பிஜேபிமீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
பெங்களூரு, ஆக.. 27- கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சட்ட உறுப்பினர்களுக்கு தலா ரூ.100 கோடி வழங்குவதாக பேரம் பேசுவதாக பா.ஜனதா மீது காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கனிக ரவிக்குமார் கருநாடகத்தின் மண்டியாவில் நேற்று முன்தினம் (25.8.2024) செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ரூ.100 கோடி பேரம்
கருநாடகத்தில் காங்கிரஸ் அரசு, பாறையை போல் உறுதியாக உள்ளது. இதை யாராலும் அசைக்க முடியாது. ஆனால் பா.ஜனதா தலைவர்கள் பி.எல். சந்தோஷ், ஷோபா, பிரகலாத் ஜோஷி மற்றும் மத்திய அமைச்சர் குமாரசாமி ஆகியோர் காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள். காங்கிரஸ் அரசு 5 ஆண்டுகள் நிலைத்து நீடிக்கும். சித்தராமையா வளர்ச்சி பணிகளை மேற்கொள்வார்.
காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதாக அவர்கள் பிரதமர் மோடியிடம் உறுதியளித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் பா.ஜனதாவின் புரோக்கர்கள் தலா ரூ.100 கோடி வழங்குவ தாக பேரம் பேசுகிறார்கள். இதற்கு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பலியாக மாட்டார்கள். இதற்கான சாட்சியை நாங்கள்திரட்டி வருகிறோம். அதை அதிகாரிகளிடம் கொடுப்போம். முதலமைச்சர் மாற்றம் குறித்து நான் பேச மாட்டேன். நடைப் பயணம் நடத்திய விவகாரத்தில் பா.ஜனதாவுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.
வியூகம் வகுக்கிறோம்
முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர அனுமதி வழங்கியுள்ள ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக சட்டமன்ற உறுப்பினர்கள் 136 பேரும் ஒன்றுபட்டு போராடுகிறோம். முதலமைச்சரை சிக்க வைக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன பா.ஜனதாவின் தந்திரத்தை தோற்கடிக்க நாங்கள் வியூகம் வகுக்கிறோம். விசாரணைக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் பொது அறிவை பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆளுநர் தவறான முடிவு எடுத்துள்ளார்.
பா.ஜனதாவின் முகவர் போல் ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநர் டில்லியில் இருந்தபோது அவரை தேவேக வுடா, குமாரசாமி ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர்.
அதன் பிறகே ஆளுநர், முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்குதொடர அனுமதி வழங்கியுள்ளார். ஆளுநர் சட்ட விரோதமாக நடந்து கொண்டுள்ளார்.
-இவ்வாறு அவர் கூறினார்.