1967இல் பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் தந்தை பெரியாரைத் திருச்சியில் சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சட்டமன்றத்தில் தி.மு.க.வின் அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என அறிஞர் அண்ணா குறிப்பிட்டார். சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயரிட்டார்.
தந்தை பெரியார் போற்றிய சுயமரியாதை திருமணத்திற்குச் சட்ட வடிவம் அளித்தார் அறிஞர் அண்ணா. தந்தை பெரியாரின் பெரும் தொண்டை முற்றிலும் அறிஞர் அண்ணா உணர்ந்திருந்த காரணத்தினால்தான், 89ஆம் ஆண்டு பெரியார் பிறந்தநாள் ‘விடுதலை’ மலரின் கட்டுரையில். “பெரியாருடைய பெரும் பணியை ஒரு தனிமனிதன் வரலாறு என்றல்ல, ஒரு சகாப்தம், ஒரு காலக்கட்டம், ஒரு திருப்பம் என்று கூறுவது வாடிக்கை.
அக்கிரமம் தென்படும்போது, மிகப் பலருக்கு அது தன்னைத் தாக்காதபடி தடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், ஒதுங்கிக் கொள்வோம் என்ற பாதுகாப்பு உணர்ச்சிதான் தோன்றும்.
எதிர்த்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் எளிதில் எழுவதில்லை. பெரியார், அக்கிரமம் எங்கிருந்திடக் கண்டாலும், எந்த வடிவிலே காணப்படினும், எத்தனை பக்க பலத்துடன் வளர்ந்து வந்திடினும் அதனை எதிர்த்துப் போராடத் தயங்குவதில்லை” என அறிஞர் அண்ணா குறிப்பிட்டுள்ளார்.