பெங்களூரு, ஜூலை 17- கடந்த 11ஆம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், வரும் 31ஆம் தேதி வரை நாள்தோறும் விநாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு கருநாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கருநாடக அரசு, விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீரை திறப்பதாக தெரிவித்தது.
இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபிணி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று (16.7.2024) மாலை 7 மணி நிலவரப்படி கிருஷ்ண ராஜசாகர் அணைக்கு விநாடிக்கு 25 ஆயிரத்து 933 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது.
இதனால் 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் 107.60 அடியாக உயர்ந்துள்ளது. ஹேமாவதி அணைக்கு 14 ஆயிரத்து 550 கன அடி நீரும், ஹாரங்கி அணைக்கு 12 ஆயிரத்து 827 கன அடி நீரும் வந்துகொண்டிருக்கிறது.
மைசூருவில் உள்ள கபிணி அணைக்கு விநாடிக்கு 29 ஆயிரத்து 360 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் 19.52 டிஎம்சி முழு கொள்ளளவைக் கொண்ட கபிணி அணையின் கொள்ளளவு 19.25 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது.
அணையின் பாதுகாப்பை கருதி விநாடிக்கு 40 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே காவிரி கரையோரத்தில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.