புதுடில்லி, ஆக 7- ‘ஜன் தன் வங்கிக் கணக்கு மற்றும் அடிப்படை சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்கத் தேவையில்லை’ என்று மாநிலங்களவையில் ஒன்றிய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார். வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத காரணத்தால் பொதுத் துறை வங்கிகள் பொதுமக்களிடம் இருந்த கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8,500 கோடி அபராதம் வசூலித்ததாக ஒன்றிய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாநிலங்களவை யில் நேற்று (6.8.2024) கேள்வி நேரத்தின் போது நிர்மலா சீதா ராமனிடம் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கு அபார தத் தொகையை வங்கிகள் வசூ லித்துவிட்டன என்பதுபோல கேள்வி எழுப்பப்படுகிறது. உண்மையில் ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளான ஜன் தன் வங்கிக் கணக்கு மற்றும் அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்குகளில் இருந்து அபாரதம் வசூலிக்கப்படவில்லை. இத்தகைய வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்கத் தேவையில்லை.
வங்கிகளில் பிற வகை கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிப்பது அவசியம். அந்த வகைக் கணக்கு களில் இருந்துதான் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது’ என்று பதிலளித்தார்.
ரூ.9.99 லட்சம் கோடி கடன் நீக்கம்:
கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகளின் கணக்குப் புத்தகத்தில் இருந்து ரூ.9.99 லட்சம் கோடி வாராக் கடன் நீக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்தது. இது தொடா்பாக நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சவுத்தரி எழுத்துமூலம் அளித்த பதிலில், ‘இந்திய ரிசா்வ் வங்கி வழிக்காட்டுதல் மற்றும் வங்கிகளின் நிர்வாகக் குழு ஒப்புதலின்படி 4 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வாராக்கடன் வங்கிக் கணக்குப் புத்தகத்தில் இருந்து நீக்கப்படுவது வழக்கமாகும். இதன்படி கடந்த 5 ஆண்டுகளில் ரூ.9.99 லட்சம் கோடி வாராக் கடன்கள் நீக்கப்பட்டுள்ளன. 2019-2020 நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.2.34 லட்சம் கோடி வாராக்கடன் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் வங்கிக் கணக்கில் இருந்து நீக்கப்பட்ட வாராக்கடனில் ரூ.1.84 லட்சம் கோடி திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது. இது கணக்கில் இருந்து நீக்கப்பட்ட வாராக்கடனில் 18 சதவீதமாகும்.
வங்கிகளின் கணக்குப் புத்தகத்தில் இருந்து வாராக் கடனை நீக்குவது என்பது அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டது என்ற அா்த்தமாகாது. அக்கடன் திரும்ப வசூலிக்க தொடா் நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில் வங்கிகளின் நிர்வாக வசதிக்காக கணக்குப் புத்தகத்தில் இருந்து மட்டும் அக்கடன் நீக்கப்படும் என்று ஏற்கெனவே விளக்கமளிக்கப்பட்டுள்ளது.