்திற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

viduthalai
2 Min Read

புதுடில்லி, செப்.22- கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்தும் பல்வேறு உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யாமல் இருப்பது ஏன்? என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரையின் அடிப்படையில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் பரிந்துரை செய்யப்படுகின்றனர். இதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கும். அதன்பின் குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பிப்பார். இந்த நடைமுறையில் கொலீஜியம் பரிந்துரை செய்தும் அதனை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தாமல் காலதாமதம் செய்து வருகிறது.

அதாவது சென்னை, ஜார்க்கண்ட் உட்பட ஏழு மாநிலங்களின் உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதிகளை உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஜூலை 11ஆம் தேதி பரிந்துரை செய்திருந்தது. இதில் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியை நியமனம் செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியை நியமனம் செய்யாத ஒன்றிய அரசுக்கு எதிராக ஜார்க்கண்ட் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தை ஒரு வாரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் இதுதொடர்பான வழக்கு நேற்று முன்தினம் (20.9.2024) தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஜார்கண்ட் அரசு தரப்பில், ‘கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை நியமனம் செய்யாமல் காலதாமதம் செய்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது’ என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை நியமனம் செய்வதில் தாமதம் ஏன்? அதற்கான காரணம் என்ன? எத்தனை நீதிபதிகள் நியமன பட்டியலில் உள்ளனர்? நியமன பட்டியலில் இல்லாதவர்கள் யார்? அதற்கான புள்ளிவிபரங்களை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும். நீதிபதிகள் நியமன தாமதத்திற்கான வேறு காரணங்கள் ஏதேனும் உள்ளதா?’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒரு வாரத்திற்குள் ஒன்றிய அரசு பதிலளிக்க கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *