உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் சிறந்த முயற்சி

Viduthalai
2 Min Read

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
டி.ஒய். சந்திரசூட் முன்னெடுப்பால் உச்சநீதி மன்ற நீதிபதிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அங்குள்ள ஊழியர்களுக்கு ‘லாபதா லேடீஸ்’ என்ற திரைப்படம் திரையிடப் பட்டுள்ளது.
பாலின உணர்வுகளின் மதிப்பு குறித்த விழிப்புணர்வை உச்சநீதிமன்ற நிர்வாகிகளுக்கு ஏற்படுத்தும் விதமாக தலைமை நீதிபதி சந்திரசூட் இந்த முன்னெடுப்பை செய்ததாகக் கூறப்படுகிறது.
உச்சநீதிமன்றத்தின் நிர்வாகக் கட்டட வளாக அரங்கத்தில் இந்தத் திரையிடல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் கிரண் ராவ் மற்றும் தயாரிப்பாளர் அமீர் கான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட் ”உச்சநீதிமன்ற ஊழியர் களுக்கு பாலின உணர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த என் முயற்சியால் இந்த திரையிடல் நடத்தப்படுகிறது.

அதிகம் வெளியில் கவனப்படுத்தப்படாத பல விடயங்கள் உச்சநீதிமன்றத்தில் நடக்கின்றன. இப்போதுகூட, உச்ச நீதிமன்ற ஊழியர்களின் சிகிச்சை மற்றும் ஓய்விற்கு முழு நேர ஆயுர்வேத மருத்துவமனையையும் கொண்டு வந்துள்ளோம். இந்தத் திரையிடல் அனைவருக்கும் இடையிலான பிணைப்பை அதிகப்படுத்த உதவும்” என தெரிவித்தார்.
‘லாபதா லேடீஸ்’ திரைப்படம் இந்த ஆண்டு மார்ச் 1 அன்று வெளியானது. நிதன்ஷி கோயல், பிரதிபா ரந்தா, ஸ்பர்ஷ் சிறீவஸ்தவா, சாயா கடம் மற்றும் ரவி கிஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தப் படம், புதிதாக திருமணமான பெண்கள் இருவர் தங்கள் கணவர்களின் வீட்டிற்குச் செல்லும் பயணத்தில் தவறுதலாக மாறிவிடுவதாகவும், அதன் பின்னர் நடக்கும் நிகழ்வுகள் குறித்தும் நகைச்சுவையாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசுகிறது.

எந்த நோக்கத்தில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும் தலைமை நீதிபதியின் இந்த முயற்சி வரவேற்கத் தக்கதே!
அதிகம் வெளியில் கவனப்படுத்தபடாத பல விடயங்கள் உச்சநீதிமன்றத்தில் நடக்கின்றன என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி – எந்தப் பொருளில் சொல்லியிருக்கிறார் என்ற ஆராய்ச்சியில் இறங்கத் தேவையில்லை.
இந்தத் திரைப்படம் அனைவருக்கும் இடையிலான நல்லிைணப்பை அதிகப் படுத்த உதவும் என்று தலைமை நீதிபதி கூறியதால், ஆண் – பெண் சமத்துவத்தை நேசிப்போருக்கு மன நிறைவைத் தருகிறது.
நீதிபதி ஒருவர் இத்தகைய முயற்சியை மேற்கொண்டிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
நீதிமன்றத்தில் அமர்ந்து கொண்டு தேவையில்லாத – தமக்குள்ள எல்லையைத் தாண்டி விமர்சிக்கும் வார்த்தைகளைக் கொட்டும் நீதிபதிகள் நிலவும் ஒரு நாட் டில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் நற்சிந்தனையும், ஆக்க ரீதியான செயல் பாடும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *