இதுதான் குஜராத் மாடலோ!

Viduthalai
2 Min Read

குஜராத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வெளிநாடுகளில் குடியேறி என்.ஆர். அய்.க்களாக மாறிய பிறகும் தொடர்ந்து ஊதியம் பெற்று வருகின்றனர்.
இந்த ஆசிரியர்கள் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்காமல் இருந்ததோடு மட்டுமல் லாது, அவர்கள் பணியாற்றும் பள்ளிகளிலோ அல்லது குறைந்தபட்சம் இந்திய நாட்டிலோ கூட இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது
9 மாதங்களுக்கும் மேலாக பள்ளிக்கு வராமல் அல்லது எந்தக் கற்பித்தல் பணியும் மேற்கொள்ளாத சுமார் 135 பள்ளி ஆசிரியர்களை குஜராத் அரசு காலங் கடந்து பணியிடை நீக்கம் செய்துள்ளது.

பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ஓர் ஆசிரியை அமெரிக்கா குடியுரிமை பெற்ற பிறகும் அவருக்குக் குஜராத் அரசு ஊதியம் அளித்துக் கொண்டு இருந்ததை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டிய பின்னர் தான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
பவ்னா பட்டேல் என்ற அந்த ஆசிரியை எட்டு ஆண்டுகளாக பணிக்கு வரவில்லை. அமெரிக்காவில் குடியேறியுள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து குஜராத் அரசிடமிருந்து ஊதியம் பெற்று வந்துள்ளார்.

அவர் தொடர்ந்து ஊதியம் எதுவும் பெறவில்லை என்று குஜராத் அரசு அதிகாரிகள் கூறினாலும், இத்தனை ஆண்டுகளாக யாருக்கும் தெரியாமல் பவ்னா பட்டேல் எப்படி பணிக்கு வராமல் இருக்க முடிந்தது என்பது குறித்த விவரங்களை மாநில கல்வித்துறை இன்னும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் குஜராத் மாநிலத்தில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பள்ளிக்கே நீண்ட காலமாக வரவில்லை என்பதோடு, அதில் 50 க்கும் மேற்பட்டோர் எப்போதோ அமெரிக்கா, லண்டன் மற்றும் அயர்லாந்து போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று குடும்பத்தோடு தங்கி விட்டனர். இருப்பினும் அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1.15 லட்சம் வரை
ஊதியம் குஜராத் பள்ளிக்கல்வித்துறை கொடுத்து வந்திருக்கிறது.

பிஜேபி ஆளும் குஜராத் மாநிலத்தின் யோக்கியதையும், நிர்வாகத் தன்மையும் எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஒன்று போதாதா?
கேட்டால் எதற்கெடுத்தாலும் ‘குஜராத் மாடல்’ ‘குஜராத் மாடல்’ என்று மார் தட்டிப் பேசுகிறார்கள்.
கல்விக் கூடத்திற்கு வராமலேயே, ‘வெளி நாடுகளில் குடும்பத்தோடு குடியேறி மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் 50க்கு மேற்பட்டோர் குஜராத் அரசு கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவதாக ஆயிரக் கணக்கான மற்றும் இலட்ச ரூபாய்க்கும் அதிகமாக மாதந்தோறும் ஊதியம் வாங்கி வரும் மோசடி ஊடகங்கள் வழியாக வெளிவந்த நிலையில் வேறுவழியின்றி இப்பொழுதுதான் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஓர் ஆசிரியர் 8 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்காவில் இருந்து கொண்டு ஊதியம் வாங்கினார் என்றால், எத்தகைய பெரும் மோசடி!
வெளிநாடுகளில் இருந்து கொண்டே சீரங்கம் கோயில் அர்ச்சகர்கள் என்று சொல்லிக் கொண்டு ஊதியம் பெற்றுக் கொண்டதும் இப்பொழுது நினைவிற்கு வந்து தொலைகிறது!.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *