பெரியார் பெருந்தொண்டர் காரைக்கால் ஜெயபாலன் படத்திறப்பு தாம் மட்டும் பெரியார் கொள்கையை ஏற்று வாழவில்லை; தமது குடும்பத்தையும் கொள்கைக் குடும்பமாகவே வைத்திருந்தார்!

Viduthalai
8 Min Read

படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வில் ஜெயபாலனுக்குப் புகழாரம்!

காரைக்கால், ஆக.3- அவர் மட்டும் பெரியார் கொள்கையை ஏற்று வாழவில்லை; அவரது குடும்பத்தையும் கொள்கை குடும்பமாகவே வைத்திருந்தார் என்று பெரியார் பெருந்தொண்டர் காரைக்கால் ஜெயபாலன் படத்திறப்பு,–நினைவேந்தல் நிகழ்வில் ஜெயபாலனுக்கு கழகத்தினர் புகழாரம் சூட்டினர்!
பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி, காரைக்கால் மாவட்ட கழக காப்பாளர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரெ.ஜெயபாலன் அவர்களின் நினைவேந்தல், படத்திறப்பு 28.7.2024 அன்று நிரவி திருவள்ளுவர் தெரு, பெரியார் இல்லத்தில் காரைக்கால் மாவட்ட கழகத் தலைவர் குரு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் காரைக்கால் மாவட்ட கழக செயலாளர் பொன்.பன்னீர் செல்வம் வரவேற்றார்.

அரசு அலுவலகத்திலிருந்த
பிள்ளையார் சிலையை அகற்றியவர்!
குரு.கிருஷ்ணமூர்த்தி தலைமையுரையில் பேசும் போது, மறைந்த ஆசிரியர் ஜெயபாலன் அவர்கள் தனது இளமைப் பருவத்தில் இருந்து திராவிடர் கழகத்தின் மீது பற்று கொண்டு வாழ்ந்தவர். காரைக்கால் மாவட்டக் கழகத்திற்கு ஒரு தூணாக இருந்தவர் இவரின் செயல்பாடுகள் கழகத்திற்குப் பயனுள்ளதாக இருந்தது. எங்களுக்கெல்லாம் அவ்வப்போது அறிவுரை கூறி, செய்யவேண்டிய பணிகளைத் தொய்வின்றி காலத்தோடு செய்து முடிப்பதற்கு ஊக்கமாக இருந்தவர். காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிள்ளையார் சிலை ஒன்று பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது. அரசு அலுவலகத்தில் மத அடையாளமாக இருந்த அந்தப் பிள்ளையார் சிலையை அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்குக் கடிதம் கொடுத்து, அதனை அங்கிருந்து அகற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர் ஜெயபாலன் அவர்கள். கடைசிவரை பெரியாரின் கொள்கை வழி வாழ்ந்து மறைந்தார் என அவரின் செயல்பாட்டை நினைவூட்டி பேசினார்.

அவருடன் நட்பில் இருந்த காரைக்கால் மாவட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவரும், தலைமை ஆசிரியருமான காளிதாசன் பேசும்போது, ஆசிரியர்களின் சமூக நலனுக்காக எங்களோடு இணைந்து பணியாற்றியவர் அவர். தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் பெரியாரின் கொள்கைகளையே கடைப்பிடித்து பரப்பி வந்தவர் அவரின் மறைவு எங்க ளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறினார்.

நமக்கெல்லாம் பாடமாக – கொள்கை வீரராக
வாழ்ந்து மறைந்து இருக்கின்றார்
புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி பேசும்போது, ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை வல்லத்தில் நடைபெறும் குழந்தைகள் பழகு முகாமிற்கு அவரது குடும்பத்தில் இருந்து ஒரு பேரக் குழந்தையை பழகு முகாமிற்கு அழைத்து வந்து விடுவார். அல்லது அனுப்பி வைத்து விடுவார். இந்த ஆண்டு கூட அவருக்கு உடல் நலக் குறைவு இருந்தபோதும், தனது பேரனை பழகு முகாமிற்கு அழைத்து வந்திருந்தார். அவரால் காரில் இருந்து கீழே இறங்க முடியாத நிலையிலும், காரில் அமர்ந்து கொண்டே நீண்ட தூரம் பயணித்து வந்தது, அவர் பெரியாரின் கொள்கை மீது கொண்டிருந்த உறுதியை காட்டியது.
எந்நேரமும் கழகம், கொள்கை பெரியார், ஆசிரியர் என பார்க்கும் எல்லோரிடமும் கொள்கையை சொல்லிக் கொண்டே இருப்பார். இன்று அவர் நம்மிடையே இல்லை என்றாலும், அவர் பேரக் குழந்தைகளை நமக்கு மூன்றாவது தலைமுறை கொள்கை வாரிசாக தந்து சென்று இருக்கின்றார். அவர் மட்டும் பெரியார் கொள்கையை ஏற்று வாழவில்லை, தனது குடும்பத்தையும் கொள்கை குடும்பமாகவே வைத்திருந்தார். இன்றைக்கும் அவர்கள் கொள்கையை கடைப்பிடித்து எந்த மூடப்பழக்கங்களுக்கும் ஆளாகாமல் வாழ்ந்து வருகின்றனர். இவர் நமக்கு பாடமாக கொள்கை வீரராக வாழ்ந்து மறைந்து இருக்கின்றார் அவருக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

புதுச்சேரியின் மேனாள் அமைச்சர்
புதுச்சேரியின் மேனாள் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் பேசும்போது, கொள்கை பிடிப்புள்ள ஒரு பெரியாரின் தொண்டராக இறுதி வரை வாழ்ந்து மறைந்து இருக்கின்றார். அவர் இந்த சமூகத்திற்கு பயனுள்ள ஒருவராக வாழ்ந்துள்ளார் என்பதை இங்கு பேசியவர்கள் அனைவரும் குறிப்பிட்டார்கள் பெரியார் தொண்டர்கள் சுயநலம் இல்லாமல் பொது நலத்திற்காக பாடுபடக் கூடியவர்கள். எந்த பதவி ஆசைகளுக்கும் ஆட்படாமல் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து கொண்டு தொண்டு செய்யக்கூடியவர்கள் இவர் ஒரு சிறந்த குடும்ப தலைவராகவும் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்து பெரியாரின் கொள்கைகளையும் கற்றுக் கொடுத்து குடும்பத்தையே கொள்கை குடும்பமாக மாற்றி இருக்கும் கொள்கைக்கு வீரர். இவர் ஒரு சிறந்த விவசாயியாகவும் விளங்கி இருக்கிறார்.

இந்தக் காலத்தில் விவசாயம் செய்ய வேண்டுமானால் எவ்வளவு சகிப்புத்தன்மையோடு இருக்க வேண்டும் என்பதை நான் ஒரு விவசாயி என்ற முறையில் நன்கு உணர்ந்தவன் மறைந்த ஆசிரியர் அவர்களும் பெரியாரின் கொள்கையை ஏற்றுக் கொண்டதால் அந்த சகிப்புத்தன்மையோடு ஒரு சிறந்த விவசாயியாக இருந்திருக்கிறார். இவரின் வாழ்க்கையை நாம் ஒரு பாடமாக கற்றுக் கொண்டு வாழ வேண்டும் என்று, படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஜெயபாலன் அவர்களின் கொள்கை வளர்ப்பு மருத்துவர் வைக்கம்மதி அவர்களின் மகள் இனியமதி தன் தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றை பிறப்பு முதல் இறப்பு வரை சுருக்கமாக விளக்கிப் பேசினார்.

என் தாத்தாவின் பேச்சும், மூச்சும்
இறுதிவரை பெரியாரின் கொள்கைதான்!
என் தாத்தாவின் பேச்சும், மூச்சும் இறுதிவரை பெரியாரின் கொள்கை சிந்தனைகளாகவே இருந்தன. எங்களை எவ்வித மூட பழக்கங்களுக்கும் ஆளாகாமல், பெரியாரின் கொள்கைகளை மட்டுமே சொல்லிக் கொடுத்து வளர்த்தார். நாங்கள் ஆண்டுதோறும் தஞ்சை வல்லத்தில் நடைபெறும் குழந்தைகள் பழகு முகாமில் கலந்து கொண்டு கொள்கைப் பயிற்சி பெற்றவர்கள் எங்கள் தாத்தா ஜெயபாலை நினைக்கும் போது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. அதற்கு இன்னும் பெருமை சேர்க்கும் வகையில் எனது தாத்தா இறந்த செய்தி கேட்டு எங்கள் குடும்பத் தலைவர் தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘விடுதலை’யில் இரங்கல் செய்தி எழுதியதைப் படித்து மிகவும் பெருமை அடைந்தேன்.
தமிழர் தலைவர் ஆசிரியரின் இரங்கல் செய்தியை துண்டறிக்கைகளாக எடுத்து இறுதி நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் காரைக்கால் மாவட்டத்தின் கழகத் தோழர்கள் வழங்கினார்கள்.

‘‘பெரியாரைப் பேசாத நாள் பிறவாநாள்” என்று ஆசிரியர் அடிக்கடி சொல்வது போல், எங்கள் தாத்தா பெரியாரை பற்றி பேசாத நாளே இல்லை. எங்கள் தாத்தா சொன்னது போல், அவர் இறந்த பிறகு எவ்வித சடங்குகளும் இல்லாமல், பகுத்தறிவு முறைப்படி அடக்கம் செய்தோம். நான், எனது அம்மா, எனது அத்தைகள் எல்லோரும் இறுதி ஊர்வலத்தில் சென்று, அடக்கம் செய்யும் இடம் வரை சென்று, அடக்கம் செய்துவிட்டு வந்தோம். சுடுகாட்டிற்குப் பெண்கள் செல்லாத எங்கள் ஊரில், பெரியாரின் கொள்கைப் புரட்சியினை, அவரது கொள்கை வாரிசுகளான நாங்கள் செய்து காண்பித்தோம் எல்லோரும் இதனை வியப்பாக பார்த்துk் பேசியது எங்களுக்கு கிடைத்த கொள்கை வெற்றியாகவே கருதினோம்.
இன்று படமாக காட்சி தருகின்ற எங்கள் தாத்தா, எங்களுக்கு பாடமாகவே இருக்கின்றார். அவர் கற்றுத் தந்த கொள்கை வழியில் வாழ்வோம் என்று இந்த நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வில் உறுதியேற்கிறார்; எங்கள் தாத்தாவிற்கு வீரவணக்கம்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! என்று பேசி முடித்தார்.

படத்தைத் திறந்து வைத்து
தஞ்சை இரா.ஜெயக்குமார் நினைவேந்தல் உரை
ரெ.ஜெயபாலன் அவர்களின் படத்தினை திறந்து வைத்துப் பேசிய கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், காரைக்கால் பகுதியில் பெரியாரின் கொள்கை வளர்வதற்கும், பெரியாரின் கருத்துகளைப் பிறரிடம் கொண்டு சேர்ப்பதற்கும் ஒரு முக்கியமானவராக இருந்தவர் மறைந்த ஜெயபாலன் அவர்கள். அவர் பெரியாரின் கொள்கைகளை ஏற்று அதன் வழியே வாழ்ந்தவர் என்பதற்கு அடையாளமாக, தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் போராட்டத்தை நினைவு கூரும் வகையில், தனது மகளுக்கு வைக்கம்மதி என்று பெயர் வைத்திருக்கின்றார்.
மருத்துவர் வைக்கம் மதி அவர்கள் தனது தந்தை காட்டிய கொள்கை வழியில், ஒரு சிறந்த மருத்துவராக, பலரும் போற்றும் வகையில் பணி செய்து வருகிறார். தனது பிள்ளைகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும் தமிழிலேயே பெயர் வைத்திருக்கிறார். பெரியாரின் கொள்கையை நிரவியில் விதைத்திருக்கிறார்.

