நாம் மதத்தால் வேறுபட்டாலும் மனதால் ஒன்றுபட்டவர்கள்! என் சுயமரியாதை மட்டுமல்ல, உன் சுயமரியாதையும் முக்கியம்!

Viduthalai
5 Min Read

இதுதான் திராவிடர் இயக்கத்தின் அடித்தளம்!
ஏர்வாடி நாற்பெரும் விழாவில் ஆசிரியர் கி. வீரமணி எழுச்சி உரை!

ஏர்வாடி, ஜூலை 6– நாம் மதத்தால் வேறுபட்டாலும் மனதால் ஒன்றுபட்டவர்கள்! என் சுயமரியாதை மட்டுமல்ல, உன் சுயமரியாதையும் முக்கியம்! இதுதான் திராவிடர் இயக்கத்தின் அடித்தளம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் நடைபெற்ற நாற்பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். திருநெல்வேலி தி.மு.க. கிழக்கு மாவட்டச் செயலாளர்
இரா. ஆவுடையப்பன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் இணைந்து, ஏர்வாடி பேருந்து நிலையம் அருகில் நேற்று (5.7.2024) மாலை 6 மணிக்கு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு, மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்ட ணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி பாராட்டும் விழா என நாற்பெரும் விழாவாக கழகக் கொடிகள், பதாகைகள் என சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் களக்காடு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வ கருணாநிதி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மேனாள் சட்டப்பேரவைத் தலைவர், திருநெல்வேலி தி.மு.க. கிழக்கு மாவட்டச் செயலாளர் இரா.ஆவுடையப்பன் முன்னிலை வகித்து உரையாற்றினார். ஆசிரியர், ஆவுடையப்பன் ஆகி யோருக்கு ஏர்வாடி பேரூர் தி.மு.க. செயலாளர் அயூப்கான் நினைவுப் பரிசுகள் வழங்கினார். ஆசிரியர் வருகை அங்கிருந்த மக்களிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. அவரவர் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு ஆசிரியர் உரையைக் கேட்க ஆவலுடன் இருந்தனர்.

காந்தியாருக்கு பெரியார் எழுதிய கடிதம்!
நிறைவாக ஆசிரியர் தனது உரையை திராவிடர் இயக்கத்தின் மதக்கண்ணோட்டம் பற்றியதாக அமைத்துக் கொண்டு உரையாற்றினார். சுயமரியாதை இயக்கம் பற்றி பேசும் போது 100 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற வைக்கத்தில் இருந்து தொடங்கினார். அண்ணல் காந்தி அவர்களே வைக்கம் போராட்டத்தில் பெரியாருக்கு முட்டுக்கட்டையாக இருந்ததையும், ‘வைக்கத்தப்பன் கோயில் தெருவில் நாய் போகிறது, பன்றி போகிறது, கழுதை போகிறது இவையெல்லாம் சத்தியாகிரகம் செய்து விட்டா இந்த உரிமையைப் பெற்றன’ என்று பெரியார், காந்தியாருக்குக் கடிதம் எழுதிவிட்டு போராட்டத்தைத் தொடர்ந்ததை முதலில் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் முதல் மனித உரிமைப் போர் அது என்பதையும் சொல்லத் தவறவில்லை அவர். அந்த மனித உரிமைப் போராட்டத்தில் பெரியார் வெற்றி பெற்றதை எடுத்துரைத்தார்.

மனிதர்களை அல்ல, மதவெறியை மாய்ப்பதுதான் தீர்வு!
அதைத் தொடர்ந்து காந்தியார் படுகொலை செய்யப்பட்டதை குறிப்பிட்டவர், மராத்தி சித்பவன் பார்ப்பனரான கோட்சே காந்தியாரை படுகொலை செய்த போது, அதை மதக்கலவரமாக மாற்ற சூழ்ச்சி நடந்த சூழலில், தந்தை பெரியார் திருச்சி வானொலியில், ‘‘சுட்டது இசுலாமியன் அல்ல, மராத்தி பார்ப்பனர்தான்’’ என்று சொல்லிவிட்டு, ‘‘அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் வைத்ததையும், கோட்சே அம்பு, எய்தது மதவெறி. பார்ப்பனர்களைத் தாக்குவது என்பது துப்பாக்கிக்குத் தண்டனை வாங்கித் தருவது போல, மதவெறியை மாய்ப்பதுதான் இதற்குத் தீர்வு என்று பேசி, தமிழ்நாட்டில் மதக்கலவரம் ஏற்படாமல் தடுத்தவர் பெரியார்’’ என்ற வரலாற்றுத் தகவலை எடுத்துரைத்து, இதுதான் திராவிடர் இயக்கத்தின் சாதனை என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு, அதனால்தான் தமிழ்நாட்டில் ‘‘மோடி மஸ்தான் வேலை’’ எடுபடவில்லை. அதனால் தான் நீங்கள் 40–க்கு 40 வெற்றியைத் தந்திருக்கிறீர்கள் என்று பலத்த கையொலிகளுக்கிடையே குறிப்பிட்டார். மேலும் அவர், வடபுலத்தில் மதக்கலவரங்கள் உண்டு. தமிழ்நாட்டில் கிடையாது என்று மொரார்ஜி தேசாய் அவருடைய புத்தகத்தில் எழுதியிருக்கும் புதிய தகவலை வெளியிட்டார்.

ஏன் இன்னமும் திராவிடர் இயக்கம் தேவை?
மேலும் அவர், என்னுடைய சுயமரியாதை மட்டும் முக்கிய மல்ல, மற்றவர்களின் சுயமரியாதையும் முக்கியம். இதுதான் சுயமரியாதையின் தத்துவம்! அந்த தத்துவத்திற்குத்தான் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம்! ஏன் இன்னமும் பெரியார் தேவை? ஏன் இன்னமும் அண்ணா தேவை? ஏன் இன்னமும் கலைஞர் தேவை? ஏன் இன்னமும் திராவி டர் இயக்கம் தேவை? என்று கேள்விகளாக அடுக்கி, பேத மில்லாத பெருவாழ்வு, அனைவருக்கும் அனைத்தும் இதற்குத்தான்! என்று முடித்ததும் கூடியிருந்த மக்கள் உணர்வுப்பூர்வமாக பலமாக கையொலிகளை எழுப்பினர். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையும், ராகுல் காந்தியையும் பாராட்டிப் பேசினார். இந்த மத இணக்கத்தை திராவிடர் இயக்கம் எப்படி சாதித்து என்பதற்குப் பேரறிஞர் அண்ணா ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரராக இருந்து இசுலாமியராக மாறி நடித்த நாடகத்தைக் குறிப்பிட்டுக் காட்டி, “சமூகநீதி வெற்றி பெற வேண்டுமானால் திராவிடர் இயக்கம் வெற்றி பெற வேண்டும். இது சில மனிதர்களின் வெற்றி அல்ல; அவர்கள் வெற்றி பெற்றால்தான் சமூக நீதி வெற்றி பெறும். அதைத்தான் நீங்கள் செய்திருக்கிறீர்கள். நன்றி! நன்றி! நன்றி! என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இசுலாமியர்கள் ஆசிரியரிடம் காட்டிய வாஞ்சை!
ஏர்வாடியில் ஆசிரியர் முதன்முதலாக கலந்துகொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் ஆசிரியரிடம் மிகுந்த மரியாதை காட்டி அவருக்கு மரியாதை செய்து மகிழ்ந்தனர். முன்னதாக கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார். நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் ஆசிரியர் மேடையிலிருந்து கீழே இறங்கி, ஏராளமாக கூடியிருந்த இசுலாமியப் பெண்களிடம் சென்று விசாரித்தார். அவர்கள் மிகுந்த வாஞ்சையுடன் ஆசிரியரிடம் கைகுலுக்கி, விசாரித்தனர். அக்காட்சியே ஆசிரியர் பேசியதற்கான சான்றாக இருந்தது. நிகழ்ச்சி முடியும் வரையிலும் மக்கள் இருந்து கருத்துகளை கேட்டு விடைபெற்றுச் சென்றனர்.

பங்கேற்று சிறப்பித்தவர்கள்!
நிகழ்ச்சியில் ஏர்வாடி பேரூர் தி.மு.க. செயலாளர் அயூப்கான், வள்ளியூர் நகர பகுத்தறிவாளர் கழகத் தலை வர் ந.குணசீலன், வள்ளியூர் நகர தி.மு.க. செயலாளர் சேதுராமலிங்கம், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கல்வத் மற்றும் சாகித், சேரன்மாதேவி ஒன்றியச் செயலாளர் செல்வ. சுந்தர சேகர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சித்திக், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. குணசேகரன், வள்ளியூர் நகர பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் வெள்ளப்பாண்டி, நெல்லை மாநகர் ப.க. தலைவர் முருகன், நெல்லை மாநகர் ப.க. துணைச் செயலாளர் ஜார்ஜ், மாவட்ட ப.க. தலைவர் சந்திரசேகரன், மாவட்ட ப.க. செயலாளர் திருமாவளவன், மாவட்ட கழக செயலாளர் வேல்முருகன், நெல்லை நயினார், மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜார்ஜ் கோசல் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். அனைத்து கட்சிகளைச் சார்ந்தவர்களும், பொதுமக்களும் ஏராளமாக கூடியிருந்து நிகழ்ச்சியை கண்டு கேட்டு சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *