சென்னை, ஜூன்.28- சட்டமன்றத்தில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நேற்று (27.6.2024) சிறப்புதிட்டச் செயலாக்கத்துறை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:- அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மாவட்ட திறன் மய்யம் உருவாக்கப்படும். அரசின் முக்கிய திட்டங்களை கண்காணிக்க மாவட்ட அளவில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கண்காணிப்பு அலகு உருவாக்கப்படும்.
*வேலைவாய்ப்பினை எதிர்நோக்கும் இளைஞர்கள் பயன் பெறும் வகையில் ‘திறன் தமிழ்நாடு பள்ளிகள்’ என்ற திட்டம் ரூ.100 கோடியில் செயல்படுத்தப்படும். ‘நான் முதல்வன்’ திட்டத்தின் திறன் சார்ந்த 45 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் துணை மருத்துவ படிப்புகள் விரிவுப்படுத்தப்படும்.
* நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறந்த 1,000 மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து உயர்வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தர ‘சிகரம் தொடு’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
* பெண்கள் முறைசார்ந்த தொழில்கள் மற்றும் உயர்பணிகளில் ஈடுபடுவதற்கு ஏற்றவகையில் தமிழ்நாடு மகளிர் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்பு என்ற புதிய திட்டம் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு ரூ.1,185 கோடியில் செயல்படுத்தப்படும். அதில் இந்தாண்டு ரூ.168 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் மகளிருக்கு தரமான வேலை வாய்ப்பு திட்டம், மகளிர் தகவல் வங்கி, 8 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் ‘மாணவிகளின் திறன் கண்டறிய திறமை மதிப்பீட்டு தளம், பள்ளி பருவத்திலேயே தொழில் முனைவோர் பாடத்திட்டம், அரசு கல்லூரி மாணவிகளுக்கு தொழில் துறை சார்ந்த பணியிட பயிற்சி, மகளிர் தொழில் பயிற்சி நிலையங்களில் அறிவியல் மற்றும் கணித மய்யங்கள், பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களில் மாதிரி மழலையர் காப்பகங்கள், முதியோர்களை பராமரிக்க முதியோர் சமூக மய்யங்கள் உருவாக்கப்படும்.