பெரியார் தொண்டர்கள்
தங்களுக்காக வாழக்கூடியவர்கள் அல்ல!
‘‘விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்கு வதில்லை’’ என்பது போல், அவரின் கொள்கை வாரிசுகளாக, தனது பேரன்களையும், பேத்திகளையும் மூன்றாவது தலைமுறையாக நம்மிடையே விட்டுச் சென்று இருக்கின்றார். பெரியார் தொண்டர்கள் தங்களுக்காக வாழக்கூடியவர்கள் அல்ல அவர்கள் இந்த சமுதாய வளர்ச்சிக்காகவும், மாற்றத்திற்காகவும் வாழக்கூடியவர்கள். அப்படி வாழ்ந்து மறைந்தவர் தான் இன்று நம்மிடையே படமாக இருக்க கூடிய ஜெயபாலன் அவர்கள்.
ஏன் படத்திறப்பு விழாவை நடத்துகிறோம் என்றால், இந்த சமூகத்திற்காக ஆற்றிய தொண்டு, அவரால் ஏற்பட்ட மாற்றங்கள், அவர் இந்த சமூகத்தில் எப்படி வாழ்ந்தார் என்பதை மற்றவர்களும் தெரிந்து கொண்டு, அதன்படி வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற படத்திறப்பு விழாக்களை நடத்தி வருகின்றோம்.
அவர் ஆசிரியராக பணியாற்றினாலும், பெரியாரின் கொள்கையை பரப்புவதில் தீவிரமாக இருந்து இருக்கிறார். அவருக்கு முழு ஆதரவாக இருந்த அவரது இணையர் சந்திரா ஜெயபால் அவர்களை இந்த நேரத்தில் நாம் பாராட்டுவது சிறப்பானதாக இருக்கும்.

தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள் மனிதன் தானாகவும் பிறக்கவில்லை தனக்காகவும் பிறக்கவில்லை என்று. பிறப்பு சாதாரணமாக இருந்தாலும் இறப்பு மற்றவர்கள் போற்றும் வகையில் இருக்க வேண்டும். அப்படி மற்றவர்கள் போற்றும் வகையில் தனக்காக வாழாமல் பிறருக்காகவும் வாழ்ந்து மறைந்து இருக்கின்றார் ஆசிரியர் ஜெயபாலன் அவர்கள். நாங்கள் காரைக்கால் வரும்போதெல்லாம் அன்பாக கொள்கை உறவோடு வரவேற்று மகிழக்கூடியவர். தான் ஏற்றுக் கொண்ட பெரியாரின் கொள்கையை தன்னோடு நிறுத்திக் கொள்ளாமல் குடும்பத்தையும் கொள்கை குடும்பமாகவே வைத்திருக்கின்றார். அவரது மகன் செந்தமிழன் காரைக்கால் மாவட்ட துணைச் செயலாளராக கழக பணியாற்றி வருகிறார் என்பது பெருமையாக இருக்கிறது.

ஆசிரியர் பணியில் இருந்த போது பகுத்தறிவாளர் கழக செயலாளராகவும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு காரைக்கால் மாவட்ட துணைத் தலை வராகவும் அவர் இறக்கும்போது காரைக்கால் மாவட்ட காப்பாளராகவும் இருந்து சிறப்பாக கழக பணியாற்றியவர். இவர் நிறைய மாணவர்கள் படிப்பதற்கு உதவி செய்து அரசுப் பணிகளிலும் சேர்த்து விட்டு இருக்கின்றார்.
பெரியார் தொண்டர்கள் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக வாழ வேண்டும் என்பதற்கு இவர் ஒரு அடையாளம். பெரியாரின் பகுத்தறிவு கொள்கை வழி வாழ்ந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிதடத்தில் பயணித்தவர். இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்றாலும் பெரியாரின் கொள்கையை ஏற்று இவரை போல் வாழ வேண்டும்.
இனிவரும் ஒவ்வொரு நினைவு நாளின் போதும் அதனை கொள்கை விளக்க பிரச்சாரமாக ஒரு பொதுக்கூட்டமாக அவர் குடும்பத்தார் நடத்த வேண்டும் என்று கோரிக்கையும் வைத்து பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *