சரணாகதி தத்துவம்! சரணடைதலால் என்ன பயன்?

viduthalai
1 Min Read

கீதையில் பகவான், ‘‘அர்ஜூனா நீ என்னையே சரணடை. உன்னை நான் எல்லா பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்‘‘ என்கிறார். இறைவனிடம் சரணடைவதால் நல்ல புத்தியைத் தருவார். உனது எல்லா சுமைகளையும் ஏற்றுக்கொள்வார். அப்போது எல்லாவித நோய்களும் உன்னைவிட்டு ஓடிவிடும்.

– பகவான் ராமகிருஷ்ணனர்

(ஆர்.எஸ்.எஸ். வார இதழ், ‘விஜயபாரதம்‘, 12.7.2024, பக்கம் 35)
கிருஷ்ணனை சரணடைந்தால் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிப்பாராம்!
எல்லாப் பாவங்களையும் ஒரு கடவுள் விடுவிப்பார் என்றால், நாட்டில் பாவங்கள் செய்ய யார்தான் அஞ்சுவார்கள்?
கொலை செய்யலாம், கொள்ளை அடிக்கலாம் – சுருக்கமாக சொல்லப்போனால் அவர்கள் சொல்லுகிறார்களே பஞ்சமாபாதகம் (கொலை, களவு, மது, பிறன் மனைவிமீது காமம், குரு நிந்தனை) எல்லாவற்றையும் செய்யலாம்.
பார்ப்பனர்களின் சங் பரிவார்களின் அகராதிப்படி இவற்றையெல்லாம் ஈவு இரக்கமின்றி, அறிவு நாணயமின்றித் துணிச்சலாக செய்யலாம்; குற்றமில்லை; ஒரே ஒரு நிபந்தனை – பகவான் கிருஷ்ணனை சரணடைந்தால் இந்தப் பாவங்கள் எல்லாம் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடு ஓடு என்று தலைதெறிக்க ஓடிவிடும்.

ஒரு ஒழுக்கமான கடவுளைக் கற்பிக்கக் கூட யோக்கியதை இல்லாதவர்கள் என்பது இதன்மூலம் வெள்ளிடை மலையாகத் தெரியவில்லையா?
வேதங்களில் இவர்கள் பாடி துதிக்கும் இந்திரன் கவுதம முனிவரின் மனைவியைத் திருட்டுத்தனமாகக் கலவி செய்து, முனிவரின் சாபத்திற்கு ஆளாகி உடல் முழுவதும் என்ன குறி ஏற்பட்டது என்பதைப் பச்சையாகச் சொல்லவேண்டுமா?

முதலில் ‘விஜயபாரதம்‘ சுட்டிக்காட்டும் பகவான் கிருஷ்ணன், குளத்தில் குளிக்கச் சென்ற பெண்களின் ஆடைகளைத் திருடி, மரத்தில் ஏறிக்கொண்டு, நிர்வாணத்தை ரசித்தவன்தானே!

”பக்தி தனிச் சொத்து, ஒழுக்கம் பொதுச்சொத்து” என்ற தந்தை பெரியார் எங்கே – இந்தக் கூட்டத்தின் பகவான் – பக்தி மார்க்கம் எங்கே? எங்கே?

– மயிலாடன்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *