ஓய்வூதியம் பெறுவோர் இனி எந்த வங்கியில் இருந்தும் ஓய்வூதியம் பெறலாம்!

viduthalai
3 Min Read

புதுடில்லி, செப்.11- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்பின்மூலம் செயல்படுத்தப்படும் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர், இனி நாடு முழுவதும் உள்ள எந்த வங்கியில் இருந்தும், அல்லது வங்கி கிளையிலிருந்தும் ஓய்வூதியம் பெற முடியும்.

‘மய்யப்படுத்தப்பட்ட ஓய்வூதிய பட்டுவாடா முறை’க்கு (சிபிபிஎஸ்), ஒன்றிய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரும், இபிஎப்ஓ ஒன்றிய அறங்காவலர் வாரியத் தலைவருமான மன்சுக் மாண்டவியா ஒப்புதல் அளித்துள்ளார்.

மிகப்பெரிய இந்த மாற்றம் தொடர்பாக தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய அளவிலான மய்யப்படுத்தப்பட்ட இந்த அமைப்பு, இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு வங்கி மூலமாகவும், அல்லது எந்த கிளை மூலமாகவும் ஓய்வூதியப் பட்டுவாடாவை செயல்படுத்துகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், “மய்யப்படுத்தப்பட்ட ஓய்வூதிய பட்டுவாடா முறைக்கு ஒப்புதல் அளித்திருப்பது, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நவீனமயமாக்கலில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். ஓய்வூதியம் பெறுவோர், நாட்டின் எந்த இடத்திலும் உள்ள எந்தவொரு வங்கியிலிருந்தும், எந்தவொரு கிளையிலிருந்தும் தங்கள் ஓய்வூதியத்தைப் பெற வழிவகுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியானது, ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால சிக்கல்களுக்கு தீர்வு காண்பதுடன், தடையற்ற மற்றும் திறமையான பட்டுவாடா வழிமுறையை உறுதி செய்கிறது” என்றார்.

இந்த புதிய நடைமுறையின்மூலம் 78 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கி தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம், ஓய்வூதியம் பெறுவதும் எளிமையாக இருக்கும்.

ஓய்வூதியம் பெறுபவர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்றாலோ, அவரது வங்கி அல்லது கிளையை மாற்றினாலும்கூட, ஓய்வூதிய பட்டுவாடா ஆணைகளை ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. இந்தியா முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்படுவதை மய்யப்படுத்தப்பட்ட பட்டுவாடா அமைப்பு உறுதி செய்யும்.

பணி ஓய்வுக்குப் பிறகு சொந்த ஊருக்குச் செல்லும் ஓய்வூதியதாரர்களுக்கு இது பெரும் நிவாரணமாக இருக்கும். இந்த புதிய வசதி, அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும். இந்த புதிய பட்டுவாடா முறையானது அடுத்த கட்டமாக, ஆதார் அடிப்படையிலான பட்டுவாடா தொடர்பான மாற்றத்தை சுமூகமாக செயல்படுத்தும் என்று தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

இனி ஓய்வூதியம் பெறுபவர்கள், ஓய்வூதியம் பெறத் தொடங்கும் நேரத்தில் சரிபார்ப்புக்காக வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. பணம் விடுவிக்கப்பட்டவுடன் உடனடியாக கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும், புதிய முறைக்கு மாறிய பிறகு, ஓய்வூதியம் பட்டுவாடா செய்வதற்கு ஆகும் செலவும் குறையும் என்றும் தொழிலாளர் நலத்துறை குறிப்பிட்டுள்ளது.

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக
ஜனவரி 1ஆம் தேதி வரை
அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டில்லி அரசு தடை விதிப்பு

புதுடில்லி, செப்.11- காற்று மாசை கட்டுப்படுத்து வதற்காக ஜனவரி 1 வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டில்லி அரசு தடை விதித்துள்ளது. டில்லியை சுற்றியுள்ள பகுதிகளில் வேளாண் கழிவுகளை எரிப்பதால் தலைநகரில் கடும் காற்று மாசுபாடு ஏற்பட்டது. கடந்த ஆண்டைப் போல் இவ்வாண்டும் அனைத்து வகையான பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இணையம் மூலம் பட்டாசு விற்கவும் தடை விதிப்பதாக டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.

டில்லியில் தொடர்ந்து காற்று மாசு என்பது இருந்து வருகிறது. இதனால் பல தரப்பட்ட மக்கள் பாதிப்படைகின்றனர். குறிப்பாக தீபாவளி சமயங்களில், பட்டாசு வெடிப்பதன் காரணமாக அதிகளவு காற்றானது மாசடைகிறது. இந்நிலையில், அக்காற்று மாசை கட்டுப்படுத்த டில்லி அரசு பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டில்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு காரணமாக பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது. இணையத்தில் பட்டாசு விற்பனைக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவைக் கடுமையாக பின்பற்ற டில்லி காவல்துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த்துறை ஆகியோருடன் இணைந்து செயல் திட்டங்கள் வகுக்கப்படும். இது காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த 21 முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட டில்லி அரசின் குளிர்கால நடவடிக்கை திட்டத்தின் ஒரு பகுதியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், பட்டாசுகள் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு மற்றும் பயன்பாடு போன்றவற்றிற்கான தடை வருகிற ஜனவரி 1, 2025 வரை அமலில் இருக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *