குண்டு வெடிப்பு நிகழ்வில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேச்சு ஒன்றிய அமைச்சர் ஷோபா மன்னிப்பு கேட்க உயர் நீதிமன்றம் கெடு

viduthalai
2 Min Read

சென்னை, ஆக.8- குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி கருத்து தெரிவித்த ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே வருகிற 15ஆம் தேதிக்குள் செய்தியாளர் சந்திப்பை நடத்தி மன்னிப்பு கேட்க வேண்டும். என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம்’ கபே என்ற உணவகத்தில் நடந்த குண்டு வெடிப்பு நிகழ்விற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் காரணம் என கருநாடக மாநிலத்தை சேர்ந்த ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்த லஜே பேசினார். இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, தி.மு.க. சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இரு பிரிவினர் இடையே கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், ஷோபா சார்பில் மனுத்தாக்கல் செய்யப் பட்டுள்ளது.

இந்த மனு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, செய்தியாளர் சந்திப்பு நடத்தி மனுதாரர் ஷோபா மன்னிப்புக் கேட்டால் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்று தமிழ்நாடு அரசுக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டு இருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று (7.8.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஒன்றிய அமைச்சர் ஷோபா மன்னிப்புக் கோரினால் அதை ஏற்க தயார். அதேநேரம், தவறாக பேசியதற்கு மன்னிப்புக் கோருகிறேன். தமிழ் மக்கள் மீது மரியாதை வைத்திருக்கிறேன்.இனி இப்படி பேசமாட்டேன் என்று ஷோபா தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

ஷோபா தரப்பில் ஆஜரான வழக் குரைஞர், செய்தியாளர் சந்திப்புக்கு பதில் மன்னிப்புக் கோரி பிரமாண மனுவை மனுதாரர் தாக்கல் செய்வார் என்று கூறினார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, “செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ் மக்கள் குறித்து இவ்வாறு ஒரு கருத்து தெரிவித்துள்ளார். அப்படி யென்றால், செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்புக்கோரினால்தான் சரியாக இருக்கும்” என்று கூறினார். பின்னர், இந்த வழக்கை வருகிற 16ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறேன். அதற்குள் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *