‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்’ என்ற, தந்தை பெரியார் அவர்களால் 1952ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு இயங்கி வந்த பொது அறக்கட்டளையின் நிரந்தரத் தலைவராக தந்தை பெரியார் – நிறுவனர் – ஆக இருந்து வந்தார். அவர்கள் மறைவுக்குப் பின்னர் பல முக்கிய பொறுப்பாளர்கள் அதன் தலைமைப் பொறுப்பேற்று சிறப்பான தொண்டறத்தைத் தொடர பேருதவி செய்தனர் – செய்து வருகின்றனர்.
அவ்வரிசையில் கடந்த பல ஆண்டுகளாக அதன் தலைவர் பொறுப்பில் தன்னலமற்றத் தொண்டறச் செம்மலாக இருந்து, அதனை வழி நடத்தும் மானமிகு தோழர் பொத்தனூர் க. சண்முகம் அவர்களுக்கு நாளை (2.7.2024) 102ஆவது ஆண்டு பிறந்த நாள். 75 ஆண்டு காலம் அவரை அறிந்தவன் நான்! நட்புறவு வாய்ப்பைப் பெற்றவர்.
தனது மாணவப் பருவம் தொட்டு, திருச்சி தேசிய கல்லூரிக் காலம் முதற்கொண்டு திராவிடர் கழகத்தில் தன்னை ஈடுபடுத்தி, தந்தை பெரியாரின் ஒப்பற்றத் தொண்டராக, எடுத்துக்காட்டானவராக (பரமத்தி) வேலூர் அருகே உள்ள அவரது ஊரிலும், சுற்று வட்டாரங்கள் – சேலம் மாவட்டத்திலும் பல கட்சியாராலும் பெரிதும் மதிக்கப்பட்ட பண்பாளர் ஆவார்! தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நம்பிக்கை – அன்பைப் பெற்றவர்!
ஊர் நலம், இன நலம், பொது நலம் தழைக்கத் தன் பணியை அமைத்து வாழ்பவர்.
102ஆம் ஆண்டைத் தொடுவதோடு நீண்ட காலம் ஓர் அறக்கட்டளைத் தலைவராகத் தொடரும் புதுமைச் சாதனையாளர் இவரே மட்டும்தான் இருப்பார்!
மேலும் பல்லாண்டு நல்ல உடல் நலத்தோடு வாழ்ந்து தொண்டறம் தொடர வாழ்த்துகிறோம்.
சென்னை
1.7.2024
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்