தொடரும் ரயில் விபத்துகள் ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்து நாசமான ரயில் பெட்டிகள் உ.பி.யில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள்

Viduthalai
2 Min Read

சகாரன்பூர், ஆக.5 ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விரைவு ரயிலின் காலி பெட்டியொன்றில் நேற்று (4.8.2024) தீ விபத்து ஏற்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதாகவும் ரயிலின் வேற எந்த பெட்டிகளும் சேதமடையவில்லை எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். கோர்பா-விசாகப்பட்டினம் விரைவு ரயில் பிளாட் பாரத்தில் பயணிகளை இறக்கிவிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, ரயிலின் ‘பி-7’ குளிர் சாதன பெட்டி திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரா்கள் உடனடியாக தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதனால் மற்ற பெட்டிகள் சேதமின்றி தப்பின என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும் ஒரு ரயில் விபத்து!
பயணிகள் ரயில் தடம் புரண்டது
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ரயில் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்புர் ரயில் நிலையத்தில் நேற்று (4.8.2024) பகல் 1.30 மணியளவில் பயணிகளை இறக்கிவிட்டு அதன்பின் பணிமனைக்கு சென்று கொண்டிருந்த டில்லி – சஹாரன்புர் மெமு பயணிகள் ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது. இந்த விபத்தில், நல்வாய்ப்பாக பிற ரயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை.

அதிகரித்து வரும் ரயில் விபத்துகள்
காங். விமர்சனம்
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ரயில் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரயில்வே துறை அமைச்சரை விமர்சித்து, எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 1.8.2024 அன்று ஆக்ரா ரயில் கோட்டத்தின் ரயில் கட்டுப்பாட்டுத் துறையில் அதிகாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
ஜூலை 31-ஆம் தேதியன்று மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி ரயில் கோட்டத்தில் உள்ள ரங்கபாணி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

ஜார்க்கண்டில் ஜூலை 30-ஆம் தேதியன்று அதிகாலை மும்பை நோக்கி சென்ற ஹவுரா – மும்பை விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.
ஜூலை 29-ஆம் தேதியன்று பீகார் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலின்’ என்ஜின் குதிராம் போஸ் பூசா ரயில் நிலையத்துக்கும் கர்ப்பூரி கிராம் ரயில் நிலையத்துக்கும் இடையே பயணித்துக் கொண்டிருக்கும்போது, தனியாகக் கழன்று சென்ற நிகழ்வில் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த நிலையில், பாஜக ஆட்சியில் ரயில் விபத்துகள் அதிகரித்துவருவதாக குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ், ரயில்வே அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவை விமர்சித்து வெளியிட்டுள்ள பதிவில், ‘ரயில்’வே அமைச்சர் அல்ல; ‘ரீல்’ அமைச்சர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ‘ரீல்’ அமைச்சரைப் பொறுத்தவரையில், இதுபோன்ற ‘சிறிய’ சம்பவங்கள் ‘பெரிய’ நகரங்களில் தொடர்ந்து ஏற்படும் என்றும் விமர்சித்துப் பதிவிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *