ஆர்.எஸ்.எஸ். துவங்கி நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் நாள் இன்னும் 4 மாதங்களில் வரவிருக்கிறது, அகண்டபாரதக் கனவு இனி நிறைவேறாது. ஆனால், அவர்களின் குருவான கோல்வால்கரின் கட்டளைகளில் உள்ள ஹிந்து மக்களுக்கான ஹிந்து வேதத்தின் முறையில் அரசமைப்பு, பாரதம், காவிக்கொடி போன்றவைகள் நனவாகப் போகிறது என்று மோடி இதை மறைமுக முழக்கமாகவே அதாவது ‘சார் சோ பா’ (400 அய் தாண்டி) என்று முழங்கினார்.
ஆனால், சில காவி தலைவர்கள் மோடியின் மறைமுகமான இந்த முழக்கத்தை 400 அய் தாண்டி வந்த பிறகு அரசமைப்பை மாற்றுவோம் என்று உடைத்துவிட்டனர். அதுதான் மிகப் பெரும் புயலாக மாறி இன்று பல் பிடுங்கப்பட்ட பாம்பாக மோடி அரசாங்கம் மாற்றப்பட்டு பாம்பை அடிக்க எதிர்க் கட்சிகளின் கைகளில் பிரம்பு போன்ற அதிகாரம் வழங்கப்பட்டு விட்டது. ஒரு வேளை ஜூன் 4ஆம் தேதி 400-அய் தாண்டி இருந்தால் இன்று ஆர்.எஸ்.எஸ். சங்கிக் கூட்டங்கள் வேறுவிதமாகவே கொண்டாடியிருக்கும்.
மக்களவைத் தோ்தலில் பாஜக பெரும்பான்மையைப் பெறாத நிலையில் ஆர்.எஸ்.எஸ்.சானது, பாஜக மற்றும் பிரதமர் மோடி மீதான கருத்துகளை வெளிப்படையாக வைக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் குறிப்பிடுகையில், ‘உண்மையான சேவகர் (மக்களுக்குச் சேவை செய்பவர்), ஆணவம் (அஹங்கார்) கொண்டிருக்கக் கூடாது. கசப்பான தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘நல்லொழுக்கம் பின்பற்றப்படவில்லை. மற்றவா்களை காயப்படுத்தக் கூடாது. கண்ணியம், கட்டுப்பாடு காட்டப்படாத பிரச்சாரமாக இருந்தது’ என குறிப்பிட்டார்.
ஜனநாயக அரசியல் கலாச்சாரத்திற்கு ஆதரவளிக்கும் ஆர்.எஸ்.எஸ்.யின் நிகழ்ச்சியில், ‘மணிப்பூர் மோதலுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. அரசுக்கும் எதிர்க் கட்சிகளுக்குமிடையே ஒரு மித்த கருத்து தேவை. ஆா்.எஸ்.எஸ். எப்போதும் எதிர்க் கட்சிகளை ‘விரோதி’யாக கருதவில்லை. மாற்றாக அவர்கள் ‘எதிர் முனை’யில் இருந்தாலும் ‘இணை’ (பிரதிபக்ஷ்)யாகவே கருதுகிறது’ என்கிற கருத்துக்களையும் வைத்தார் பாகவத்.
‘ஈகோவாக உள்ள ஒரு தலைவர்’ எப்படி தன்னை ‘சேவக்’ என்று அழைத்துக் கொள்ள முடியும்?’ எனக் குறிப்பிட இது மோடியையோ பாஜக தலைகளையோ குறிவைத்து பேசப்படவில்லை என்று சொல்லமுடியாத அளவிற்கு பாகவத் பேச்சு அமைந்தது. பிரதமர் மோடி தான் பிரதான் மந்திரியல்ல – பிரதான் சேவக் என்று வா்ணித்துக் கொண்டது வெளிப்படையானது.
தாக்குதல் இத்தோடு நிற்கவில்லை… ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் போன்றவர்கள், ‘ராம் பக்தர்’ என்று கூறிக்கொள்ளும் ‘திமிர் பிடித்த(ஆணவ)’ கட்சியை ராமர் பெரும்பான்மை பெறவிடாமல் தடுத்து நிறுத்தினார்’ என்றனர். இப்படி விமர்சனப் பட்டியல் நீளுகிறது…
ஆனால், ஜூன் 4ஆம் தேதிக்கு முன்னர் நடந்தவைகள் ஏராளம்!
தேர்தல் பிரச்சாரத்தின் உச்சத்தில் நாடு இருக்கும் போது, ஒரு ஆங்கில நாளிதழுக்கு பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா அளித்த பேட்டியில், ‘முன்பு ஆர்.எஸ்.எஸ்.அய் சார்ந்து இருந்தது பாஜக. இப்போது தேவையில்லை. கட்சி பெரிதாக வளர்ந்து விட்டது’ என்றார். இது ஒரு குடும்பப் பாங்கான பதில் தான். சூழ்நிலை சரியாக இருந்தால் வேறு விவகாரம்.
ஆனால் ‘ஆர்எஸ்எஸ் இந்த தேர்தலில் சரியாக பணியாற்றவில்லையா?‘ என்கிற கேள்விக்கு நட்டாவின் பதில் இது. இதற்கு ஆர்எஸ்எஸ் ஸில் மட்டுமல்ல நடுநிலை
பாஜகவினர் மத்தியிலும் எதிர்ப்பு. பணியாற்றாவிட்டாலும் அல்லது இது உண்மை என்றாலும் பத்திரிகையாளரை சமாளிக்க நட்டா சொன்ன பதில் கட்சியினரை திகைக்க வைத்தது. இது ஏற்கெனவே இருந்த வேறுபாடுகளை அதிகரிக்க வைத்துவிட்டது. இதனால் தேர்தலில் பாஜக பெரும்பான்மையின்மையைப் பெறத் தவறிய நேரத்தில் நாக்பூர் தலைவா்கள் பேசத்தொடங்க மேலும் ஒன்றை ஒன்றோடு இணைக்கப்படுகிறது.
மோடியின் நான் தான் கட்சி – நான்தான் ஆட்சி நான் தான் அனைத்தும் (மே மே மே- நான் நான் நான்) என்ற பேச்சு கட்சியை கடுமையாக சேதப்படுத்தியுள்ளது. மோடியிடம் அனைத்து அதிகாரம் குவியும்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கே ஆபத்தை உணரவில்லையா என்ற கேள்வி எழுகிறது.
‘அயோத்தியில் (ஜன 22) ராமன் சிலையின் பிராணப் பிரதிஷ்டை நடக்கும்போது வேறு தலைவா்கள் இல்லை. பிரதமா் மோடியுடன் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் மட்டுமே இருந்தார். ஆனால், இது நெருக்கத்திற்கான அடையாளமல்ல. பொதுவாக ஆா்எஸ்எஸ் அன்றாட அரசியல் விவகாரங்களில் இருந்து விலகியிருக்கவே விரும்பும். ஆட்சியிலோ, நிர்வாகத்திலோ தலையிடுவதில்லை. ஆா்எஸ்எஸ் ஒரு கருத்தியல் வழிகாட்டி. பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ்.ஸிலிருந்து அனுப்பப்பட்டவர் தான். கடந்த 10 ஆண்டுகளாக கட்சி மற்றும் அமைப்பிற்கு இடையே பெரிய அளவிலான முட்டல் மோதல்கள் இல்லை – மோடியை விருப்பம் போல் இயங்கவிட்டுப் பார்த்தது.
காரணம் வாஜ்பாய் போல் இளக்கமான நிலையில் இல்லாமல் நான் என்ற ஒரே கோட்டில் இருந்தார் மோடி. ஆகையால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு மோடியின் போக்கு நன்மையே என்று இருந்துவிட்டது. குறிப்பாக மோடி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்ததால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் அவர் போக்கில் விட்டுவிட்டது. 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்து அடுத்த தோ்தலை சந்திக்கும் முன்பு பாஜகவும் பிரதமா் நரேந்திர மோடியும் அடுத்தடுத்து ஆர்எஸ்எஸ்சின் பல சித்தாந்தங்களை, சிக்கல்கள் இன்றி செயல்படுத்தி முடித்தனர்.
காஷ்மீருக்கான சிறப்பு தகுதி ரத்து, ராமன் கோவிலுக்கான தடைகளை அகற்றியது, புதிய கல்விக்கொள்கை என பல அபிலாஷைகளை நிறைவேற்றி முடித்தது பாஜக அரசு. இது தவிர சில விவகாரங்களில் இரு தரப்பும் நெருக்கமாக இருந்தது. ஒரு மாநிலத்திற்கு ஆளுநரை நியமனம் செய்வதாகினும், ஒரு பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமனம் செய்வதாக இருந்தாலும் ஆா்எஸ்எஸ்ஸிடமிருந்து வரும் பரிந்துரைகளுக்கு பிரதமா் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். ஆனால் இந்த நியமன விவகாரங்கள் எல்லாம் பிரச்சினைக்கு உள்ளானது. ஆா்எஸ்எஸ் சிபாரிசு செய்த 10 துணை வேந்தா்களில் சிலா் ஊழல்களில் சிக்கினர். சிலா் பதவியை விட்டே சென்றனர். 2024 முடிவுகள் பா.ஜ.க.விற்கு சாதகமாக அமையவில்லை.இதற்கு காரணம் மோடியை தானாகவே இயங்கவிட்டதுதான் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் நினைக்கிறது.
ஆட்சியைப் பற்றிக் கவலைப்படாத ஆா்எஸ்எஸ் முன்னெப்போதும் இல்லாதவகையில் கட்சித் தலைமை விவகாரத்தில் கவலையுடன் இருப்பது குறித்தும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த தலைவா் யார் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறது. பாஜக தலைவராக கடந்த ஜனவரி மாதம் 6 மாதம் பதவி நீடிப்பு பெற்ற ஜெபி நட்டா வின் பதவிக்காலம் இந்த ஜூன் மாதத்தோடு நிறைவடைகிறது. அதே சமயத்தில் பாஜக வில் கட்சி தலைமை விவகாரத்தில் பிரதமா் மோடியும் அமித் ஷாவும் உடனடியாக கவனம் செலுத்தப்போவதில்லை என்கின்றனர்.
4 மாநில தோ்தல்களில் முழுக் கவனம் செலுத்த பாஜக பொறுப்பாளா்கள் குழு நான்கு ஒன்றிய அமைச்சா்கள் தலைமையில் போடப்பட்டுள்ளது. இந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்கு பின்னா் தான் கட்சித் தலைவா் யார் என்று முடிவு செய்யப்படும். ஆா்எஸ்எஸ் தலையிடுவதை கட்சி தடுக்காது. ஆனால் அடுத்த நான்கு ஆண்டு அரசு செயல் பட அதை கையாளக்கூடிய வகையில் உள்ள திறன் உள்ளவா் இருக்க வேண்டும்.
1980களில் ஆா்எஸ்எஸ், மோடியை பாஜகவுக்கு அனுப்பியது, அவரும் பிரதமரானார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பல்வேறு பிரிவுகளில் ஒன்றுதான் பாஜக, இதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மறைமுக கலாச்சார அமைப்பு தான் ஸநாதன் சன்ஸ்தா ஆகும். நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, கலபுர்கி, கவுரி லங்கேஷ் போன்றோரின் படுகொலைக்குப் பின்னால் கோவாவைத் தலைமையகமாக கொண்ட இந்த ஸநாதன் சாஸ்தா அமைப்புதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எப்போதுமே ஒப்புக்கொள்ளாது. எது எப்படியோ நாக்பூரில் இருந்துகொண்டு அகண்ட பாரதக் கனவு கண்டார்கள். குறைந்த பட்சம் நமது குருஜீ கூறிய மனுநீதிக்கு நிகரான அரசமைப்பு, காவிக்கொடி, பாரதம் மாநிலங்கள் இல்லாமல் ஒரே தலைமை டில்லி வழியாக நாக்பூர் என பெருமிதப்பில் இருந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு பேரிடியாக மோடியின் அதிகாரச்சறுக்கல் பார்க்கப்படுகிறது.
800 விவசாயிகள் மரணம், டில்லியில் இந்தியாவின் தங்க மங்கைகளின் கண்ணீர் போராட்டம், நாடு முழுவதும் கொடுமைப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள், சிறுமிகள், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரா, உத்தரப்பிரதேசம் போன்ற பகுதிகளில் இடிக்கப்பட்ட இஸ்லாமியர் குடியிருப்புகள், மணிப்பூரில் ஓராண்டிற்கும் மேலாக தொடரும் பேரவலங்கள், சரிந்து போன பொருளாதாரம், இமாலய உயரத்தைத் தொடும் வேலைவாய்ப்பின்மை போன்றவற்றை எல்லாம் 10 ஆண்டுகளாக வேடிக்கை பார்த்துவிட்டு கடைசி நேரத்தில் தங்களின் கனவுகள் மண்ணோடு மண்ணாகிவிட்டதே என்ற ஆத்திரம்தான் மோடியின் மீதான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிதற்றல் என்பதை சாமானியர்கள் நன்கு அறிவார்கள்.
நாடாளுமன்றத்தில் எதிரணிகள் அதிகாரப் பிரம்பை எடுத்துக்கொண்டு சென்று மோடியின் ஒவ்வொரு ஆணவப் பேச்சிற்கும் பதிலடி கொடுப்பார்கள். அந்த தழும்புகளை நாக்பூர் தலைமை தாங்குமா என்பதுதான் கேள்வி?