மீண்டும் தொடர்கதையாகும் மாட்டிறைச்சிப் படுகொலைகள்

viduthalai
3 Min Read

மும்பையில் முதியவயது இஸ்லாமியரை மாட்டிறைச்சி வைத்திருந்த குற்றத்திற்காக பலர் முன்னிலையில் அடித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர். குற்றவாளிகள்மீது சாதாரண பிரிவில் வழக்குப் பதிவு செய்து உடனே பிணையில் வெளியே விட்ட நிலையில், இந்தியா கூட்டணி சட்டமன்ற உறுப்பினரின் முயற்சியால் குற்றவாளிகள் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்கள்.

மகாராட்டிர மாநிலத்தில் ஆகஸ்ட் 28ஆம் நாள், ஜல்கவுன் மாவட்டத்திலிருந்து கல்யாண் என்கிற பகுதிக்கு, தனது மகளைக் காணச் சென்ற ஹாஜி அஷ்ரஃப் என்கிற முதியவரை, மாட்டிறைச்சி எடுத்துச் சென்றார் என 7 குண்டர்கள் கடுமையாகத் தாக்கினர்.

தாக்கியதோடு மட்டுமல்லாமல், அதனை காணொளியாகவும் படம் பிடித்தனர். அக்காணொளி இணையத்தில் வெகுவாகப் பரவி, தேசிய அளவில் கண்டனங்களைச் சந்தித்தது.

இதனையடுத்து, தாக்குதலுக்கு உள்ளான முதியவர் அஷ்ரஃப் காவல்துறையினரிடம் ஆகஸ்ட் 31 அன்று, இறைச்சி எடுத்துச்சென்றதற்காக தாக்கிய 7 பேர் மீதும் புகார் அளித்தார்.

அப்போது, தன்னை அவர்கள் கொல்லத் திட்டமிட்ட தாகவும், கல்யாண் பகுதியில் இறங்க அனுமதிக்கவில்லை என்றும், தன்னிடம் இருந்த பணத்தைப் பறித்துக் கொண்டதாகவும் புகார் அளித்திருந்தார்.

ஆனால், புகாரை ஏற்றுக்கொண்ட மகாராட்டிர காவல்துறை, அக்குண்டர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய ஒப்புக் கொள்ளாமல் இலகுவாக பிணை கிடைக்கும் வகையில் வழக்குப்பதிவு செய்தது. அதற்கேற்ப வழக்குப்பதிவு செய்யப்பட்ட 24 மணிநேரத்தில் குண்டர்களுக்குப் பிணையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஹாஜி அஷ்ரப்பிடம் இருந்து கொள்ளை அடித்து, அவரை கொலை செய்ய முயன்ற நிலையிலும், ஏன் குண்டர்கள் மீது காவல்துறை கடுமையான குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யவில்லை என இந்தியா கூட்டணியில் பங்கு கொண்டுள்ள தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) சட்டப்பேரவை உறுப்பினர் ஜித்தேந்திர அவ்ஹாத் அழுத்தம் கொடுத்தார்.

காவல்துறை வேறு வழியின்றி குற்றப்பிரிவுகளை வலுப்படுத்த, மகாராட்டிர நீதிமன்றமும், வழங்கிய பிணையைத் திரும்பப்பெற்று அனைவரையும் சிறையில் அடைத்தது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வட இந்தியாவில் 4 இஸ்லாமிய இளைஞர்கள் பசு மாடுகளைக் கடத்தினார்கள் என்ற பெயரில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அக்த்லாக் என்ற முதியவர் வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்த நிகழ்விற்குப் பிறகு நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான இஸலாமியர்கள் கொல்லப் பட்டனர். இதனை ஒட்டு மொத்த நாடும் வேடிக்கை பார்த்தது.

இந்த நிலையில் ஆரியன் மிஸ்ரா என்ற பார்ப்பன இளைஞரை இஸ்லாமியர் என்று நினைத்து பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் இயங்கும் கும்பல் சுட்டுக்கொலை செய்தனர். வட இந்தியாவில் இது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கொல்லப்பட்ட ஆரியன் மிஸ்ராவின் தந்தை ‘‘பசுவை கடத்துபவர்களைக் கொலை செய்ய மோடியும், பாஜக அரசும் யாருக்கு அதிகாரம் கொடுத்துள்ளனர்? பிராமண சிறுவனைக் கொலை செய்ததால் இந்த அரசுக்கு பாவம் வந்து சேரும்’’ என்று சாபம் விட்டுள்ளார்.

கொல்லப்பட்டது ஆரியன் மிஸ்ரா என்ற பார்ப்பனர் என்று ஊடகங்களுக்குத் தெரிந்தது.
பசுப் பாதுகாவலர்கள் தவறுதலாக கொலை செய்து விட்டனர் என்று எழுதுகிறார்கள். பார்ப் பனர்கள் அல்லாதார் என்றால் கொலை செய்யலாமா?

இது என்ன கொடுமை – பா.ஜ.க. ஆளும் ஒன்றிய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி பச்சைப் பாசிச ஆட்சி என்று சொன்னால் மூக்குப் புடைக்கும் ஜென்மங்கள் – பசுவைக் ‘கோமாதா’ என்று தூக்கிப் பிடித்து, இப்படிக் கொடூர கொலைகாரத் தாண்டவம் ஆடுகிறார்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

பசு பாதுகாப்பு என்ற பெயரில் பச்சைத் தமிழர் காமராசரை – டில்லியில் பட்டப் பகலில் சங்பரிவார்களும், ஜனசங்கத்தினரும், சங்கராச்சாரி யார்களும், நிர்வாண சாமியார்களும் – காமராசர் இருந்த வீட்டைத் தீ வைத்துக் கொளுத்தி (1966) அவரைக் கொலை செய்ய முயன்ற கூட்டம் – இப்பொழுது ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் போது என்னதான் செய்யாது?

தேவை மக்கள் விழிப்புணர்வு! இது ஒன்றுதான் பாசிசத்திற்குச் சவக் குழி வெட்ட ஒரே வழி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *