கல்வியில் சமய பாடங்களா? சி.பி.எம். எதிர்ப்பு

Viduthalai
2 Min Read

சென்னை, ஆக.29 கல்வியில் மதத்தைத் திணிக்கும் வகையில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு நடத்திய முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் திரும்பப் பெற வேண்டும் என திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஎம்) வலியுறுத்தி உள்ளது. மேலும் மதச்சார்பின்மைக்கும் ஊறுவிளைவிக்கும் வகையிலும், பிற்போக்கு வலதுசாரி சக்திகளுக்கு ஆதரவாகவும் இந்து சமய அறநிலை யத்துறை செயல்படுவது ஏற்புடையதல்ல என்றும் சிபிஎம் சாடியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: இந்து சமய அற நிலையத் துறையின் சார்பில் ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் பழனியில் ‘முத்தமிழ் முருகன் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கந்தசஷ்டி

பாராயணம் : அதில் “முருகன் திருக்கோ யில்களில் மாணவ – மாணவிகளைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது, இந்தத்துறையின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மீகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்துவது, துறையின் கீழ் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் முருக பக்தி இலக்கியங்களை மய்யப்படுத்தி போட்டிகள் நடத்துவது” என்பன போன்ற தீர்மானங்கள் ஏற்கத்தக்கவை அல்ல.

மதத்தில் இருந்து விலகி நில்லுங்கள்: மதத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படை ஆகும். எந்த ஒரு மதக் கோட்பாட்டையும் பரப்புவது அரசின் பணியாக இருக்க கூடாது. மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பேணி பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு கல்வித்துறையில் மதச்சார்பின்மைமிக்க மாநிலமாக திகழ்கிறது.

அரசியல் சாசனத்துக்கு எதிரானது: அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கு என்று தனி கல்விக் கொள்கை அறிவித்து அதற்கான நிபுணர் குழுவையும் அமைத்து அதன் பரிந்துரைகளையும் அரசு பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது முருகன் மாநாட்டு தீர்மானங்கள் கல்வியை மதச்சார்புடையதாக்குவது மட்டுமின்றி மாணவர்களையும் அறிவியல் சிந்தனைக்கு எதிராக வளர்த்தெடுக்கவே பயன்படும். மேலும் மாணவர்களை மத ரீதியாக பிளவுபடுத்துவது மதச்சார்பின்மை என்னும் அரசமைப்புச் சட்ட நெறிகளுக்கு எதிராக அமைந்துள்ளது என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

கோவில் சொத்துகளை கொள் ளையடிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் – பாஜக பரிவாரங்கள் கலகங்களை ஏற்படுத்தி வருகின்றனர். இதை முறியடிக்கும் நோக்கத்தில் அரசுப் பணிகளை மேற்கொள்வதை விடுத்து அறிவியலுக்கும், மதச்சார்பின்மைக்கும் ஊறுவிளைவிக்கும் வகையிலும், பிற்போக்கு வலதுசாரி சக்திகளுக்கு ஆதரவாகவும் இந்து சமய அறநிலை யத்துறை செயல்படுவது ஏற்புடையதல்ல. கல்வியில் சமயப் பாடங்களை புகுத்தும் முருகன் மாநாட்டு தீர்மானங்களை செயல்படுத்தக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *