கலைஞர் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாளில்…!

Viduthalai
1 Min Read

நம் இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம்-

சுயமரியாதைச் சூடேற்றிக் கொள்வோம்!

அரசியல்

இன்று (7.8.2023) ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்” என்று ஒரு வரியில் தன்னை விமர்சித்துக்கொண்ட முத்தமிழறிஞர் கலைஞரின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள். இது ஒரு வரலாற்றுக் குறிப்புதான். தமிழ்நாடும், திராவிட சமூக மக்களும் அவர்தம் பணியால் – ஓய்வறியா உழைப்பால், ஒப்பற்ற சாதனைகளால் பயன்பெறாத வர்களே இல்லை என்ற அளவிற்கு அவர்கள் – ஆட்சி சிம்மாசனத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களின் இதயச் சிம்மாசனத்தில் என்றும் இருப்பவர்.

‘திராவிட மாடல்’ ஆட்சியின் மாட்சி என்பது அறிஞர் அண்ணா – கலைஞர் ஆட்சியின் வரலாற்று நீட்சியாகும்! நமது கலைஞருக்குப் பின் தமிழ்நாடு வெறும் வெற்றிடம் அல்ல; இந்தியாவே வந்து கற்றுச் செல்லும் கற்றிடம் என்பது நாளும் புரிகிறது!

கலைஞரது குருகுல ஆசான் தந்தை பெரியார்போலவே, உடலால் மறைந்த பிறகும், அவர்களின் இன எதிரிகள் அவர்களது புகழைப் பரப்பக் காரண மாக இருப்பது ஓர் அதிசய ஒற்றுமை!

பெரியார் அஞ்சல் தலை, பெரியார் திரைப்படத்திற்கு தி.மு.க. அரசு உதவி ஆகியவற்றின்போதும் இன எதிரிகள் நீதிமன்றம் சென்றனர். அண்ணா நினை விடத்தில், அண்ணாவின் அருகே கலைஞருக்கு இட ஒதுக்கீடு வழக்கு, பேனா நினைவுச் சின்னம் வைத்தல் ஆகியவற்றை எதிர்த்து அழிவழக்குகள்  – முடிவு வெற்றி வெளிச்சம்!

அந்த எதிர்ப்பு அத்தலைவர்களின் தகத்தகாய ஒளியை – மேலும் பிரகாசமாக்கியதுதான் நமக்குப் பெருவரவு!

அந்த எதிர்நீச்சல் கலை, அவர்கள் இருவரும் நமது திராவிட நாயகராம் முதலமைச்சருக்கு தந்த வாரிசுடைமை!

வரித்துக்கொண்டே நம் இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம் என்று சூளுரைப்போம்!

சுயமரியாதைச் சூடேற்றிக் கொள் வோம்!

வாழ்க கலைஞர்!

வெல்க திராவிடம்!

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை
7.8.2023

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *